Sunday, January 25, 2015

இராமாயணம் - தாரையின் சொல்வன்மை - இசையினும் இனிய சொல்லாள்

இராமாயணம் - தாரையின் சொல்வன்மை - இசையினும் இனிய சொல்லாள் 


வள்ளுவனும் சரி, கம்பனும் சரி சொல்லுக்கு மிக மிக முக்கியத்வம் தந்து இருக்கிறார்கள்.

கோபத்தோடு வந்த இலக்குவனைப் பார்த்து தாரை பேசுகிறாள். அவள் பேசியது  இசையை விட இனிமையாக இருந்ததாம். அப்படி இனிமையாக இருந்தால் யார் தான் மயங்க மாட்டார்கள் ?

தாரை சொல்கிறாள் ..

"நீ சீற்றத்தோடு வருவதைக் கண்ட வானர சேனைகள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றன. உன் உள்ளத்தில் உள்ளது என்ன என்று எங்களிடம் சொல்லுவாய். நீ இராமனை விட்டு எப்போதும் பிரியமாட்டாயே, எப்படி இங்கு தனியாக வந்தாய் " என்று கேட்கிறாள்.

பாடல்

‘வெய்தின் நீ வருதல் நோக்கி,
    வெருவி நின் சேனை வீரர்,
செய்திதான் உணர்கிலாது,
    “திருவுளம் தரெித்தி “ என்றார்;
ஐய! நீ ஆழிவேந்தன்
    அடியிணை பிரிகலாதாய்
எய்தியது என்னை? ‘என்றாள்
    இசையினும் இனிய சொல்லாள்.

பொருள் 


‘வெய்தின் = சீற்றத்தோடு

நீ = நீ

வருதல் நோக்கி = வருவதைப் பார்த்து

வெருவி நின் = அஞ்சி நின்றனர் 

சேனை வீரர் = சேனை வீரர்

செய்திதான் உணர்கிலாது = செய்தியை உணராது

"திருவுளம் தெரித்தி  “ என்றார்; = உன் உள்ளத்தை தெரிவிக்க வேண்டும்

ஐய! = ஐயனே

நீ = நீ

ஆழிவேந்தன் = இராமனின்

அடியிணை = திருவடிகளை

பிரிகலாதாய் = பிரிய மாட்டாயே

எய்தியது என்னை?  = எப்படி வந்தாய் வந்தாய்

என்றாள் = என்றாள்

இசையினும் இனிய சொல்லாள் = இசையினும் இனிய சொல்லாள்

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,

1. முதலில் இராமனும் இலக்குவனும் சீதையை தனியே விட்டு விட்டு சென்றதால்,சீதையை இழந்தார்கள். இப்போது, இலக்குவன் இராமனை தனியாக விட்டு விட்டு வந்து இருக்கிறான். ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து  வந்து விட்டால் என்ன செய்வது என்று இலக்குவனிடம் கூறுகிறாள். அதாவது, நீ இப்படி வந்திருக்கக் கூடாது , ஓடு என்று  சொல்லமால் சொல்கிறாள்.

2. அவன் கோபத்தை மாற்றி, அவன் சிந்தனையை வேறு திசையில் திருப்புகிறாள்.

3. சீதையை தேட உதவி செய்வதாக சுக்ரீவன் சொல்லி இருக்கலாம். அது இந்த வானர வீரர்களுக்குத் தெரியாது. எனவே, நீ இவர்களின் செயலை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே என்றும் கூறுகிறாள்.





1 comment:

  1. கோபத்தோடு வந்தவனுக்கு இராமனை நினைவுபடுத்துவது நன்றாக இருக்கிறது.

    ReplyDelete