Saturday, February 28, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை 


குள்ளச்சாமி மூன்று பொருள்களை பாரதிக்கு காட்டினான்.

குட்டிச் சுவர்
சூரியன்
கிணற்றில் சூரியனின் நிழல்
அவ்வளவுதான் உபதேசம். புரிந்ததா என்று  கேட்டார்,பாரதியும் புரிந்தது என்றார். குள்ளச் சாமி சந்தோஷமாக போய்  விட்டார்.

நாம் தான் மண்டை காய்கிறோம்.

நம் நிலை தெரிந்து பாரதி அதை  விளக்குகிறார்.

குரு சொன்னதை மற்றவர்களுக்குச் சொல்லக்  கூடாது என்று ஒரு விதி உண்டு. காரணம், சீடனின் தகுதி பார்த்து உபதேசம் செய்ய வேண்டும்.

தகுதி இல்லாதவனுக்கு உபதேசம் செய்தால் அவன் உபதேசத்தை கீழ்மை படுத்துவான்.

ஒரு ஆரம்ப பள்ளி மாணவனுக்கு இயற்பியலின் உயர் விதிகளை சொல்லிக் கொடுத்தால் அவன் அதைக் கேட்டுச் சிரிப்பான். தன் நண்பர்களிடம் சொல்லி சொல்லி அதை ஏளனம் செய்வான். அவனுக்குப் புரியவில்லை என்பது அவனுக்குப் புரியாது. ஏதோ நகைச்சுவை என்று நினைத்து ஏளனம் செய்வான்.

எனவேதான், தகுதி இல்லாதவர்களுக்கு உயர்ந்த விஷயங்களை  சொல்லித் கூடாது என்று வைத்தார்கள்.

இந்த நாட்டில் கம்ப இராமயணத்தை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. அதன் உயர்வு புரியாதவர்கள் நினைத்த தவறு அது.


முதன் முதலில் இராமானுஜர் அந்த விதியை  உடைத்தார்.தான் அறிந்த உண்மையை எல்லோரும் அடைய வேண்டும் என்று கோவில் கோபுரத்தில் ஏறி ஊருக்கே உபதேசம்  செய்தார்.   சீடன் யார் என்றே தெரியாமல் உபதேசம் செய்தார்.

அடுத்து பாரதியார், தான் பெற்ற உபதேசத்தை ஊருக்கே சொல்லிச்  செல்கிறார்.



தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;


தேசிகன் காட்டி எனக்கு உரைத்த செய்தியை செந்தமிழில் உலகத்தார் உணரும் படி சொல்கின்றேன்.

ஏன் சொல்ல வேண்டும் ? தனக்கு கிடைத்ததை தான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது தானே ? அதுதான் அவரின் பெரிய உள்ளம்.



“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;

அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி ?  வாசி என்றால் சுவாசம்.

நாம் உயிர் வாழ்வது, சிந்தனை செய்வது, செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. மூச்சு நின்றால் எல்லாம் அடங்கி விடும்.

இந்த மூச்சு மூன்று விதமாக  வெளிப்படும்.

இடது நாசியின்  வழியே ஓடும் மூச் சந்திரக் கலை எனப்படும்.
வலது நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் கலை எனப்படும்
இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை எனப்படும்.

சுவாசம் இடது நாடியில் ஓடும் போது என்ன செய்ய வேண்டும், வலது நாடியில் ஓடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள். இரண்டு நாடியிலும் ஓடும் போது செய்யக் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

குள்ளச் சாமி சொன்ன செய்தி "சுவாசத்தை கட்டுப் படுத்தி, மண் போல சுவர் போல வாழ வேண்டும்"

அது என்ன மண் போல சுவர் போல வாழ வேண்டும்.

மண்  இயற்கையானது. மண்ணைச் சேர்த்து குழைத்துக் கட்டியது சுவர். சுவர் செயற்கையானது.  மண் என்றும் இருக்கும். சுவர் இன்று இருக்கும், நாளை போகும். சுவரை இடித்தாலும் மண் அப்படியே தான் இருக்கும்.

மண்ணிற்கு என்ன இயல்பு - பரவுவது. குவித்து வைத்தாலும் நாளடைவில் தானே பரவி விடும்.

என்றும் , எப்போதும் சாஸ்வதமாக உள்ள ஒன்றைப் பிடி  என்கிறார்.

உலகில் உள்ள பொருள்கள்,  இன்பங்கள், உறவுகள் எல்லாம் மறையும் இயல்பு  உடையன. மண் எது சுவர் எது என்று கண்டு வாழ் என்பது இரண்டாவது உபதேசம். (மூச்சுப் பழக்கம் முதல் உபதேசம் )



தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;

இது மூன்றாவது உபதேசம். ஒளி உடைய சூரியனை கிணற்றுக்குள்ளே பார்ப்பது போல உனக்குள்ளே சிவனை காண்பாய்.

இறைவன் மிகப் பெரியவன். அவன் எப்படி எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க முடியும். இந்த உயிர்கள் நேற்று  தோன்றி,இன்று இருந்து, நாளை போபவை. இதற்குள்  எப்படி அனாதியான இறை சக்தி இருக்க முடியும் ?

அதை விளக்குகிறார் குள்ளச் சாமி.

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோ இருப்பது. கிட்ட போக முடியாது. ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும்.

கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

எந்த கிணற்றில் ? சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம்  தெரியும்.பாழடைந்த வீட்டின் கொல்லையில் உள்ள கிணற்றில் சலனம் இல்லை. அதில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

அது போல, நம் உள்ளம் சலனம் இல்லாமல்  இருந்தால், நம் உள்ளத்திலும் சிவன்  தெரியும். ஆசை, கோபம், காமம் என்று பலப் பல சலனங்கள். எங்கே சிவனைக் காண்பது.

சரி இதை எல்லாம் ஏன் குள்ளச் சாமி தெளிவாக சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் நமக்கு சந்தேகம் வராது இல்லையா ?

அதைத்தான் அடுத்த வரியில் சொல்கிறார் பாரதியார் ...


பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

பேசுவதில் பயனில்லை. 

பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சு நிற்க வேண்டும். 

கேள்விகள் நிற்க வேண்டும். 

மௌனம் வர வேண்டும்.

மௌனம் ஞான வரம்பு என்பார்  ஒளவையார். மௌனம் ஞானத்தின் எல்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றால்  மணிவாசகர்.

"சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார். 

படிப்பது,  கேட்பதும், பேசுவதும், கேட்பதும் நின்று ...அனுபவத்தால் அறிய வேண்டும். 

அதுவே ஞானம் என்கிறார் பாரதி. 

உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ?

உண்மையை நேரடியாக உணருங்கள். 



Friday, February 27, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் 


குள்ளச் சாமியை துரத்திக் கொண்டு வந்த பாரதி அவரை அருகில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தில் மடக்கிப் பிடித்தார்.

சரி இவன் நம்மை விடமாட்டான் போல் இருக்கிறது என்று அறிந்த கொண்ட அந்த குள்ளச் சாமி, இவன் ஒரு நல்ல சீடன்...இவனுக்கு உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்று உபதேசம்  செய்கிறார்.

அருகில் இருந்த குட்டிச் சுவரைக் காட்டினார், பின் சூரியனைக் காட்டினார், அப்புறம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து அந்த சூரியனின் நிழலைக் காட்டினார்...இந்த மூன்றையும் காட்டி விட்டு "என்ன புரிந்ததா?" என்று கேட்டார்.

"புரிந்தது " என்றார் பாரதி.

குள்ளச்சாமியும் மகிழ்வுடன் சென்று விட்டார்.

வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் என்கிறார் பாரதி.

பாடல்

குள்ளச் சாமியும் சந்தோஷமாக 
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

சரி, இது என்ன உபதேசம் ?

குட்டிச் சுவர், சூரியன், பழைய கிணறு...இந்த மூன்றையும் காட்டி  என்ன புரிந்ததா  என்று கேட்டார், பாரதியும் புரிந்தது என்றார். மொத்தம் அவ்வளவுதான் உபதேசம்.

நமக்கு ஏதாவது புரிகிறதா.

தலை சுற்றுகிறது அல்லவா ?

பாரதி இந்த மூன்றின் விளக்கம் தருகிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விளக்கம்.

பாரதியின் அறிவின் வீச்சை நாம் அறிந்து கொள்ள உதவும் பாடல்.

எவ்வளவு பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

நாம் வாழும் காலத்திற்கு மிக அருகில் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் பெருமை அறியாமல் இருக்கிறோம்.

பாரதியின் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.


திருக்குறள் - பொறாமை என்ற பாவி

திருக்குறள் - பொறாமை என்ற பாவி 


பொறாமை என்ற ,ஒரு பாவி , நம் செல்வத்தை அழித்து நம்மை  நரகத்தில் செலுத்தி விடும்.



பாடல்

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

பொருள்

அழுக்காறு = பொறாமை

என ஒரு = என்ற ஒரு

பாவி = பாவி

திருச் செற்று = செல்வத்தை அழித்து

தீயுழி = தீக் குழியான நரகத்தில்

உய்த்துவிடும் = செலுத்தி விடும்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான்.

மிக மிக ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் . சற்றே விரிவாகப் பாப்போம்.

பொறாமை என்றால் என்ன ?

மற்றவர்கள் பெற்றதைக் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இன்மை.

மனிதனுக்கு எத்தனையோ கெட்ட குணங்கள் உண்டு - காமம், கோபம், லோபம், சோம்பேறித்தனம், பொய்மை என்று எவ்வளவோ இருக்கும் போது  ஏன்  பொறாமையை மட்டும் வள்ளுவர் இப்படி சொல்லுகிறார் ?

மற்ற குணங்கள் வரும், சற்று நேரத்தில் போய் விடும். நேரத்தில் அல்லது காலத்தில்  போய் விடும்.

பொறாமை என்ற தீக் குணம் வந்து விட்டால் அது போகவே போகாது.

கோபம் எவ்வளவு நேரம் இருக்கும் ?

காமம் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும் ?

எவ்வளவு நேரம் பொய் செல்ல முடியும் ?

ஆனால் பொறாமை வந்து விட்டால் அது போகவே போகாது. இரவு படுக்கையிலும்  வந்து தூக்கத்திலும் அரிக்கும். அவனுக்கு அவ்வளவு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று தூங்க விடாது.

அது மட்டும் அல்ல,

ஒரு தீயவனோடு நாம் உறவு கொண்டால் என்ன ஆகும் ? முதலில் நம்மை அவன் தீய  வழியில் செலுத்துவான். அவன் வழியில் போய் நாம் நம் செல்வங்களை இழப்போம்.  செல்வத்தை இழந்த பின் பயம் வரும், எதிர் காலம் பற்றி, பணம் இல்லாவிட்டால் என்ன ஆவோம் என்ற பயத்தில் அந்த செல்வத்தை  எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைப்போம், எந்த வழியானாலும்   சரி, விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்று மேலும் பல தீய வழியில் முயன்று பாவங்களைச் செய்து மறுமைக்கும் பாவம் தேடிக் கொள்வோம்.

அது  போல,பொறாமை வந்து விட்டால்,


மற்றவனை விட நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும்,  செல்வம் சேர்க்க வேண்டும், நம் பிள்ளையை உயர்த்த வேண்டும் என்று பல குறுக்கு வழிகளை சிந்திப்போம், தவறான பாதையில் போனால் செல்வம் அழியும். அது மேலும்  பொறாமைக்கு  வித்திடும்...தவறான பாதை போய் தீய பாதையில் போகத் தலைப் படுவோம்....இலஞ்சம் கொடுக்கலாமா, அவனை எப்படி கவுக்கலாம் என்று மனம் கணக்கு போடும், அவனைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம்  பேசச் சொல்லும், அவனுக்கு வரும் நல்ல  பெயரை, வாழ்வை தடுக்க திட்டம்   போடும்....அதக்காக செலவு செய்யும் மனம்.

பணம் போகும்

தவறான  செய்ததால் பாவம் வந்து சேரும்....அதனால் நரகம் கிடைக்கும்.

நரகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை, இந்த வாழ்கையே தீயில் கிடந்து  கருகுவதைப் போல இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாவியைக் கண்டால் எப்படி நாம் பயந்து விலகுவோமோ அப்படி பொறாமையைக் கண்டு  விலக வேண்டும்.

எல்லோரும் பாவியைக் கண்டு விலகினால் அந்த பாவி எப்படி உயர்வான் என்று கேட்டு  அந்த பாவியோடு சகவாசம் வைத்து கொள்பவர்கள் வைத்துக் கொள்ளட்டும்.

நீங்கள் சுகப் படவேண்டும் என்றால், தீயவர்களை விட்டு விலகுங்கள்.

அதே போல பொறாமை என்ற குணத்தையும் விட்டு விலகி இருங்கள்.

பொறாமை வந்து விட்டால் இருக்கும் செல்வமும் போய் , நரகமும் வந்து சேரும்.

சரி, இந்த பொறாமை வாராமல் எப்படி நம்மை காத்துக் கொள்வது ?

அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர்.





Thursday, February 26, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4


பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், ஒரு நாள் தெருவில் , ஞானியைப் போல தோன்றும் ஒரு குள்ள மனிதனைக்  கண்டார்.ஏனோ அந்த மனிதனின் மேல் பாரதியாருக்கு ஒரு ஈர்ப்பு.

அந்த குள்ளச் சாமியின் கையை பற்றிக் கொண்டு "நீ யார் " என்று கேட்டார்.

அப்போது அந்த குள்ளச் சாமி, பாரதியின் கையை உதறி விட்டு ஓட்டம் பிடித்தான். பாரதியும்  விடவில்லை.அந்த குள்ளச் சாமியின் பின்னாலேயே  ஓடுகிறார்.

இரண்டு பெரிய ஞானிகள் செய்யும் வேலையா இது என்று நமக்கு வியப்பு வரும்.

ஓடிய குள்ளச் சாமி, அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தை அடைந்தான்.  பாரதியும்  அங்கே சென்று அந்த குள்ளச் சாமியை மடக்கிப் பிடித்தான்.

பாடல்


பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்

பொருள்

பற்றிய கை திருகி அந்த குள்ளச் சாமி , பரிந்தோடப் பார்த்தான், நான் விடவே இல்லை.

சுற்று முற்றும் பாத்து, பின் புன் முறுவல் பூத்தான் அந்த குள்ளச் சாமி.

அவனுடைய தூய்மையான தாமரை போன்ற இரண்டு பாதங்களைக் கண்டேன்.
குற்றம் இல்லாத அந்தக் குள்ளச் சாமியும், கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்த வீட்டின் கொல்லைப் புரத்தை அடைந்தான்.

அவன் பின்னே நான் ஓடிச் சென்று அவனை மறித்துக் கொண்டேன்

......


அதன் பின் அங்கு என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

குள்ளச் சாமி பாரதிக்கு ஞான உபதேசம்  செய்தான்.

என்னென்ன செய்திகள் சொல்லி இருப்பார், எவ்வளவு நேரம் சொல்லி இருப்பார்,  வேதம், புராணம், இதிகாசம் இவற்றில் இருந்து எல்லாம் எடுத்து அறங்களை  சொல்லி இருப்பார் இல்லையா ?

சிந்தித்துக் கொண்டிருங்கள்...

குள்ளச் சாமி என்ன சொன்னார் என்று நாளை பார்ப்போம்....


திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?


எதற்கும் ஒரு குறிக்கோள், காரணம் இருக்க வேண்டும். காரியம் ஆன பிறகும் காரியம் செய்து கொண்டு இருக்கக் கூடாது.

ஓட்டப் பந்தயம் முடிந்து, எல்லைக் கோட்டை தொட்டு விட்டால், ஓடுவதை நிறுத்த வேண்டும். அப்புறமும் ஓடிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.

சேர வேண்டிய ஊர் வந்து விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டும். அப்புறமும் போய்க் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.

வாழ்வின் அர்த்தம் என்ன ? குறிக்கோள் என்ன ? எதை அடைய இந்த வாழ்க்கை முயல்கிறது ? பணமா ? புகழா ? அறிவா ? உறவா ?  அல்லது இது எல்லாமுமா ? எவ்வளவு வேண்டும் ? எப்போது நிறுத்துவது ?

மாணிக்க வாசகர் சொல்கிறார் .... இறை அருள் பெறுவது தான் இந்த வாழ்வின் நோக்கம். அதை அடைந்து விட்டால் பின் வாழ்வில் அர்த்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்.

சில காதலர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும்...இந்த நொடி நான் அப்படியே செத்துரலாம் போல இருக்கு என்று சந்தோஷமாக சொல்லுவார்கள். மகிழ்வின் உச்சம்.

(முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு...முதல்வன் பாடல்)

இது போதும், இதுக்கு மேல் எதுவும் வேண்டாம். இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது என்ற உன்மத்தம் வந்து விடுகிறது.

அருள் பெற்ற அடிகள்...உன்மத்த நிலையில் இறைவனைப் பற்றி பேசித் திரிகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.  அவரைப் பற்றி தங்கள் மனதுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள்.

அதைப் பற்றியெல்லாம் அடிகள் கவலைப் படவில்லை. "சாவது எந்நாளோ" என்று  கேட்கிறார்.

பாடல்

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?


பொருள்

உத்தமன் = உயர்ந்தவன்

அத்தன் = முதல்வன், தந்தை, ஆதியானவன்

உடையான் = உடையவன்

அடியே நினைந்து உருகி = அவனுடைய திருவடிகளை நினைத்து உருகி

மத்த மனத்தொடு = களிப்பு கொண்ட மனத்தோடு

`மால் இவன்' என்ன = இவன் (மனிவாசாகர் ) மயக்கம் உற்றவன் என்று

மன நினைவில் = மன நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட = என் (மணிவாசகர்) மனதில் தோன்றிய , ஒத்த கருத்துகளை கூறிட

ஊர் ஊர் திரிந்து = ஊர் ஊராகத் திரிந்து

எவரும் = எல்லோரும்

தம் தம் மனத்தன பேச = அவர்கள் மனதில் தோன்றியதைப் பேச

எஞ்ஞான்று கொல் = எப்போது

சாவதுவே? = இறப்பது ?


இறைவனை நினைத்து அவர் மனம் உருகுகிறது. 

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி. 

உருகிய மனத்தில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

அந்த களிப்பில் ஏதேதோ  சொல்லுகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் சொல்கிறார்கள். 

ஒரு புறம் உண்மை கண்ட களிப்பு. மற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் முடியவில்லை. அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் மேல் பற்று சுத்தமாக இல்லை. 

இருந்து என்ன செய்ய ?

எப்போது இறப்பது என்று வினவுகிறார். 

இது போன்ற பாடல்களுக்கு உரை படித்து புரிந்து கொள்ள முடியாது. 

உரையைப் படித்த பின்,  அதை மறந்து விடுங்கள். 

நேரடியாகப் பாடலைப் படியுங்கள்.  

மனதை என்னவோ செய்யும். அதுதான் அந்தப் பாடலின் உண்மையான அர்த்தம். 

 

Wednesday, February 25, 2015

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை 


இந்திரன் வாழும் இந்திர லோகம்,  திருமால் வாழும் பரம பதம், பிரம்மா வாழும் சத்ய உலகம் இது எல்லாம் கிடைத்தாலும் வேண்டாம்.

சரி, இது எல்லாம் வேண்டாம், என்ன தான் வேண்டும் ? வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ? இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்...இது எல்லாம் வேண்டாம்...நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை...

இது என்னடா புதுக் குழப்பம்.  வைகுண்டம் வேண்டாம், நரகம் வேண்டும் என்கிறாரே இந்த மணிவாசகர்.

"இறைவா, உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம்" என்கிறார்.

இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை.

என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு சேர மாட்டேன் என்கிறார். அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை.

தீயவரே ஆயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறுவான். அது எப்படி தீயவர்களை நட்பாக கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. சுக்ரீவனின் நண்பன் தீயவனாக இருக்க மாட்டான் என்பது இராமனின் நம்பிக்கை.

 பாடல்


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

பொருள்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு = புரந்தரன் என்றால் இந்திரன். மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா. அவர்களின் வாழ்வே கிடைத்தாலும் கொள்ள மாட்டேன். 


குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்;  = என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதோரோடு சேர மாட்டேன்


நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்;= உன் திருவருள் இருக்கப் பெற்றால், நரகமே கிடைத்தாலும் இகழ மாட்டேன்


இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; = உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் 


எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே

இறை அருள் போதும். வேறு எதுவும் வேண்டாம். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று  கூறுகிறார்.

வழி இருக்கிறது. நமக்கு போகத்தான் மனம் இல்லை.



பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3


பாரதியார், அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீ யார்" என்று கேட்கிறார்.

பாடல்

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பொருள்

நீ யார். உனக்கு உள்ள திறமை என்ன ? நீ என்ன உணர்வாய் ? ஏன் கந்தை சுற்றி திரிகிறாய் ? தேவனைப் போல ஏன் விழிக்கிறாய் ? சின்ன பையன்களோடும் நாய்களோடும்  ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் ? புத்தனைப் போல இருக்கிறாயே நீ யார் ? பரம சிவன் போல இருக்கிறாய் ....ஆவலோடு நிற்கிறாய் ....நீ அறிந்தது எல்லாம் எனக்கு உணரத்த வேண்டும்

என்று பாரதியார் அவனை வேண்டுகிறார்.

நாம் அறிவை சேர்ப்பது பொருள் தேட, சுகம் தேட, மேலும் அறிவைத் தேட.

நம் அறிவை நாம் எதற்கு உபயோகப் படுத்துகிறோம் ?

யாருக்கோ பயன் படுத்துகிறோம்.  அவர் நமக்கு சம்பளம் தருகிறார். நாம் படித்தது  அத்தனையும் பொருள் தேடவே சென்று விடுகிறது. பொருள் தேடுவதைத் தவிர   வேறு ஏதாவது நாம் செய்கிறோமா நம் அறிவை வைத்து.

குள்ளச் சாமி, பெரிய ஞானி. பாரதி குரு என்று ஏற்றுக் கொண்ட ஞானி. அவர் கந்தை  கட்டி அலைகிறார்.

பெரிய ஆட்களோடு சகவாசம் இல்லை....சின்னப் பையன்களோடும், நாய்களோடும்  விளையாடுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடு ! பொருள் மேல் பற்று இல்லை. அறிவின் மேல் பற்று இல்லை.  உறவுகளின் மேல் பற்று இல்லை. ஒரே விளையாட்டு தான்...


Tuesday, February 24, 2015

இராமாயணம் - நயனங்கள் பனிப்ப நின்றான்

இராமாயணம் - நயனங்கள் பனிப்ப நின்றான் 


வாக்கு தவறிய சுக்ரீவனை கண்டு எச்சரிக்க கோபத்தோடு வந்த இலக்குவன் முன் பகலில் வந்த நிலவு போல தாரை வந்து நின்றாள்.

கழுத்தில் தாலி இல்லை, வேறு ஒரு அணிகலன்கள் எதுவும் அணியவில்லை, பூ சூடவில்லை, குங்குமம் இல்லை, கழுத்து வரை உடலை முழுவதும் போர்த்து ஆடை அணிந்து கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட இலக்குவனின் கண்கள் நீரை வார்த்தன.

பாடல்

மங்கல அணியை நீக்கி,
    மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி,
    குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக்
    கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்,
    நயனங்கள் பனிப்ப நின்றான்.


பொருள் 

மங்கல அணியை நீக்கி = மங்கல அணியான தாலியை நீக்கி

மணி அணி துறந்து = உயர்ந்த மணிகள் சேர்ந்த அணிகலன்களை துறந்து

வாசக் கொங்கு அலர் கோதை மாற்றி = வாசம் உள்ள மலர்கள் கொண்ட மாலையை அணியாமல்

குங்குமம் சாந்தம் கொட்டாப் = குங்குமச் சாந்தை பூசாத

பொங்குவெம் முலைகள் = பொங்கும், வெம்மையான முலைகள்

 பூகக் கழுத்தொடு = மறையும் படி கழுத்துவரை

மறையப் போர்த்த = மறையும் படி ஆடையைப் போர்த்து

நங்கையைக் கண்ட வள்ளல் = பெண்ணைக் கண்ட வள்ளல்

நயனங்கள் பனிப்ப நின்றான் = கண்கள் நனையும் படி நின்றான்

ஒரு ஆண் , அழகான பெண்ணைப் பார்க்கும் போது அவனுள் என்னவெல்லாம் நிகழலாம்  என்று கம்பன் பல இடங்களில் காட்டுகிறான்.

சீதையை கண்ட இராமன்,
அகலிகையைக் கண்ட இராமன்,
தாரையைக் கண்ட இலக்குவன்,
சீதையைக் கண்ட இராவணன்

ஒரு அழகான பெண்ணை கண்டது இராம, இலக்குவ, இராவணனின் மனம் எப்படி வேலை செய்கிறது என்று கம்பன் காட்டுகிறான்.


பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2 


புதுவை நகரில் பாரதியார் இருந்த காலம். உபநிடதங்களில் தமிழாக்கத்தை திருத்திக் கொண்டிருந்த ஒரு மதிய வேளை. யாரும் இல்லாத் தெரு. அங்கே குள்ளமாக ஒரு ஆள் வந்தான். பார்த்தால் அழுக்கு நிறைந்து, ஒரு குப்பை கோணியை சுமந்து வருகிறான். அவன் கண்ணில் ஒரு ஒளி . அவன் தான் தன் குரு என்று பாரதி கண்டு கொள்கிறான்....ஒரு பிச்சைக்காரனை போன்ற தோற்றம் உள்ள ஒருவனை குரு என்று அடையாளம் கண்டு கொள்ள ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட ஒருவரால் தான் முடியும்.

பாரதி ஓடிச் சென்று அந்த குள்ளச் சாமியின் கையைப் பற்றிக் கொள்கிறார்.



அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.


அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு பாரதி சொல்கிறான் 

"சிலர் உன்னை ஞானி என்கிறார்கள், சிலர் உன்னை பித்தன் என்கிறார்கள், வேறு சிலரோ  உன்னை சித்தி பெற்ற யோகி என்கிறார்கள், நீ யார் என்று எனக்குச் சொல் " 

ஞானிகள் தங்களை அடையாளம் காட்ட மாட்டார்கள். 

அடியாளம் காட்டுபவர்கள் ஞானியாக  இருக்க மாட்டார்கள். 

அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு அவர்கள் தென் படுவார்கள். 

ஞானியை பித்தன் என்றும் இந்த உலகம் சொல்லி இகழ்ந்து இருக்கிறது.

ஞானிகள் அதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். 

"நீங்கள் யார் " என்று நம்மை யாராவது கேட்டால் நாம் எவ்வளவு சொல்வோம் நம்மைப் பற்றி ...

இந்த குள்ளச் சாமியிடம் பாரதி "எனக்கு நின்னை உணர்த்துவாய்" என்று கேட்டவுடன்  அந்த குள்ளச் சாமி என்ன செய்தார் தெரியுமா ?


Monday, February 23, 2015

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே 


திருச் சதகம் என்பது 100 பாடல்களை கொண்டது. பத்து தொகுதிகளாக உள்ளது.

மணி வாசகர் உருகி உருகி எழுதி இருக்கிறார்.

முடிந்தால் அனைத்தையும் எழுத ஆசை.

முதல் பாடல்.

என் உடலில் வியர்வை அரும்பி, உடல் விதிர் விதிர்த்து, என் தலைமேல் கைவைத்து உன் திருவடிகளை , கண்ணீர் ததும்ப, வெதும்ப, உள்ளத்தில் பொய்யை விட்டு, உன்னை போற்றி, ஒழுக்கத்தை கை விட மாட்டேன்....என்னை கொஞ்சம் கண்டு கொள்ளேன் " என்று உள்ளம் உருகுகிறார்.


பாடல்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, `போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

பொருள்

மெய் தான் அரும்பி = உடலில் வியர்வை அரும்பி

விதிர்விதிர்த்து = நடு நடுங்கி

உன் = உன்னுடைய

விரை ஆர் = மனம் பொருந்திய

கழற்கு = திருவடிகளுக்கு

என் = என்னுடைய

கை தான் தலை வைத்து =  கையை தலைமேல் வைத்து

கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி

வெதும்பி = வெதும்பி

உள்ளம் = உள்ளமானது

பொய் தான் தவிர்ந்து = பொய்யை விடுத்து

உன்னை = உன்னை

`போற்றி, சய, சய, போற்றி!' = போற்றி,  சய சய போற்றி

என்னும் = என்ற

கை தான் நெகிழவிடேன் = கை என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தை கை விட மாட்டேன்

உடையாய்! = உடையவனே

என்னைக் கண்டுகொள்ளே = என்னை கண்டு பின் (ஆட் ) கொள்வாய் 

வழிபாடு எப்படி இருக்க வேண்டும் ?

உடலால், மொழியால், உள்ளத்தால்

"மெய் தான் அரும்பி, 
விதிர்விதிர்த்து, 
என் கை தான் தலை வைத்து, 
கண்ணீர் ததும்பி"

இது எல்லாம் உடல் மூலம் பக்தி செலுத்துவது.

"உள்ளத்தில் பொய்யை விட்டு"

இது மனதால் பக்தி செய்வது

"போற்றி, சய, சய, போற்றி!" 

இது வாக்கால் பக்தி செய்வது

மூன்று கரணங்களாலும் வழி படுவது என்றால் இதுதான்.

இன்னொன்று,

வழிபடும்போது கையை தலைக்கு மேல் உயர்த்தி வழிபட வேண்டும்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 

என்பார் அடிகள் திருவாசகத்தில்

தலைக்கு மேல் கையை உயர்த்தி ஏன் வழிபட வேண்டும் ?



Sunday, February 22, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1 


பாரதியார் !

சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் பாடல்களைப் பாடியதால், அவரை  ஒரு தேசியக் கவி, புரட்சிக் கவி, என்று மக்கள் இனம் கண்டார்கள்.

பெண் விடுதலைக் கவிஞர் என்றும் அறியப்பட்டார்.

அவருடைய பாடல்கள் மிக மிக எளிமையாக இருந்ததால் அவற்றில் ஒரு ஆழம் இல்லையோ என்று எண்ணியவர்களும் உண்டு. கவிதை என்றால் அதில் அர்த்தம் புரியாத வார்த்தைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

பாரதியாரின் அதிகம் அறியாத இன்னொரு முகம் அவரின் ஆன்மீக முகம்.

அதைக் கண்டு சிலிர்த்துப் போனேன்.

முதலில் அவரின் குரு தரிசனம் என்ற பாடல்.

மாணவன் எப்போது தயாராகி விட்டானோ அப்போது குரு அவன் முன் தோன்றுவார்  என்பது நம் மத நம்பிக்கை. (when the student is ready, the Master will appear)

பாரதியார் குருவை தேடித்  தவிக்கிறார்.

ஆழ்ந்த ஆன்மீக தாகம்  இருக்கிறது.யாரிடம் போனால் அந்த தாகம் தீரும் என்று தவித்துக்  கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் முன் ஒரு குரு  தோன்றினார்.அந்த குருவின் தரிசனத்தைப் பற்றி  கூறுகிறார்.

என்ன ஒரு ஆழமான அருமையான கவிதை.


பாடல்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.

சீர் பிரித்த பின்

அன்று ஒரு நாள்  புதுவை நகர் தனிலே கீர்த்தி
அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில்,
இராஜா ராமையன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநி டத்தை
மொழி பெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனை வேண்டிக் கொள்ள யான் சென்று ஆங்கண் 
இருக்கையிலே ...அங்குவந்தான் குள்ளச் சாமி.

பொருள்

பாரதியார் புதுச் சேரியில் இருந்த காலம். அங்கு இராஜ இராமையன் என்ற நாகை  நகரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர்  இருந்தார்.அவரின் தந்தை உபநிடதங்களை  தமிழில் மொழி பெயர்த்து வைத்து இருந்தார். இராஜ இராமையன், அந்த மொழி பெயர்ப்பை பாரதியிடம் கொடுத்து பிழை திருத்தித் தரச் சொன்னார்.

பாரதியும், தினமும் அதை படித்து பிழை திருத்திக் கொண்டு இருக்கும் போது , ஒரு நாள்

குள்ளச் சாமி அங்கு வந்தான்.



Thursday, February 19, 2015

இராமாயணம் - தாயரை நினைந்து நைந்தான்.

இராமாயணம் - தாயரை நினைந்து நைந்தான்.


கோபத்தோடு வந்த  இலக்குவன் முன் தாரை வந்து நிற்கிறாள். "நீ எப்படி இராமனை விட்டு பிரிந்து வந்தாய்" என்று கேட்டாள்.

அப்படி கேட்டதும் இலக்குவனுக்கு கோபம் எல்லாம் போய் விட்டது. அண்ணனை நினைத்த உடன் சீற்றம் போய் , அருள்  வந்தது. அருளோடு தாரையைப் பார்த்தான். நிலவு போல் இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் இலக்குவனுக்கு அவன் தாயின் நினைவு வந்தது. நம் அம்மாவும் இப்படித்தானே விதைவைக் கோலத்தில் சோகமாக இருப்பாள் என்று எண்ணினான்...வருந்தினான்


பாடல்


ஆர் கொலோ உரைசெய்தார்? ‘என்று
    அருள்வர, சீற்றம் அஃக,
பார்குலாம் முழுவெண் திங்கள்,
    பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை,
    இறைமுகம் எடுத்து நோக்கி,
தார்குலாம் அலங்கல் மார்பன்,
    தாயரை நினைந்து நைந்தான்.

பொருள்

இந்த மாதிரி பாடல்களுக்கு உரை எழுதுவது, அதுவும் நான் எழுதுவது , அந்தப்  பாடலுக்கு  செய்யும் அவமரியாதை என்றே நினைக்கிறேன். எவ்வளவு அழகான பாடல் , எளிமையான , தெளிவான சொற்கள்,  ஆற்றொழுக்கான நடை....அடடா...

இருப்பினும், எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்...

ஆர் கொலோ = யார் அது

உரைசெய்தார்? ‘என்று = சொன்னது என்று

அருள்வர = அருள் வர

சீற்றம் அஃக = சீற்றம் விலக

பார்குலாம் = உலகுக்கு எல்லாம்

முழுவெண் திங்கள் = முழுமையான பௌர்ணமி நிலவு

பகல்வந்த படிவம் போலும் = பகலில் வந்தது போல

ஏர்குலாம் முகத்தினாளை = அழகான முகம் கொண்ட தாரையை

இறைமுகம் எடுத்து நோக்கி = தன் முகத்தை எடுத்து நோக்கி

தார்குலாம் = மலர்களால் தொடுக்கப் பட்ட 

அலங்கல் = மாலையை அணிந்த

மார்பன் =  மார்பை உடைய இலக்குவன்

தாயரை நினைந்து நைந்தான்.= தன்னுடைய தாய் மார்களை நினைத்து நைந்தான்

இந்த பாடலில் சில நுணுக்கம் உள்ளது.

கணவனை இழந்த தாரை விதவை கோலத்தில் வருகிறாள். அவளைப் பார்த்து முழு  நிலவு மாதிரி இருக்கிறாள் என்று கம்பன் வர்ணிக்கிறான். இது சரியா.  சோகத்தில் இருக்கும் பெண்ணை, விதவையான ஒரு பெண்ணை வர்ணிப்பது அவ்வளவு  சரியா என்று கேட்டால் சரி இல்லை தான்.

