Monday, January 5, 2015

இராமாயணம் - தாரையின் பேச்சு நயம்

இராமாயணம் - தாரையின் பேச்சு நயம் 


கோபமாக வந்த இலக்குவனை வழி மறித்த தாரை பேசத் தொடங்குகிறாள்.

அவ்வளவு அருமையாகப் பேசுகிறாள். ஒவ்வொருவரும் அதை இரசித்து பின் அதை பயில வேண்டும். இப்படிப் பேசப் பழகினால் வாழ்க்கை மிக இன்பபமாக இருக்கும்.

பேசத் தெரியாமல் தானே இவ்வளவு துன்பப் படுகிறோம்.

முதலில் கோபமாக வந்த இலக்குவனின் கோபத்தை மாற்ற வேண்டும். பின், அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். பின், அவன் நினைத்து வந்ததை  அவனே செய்ய முடியாமல் செய்ய வேண்டும்.

நாமாக இருந்தால் என்ன சொல்லி இருப்போம்

"என்ன லக்ஷ்மணா ரொம்ப கோபமாக இருக்கிறாய் போலிருக்கிறது. என்ன விஷயம் சொல்லு " என்று ஆரம்பித்து இருப்போம்.

உடனே அவனும், இன்னும் சூடாகி "என்ன விஷயம்னு உனக்குத் தெரியாதா, தெரியாத  மாதிரி கேட்கிறாய் " என்று விவாதம் வலுத்து இருக்கும்.


தாரை அந்த வழியில் செல்லவில்லை. அவள், அவனின் கோபத்தை ஒரு பொருளாகவே மதிக்கவில்லை. அவனைப்  புகழ்கிறாள்.  

"நாங்கள் எவ்வளவோ காலம் செய்த தவத்தின் பயனாக நீ இங்கு வந்து இருக்கிறாய். இந்திரர்களுக்கும் எட்டாத செல்வம் உன்னை காணக் கிடைப்பது.  உன்  பாதம் எங்கள் மனையில் பட நாங்கள் என்ன வரம் பெற்றிருக்க வேண்டும். உன்னால் நாங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இதுவரை செய்த வினை எல்லாம் தீர்ந்தது. இதை விட வாழக்கைக்கு வேறு என்ன வேண்டும் "

பாடல்

'அந்தம் இல் காலம் நோற்ற
      ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோரால் எய்தல்
      ஆம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம்
     மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி
      வேறு இதனின் உண்டோ?

பொருள்

'அந்தம் இல் = இறுதி இல்லாத. மிக நீண்ட.

காலம் = காலம்

நோற்ற ஆற்றல் = செய்த தவத்தால்

உண்டாயின் அன்றி = வந்ததே இல்லாமல்

இந்திரன் முதலினோரால் = இந்திரன் உள்ளிட்ட தேவர்களால்

எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே? = அடைய முடியாத ஒன்று அல்லவா இது

மைந்த! = மைந்தனே

நின் பாதம் கொண்டு = உன் பாதம்

எம் மனை வரப் பெற்று = எங்கள் வீட்டிற்கு வந்ததால்

வாழ்ந்தேம்; = நாங்கள் வாழ்வு அடைந்தோம்

உய்ந்தனம்; = எங்களுக்கு ஒரு வழி பிறந்தது

வினையும் தீர்ந்தேம்; = எங்கள் தீ வினைகள் யாவும் சென்று மறைந்தன

உறுதி வேறு இதனின் உண்டோ? = இதை விட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்.


நடுவில் , மைந்தனே என்று அவனை அழைக்கிறாள். அப்படி என்றால் நான் உனக்கு அம்மா  மாதிரி என்று சொல்லி விடுகிறாள். 

"நீ எவ்வளவு பெரிய ஆள். நீ வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமா ?   நீ தான்  எங்கள் வாழ்வே " என்று அவன் வரவை நல்வரவாக்குகிறாள் தாரை. 

இனி, அவன் என்ன செய்ய முடியும் ?

அது மட்டும் அல்ல, இலக்குவனை அந்த இடத்தில் இருந்து ஓட ஓட விரட்டுகிறாள் தாரை  ...தன் சொல்லால். 

தான் வந்ததே தவறு என்று அவனை நினைக்கும் படி செய்கிறாள்....

எப்படி ?


1 comment: