Thursday, January 8, 2015

பெரிய புராணம் - அலகில் சோதியன்

பெரிய புராணம் - அலகில் சோதியன் 


இறைவன் இருக்கிறானா என்ற சர்ச்சை இருந்து கொண்டே  இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று நம்பிய பெரியவர்கள் அவனை சொல்லுவதற்கு படாத பாடு படுகிறார்கள்.

நாம் அறிவியல் படிக்கும் போது எதை ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவை கண்டு கொள்ள ஒரு அலகு (unit ) வேண்டும்.

நேரம் என்றால் நொடி, வினாடி,  நிமிடம்,மணி
தூரம் என்றால் மில்லி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர்
எடை என்றால் கிராம், கிலோ கிராம்

இப்படி எதை எடுத்தாலும் அதற்கு என்று ஒரு அலகு உண்டு.

இறைவனை எப்படி அளந்து சொல்லுவது ?

இவ்வளவு உயரம், இவ்வளவு எடை, இன்ன நிறம், என்று ஒன்று இருந்தால் சொல்லி விடலாம்.

மனிதனின் அளவுக்குள் அடங்குபவனா அவன் ?

எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை...

தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்லுகிறார்

"அலகில் சோதியன்" அலகு என்று ஒன்று இல்லாதவன். அவனை எந்த விதத்திலும் அளந்து சொல்ல முடியாது.


பாடல்

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அலகில்லாத ஒன்றை உங்களால் சிந்திக்க முடியுமா ?

எதை அளக்க முடியுமோ  அது இறை அல்ல.

சிலை, படம், இவை எல்லாம் அளந்து செய்தது.

அவன் அலகில் சோதியன்


1 comment:

  1. இதுவரை நான் "அலகு" என்பதன் பொருள் பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை! நன்றி.

    ReplyDelete