ஆனால், கம்பன்  அதில் நுணுக்கம் செய்கிறான்.

"முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும்"

பகலில் வந்த நிலவு போல என்று கூறுகிறான்.

நிலவு தான்,

அழகு தான்,

ஆனால் அது   பகலில் வந்தால் எப்படி ஒளி குன்றி, அழகு தெரியாமல் இருக்குமோ  அப்படி இருந்தது என்கிறான்.

அதே போல இன்னொரு வரி,  இலக்குவன் மாலை அணிந்து இருந்தான் என்று சொன்னது.

"தார்குலாம் அலங்கல் மார்பன்"

அண்ணியைக் காணோம். அண்ணன் துயரத்தில் இருக்கிறான். சுக்ரீவன் சொன்ன சொல்லை  காப்பாற்றவில்லையே என்ற கோபம்.  இவற்றிற்கு நடுவில்  மாலை அணிந்து கொண்டு வருவானா ? கம்பன் எப்படி அப்படி சொல்லலாம் ?

இலக்குவன் ஊருக்குள் வரும்போது மாலை அணிந்து வரவில்லை.

அவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த போது , அன்னணனின் பெயரைச் சொன்னதும்   கோபம் மாறி அருள் பிறந்த போது , விதைவையான தாரையைப்  பார்த்ததும் தன் தாயை நினைந்து வருந்திய அவனின் உயர்ந்த குண நலன்களை  பாராட்டி , அவனுக்கு கம்பன் அணிவித்த மாலை அது என்று நயப்புச்  சொல்வார்கள்.

மனைவியை பிரிந்து இருக்கிறான். வாலிபன். அழகான பெண்ணைப் பார்த்தவுடன்  மனைவின் நினைப்பு வரவில்லை. தாயின் நினைவு வந்தது என்றால்  அவனுக்கு ஒரு மாலை போட வேண்டாமா ?

அண்ணன் மேல், தாயின் மேல் அன்பு கொண்ட ஒரு பாத்திரத்தை படைத்துக்  காட்டுகிறான்  கம்பன். வருங்கால சந்ததிகள், இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு ஒரு உதாரணம்  தருகிறான்.

இவற்றை எல்லாம்  சிறு வயதில் சொல்லித் தந்தால் பிள்ளைகள் மனதில் உயர்ந்த  விஷயங்கள் எளிதில்  பதியும்.

நாமும் படிக்கவில்லை. நம் பிள்ளைகளுக்கும் சொல்லித்  தரவில்லை.


Wednesday, February 18, 2015

ஆசாரக் கோவை - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை  - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?


நீங்கள் நன்றாக உன்னித்து கவனித்துப் பார்த்தால் தெரியும், உங்கள் மனம் எப்போதும் ஒரு நிலையில் இல்லை என்று.

இன்னும் ஆழமாக கவனித்தால் இன்னொன்றும் புரியும்....உங்கள் மன நிலை ஒரு சக்கரம் போல மாறி மாறி சில எண்ணங்களில், குணங்களில் சுழல்வது புரியும்.

இந்த மன நிலையை நம் முன்னவர்கள் மூன்றாகப்  பிரித்தார்கள்.

- சாத்வீகம்
- ராஜசம்
- தாமசம்

நம்முடைய அனைத்து மன நிலைகளையும் இந்த மூன்றுக்குள் அடக்கி விடலாம்.

 சரி,இந்த மூன்று மன நிலைகளும் எப்படி வருகின்றன ? எது இவற்றை மாற்றுகிறது ?

நம் உணவு
நாம் விடும் மூச்சு
கால நிலை

கால நிலை நம் மனதை பாதிக்கிறது என்று நம் முன்னவர்கள்  .கண்டு  அறிந்தார்கள்.

சில எண்ணங்கள்  மாலையிலும்,இரவிலும்  வரும்.

சில எண்ணங்கள் காலையில் வரும். சில  மதியம்.

சிந்தித்துப்  பாருங்கள்.

மதியம், மண்டையைப்  பிளக்கும் வெயிலில் காதலிக்கு முத்தம் தந்தால் எப்படி   இருக்கும் என்று. அப்படி ஒரு எண்ணமே  வராது.

சரி....காலம் நம் மன நிலையை மாற்றுகிறது என்றே வைத்துக்  .கொள்வோம் அதனால் என்ன இப்ப ?

 .வருகிறேன் ....

காலம் நம் மன நிலையை மாற்றும் என்றால், அது ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்கு மாறும் போது ஒரு குழப்பமான மன நிலை  தோன்றும்.

இரவு முடிந்து பகல் தோன்றும் போது , பகல் முடிந்து இரவு தோன்றும் போது ஒரு குழப்பமான மன நிலை தோன்றும்.

ஒன்றிலிருந்து மற்றதுக்குப் போகும்போது சில சலனங்கள் இருக்கும்.

மாலை கொஞ்சம்  மயக்கும்.ஏன் ?

அது போலத்தான் காலையும்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் நேரத்தை  சந்தி நேரம் என்றார்கள்.

இந்த நேரத்தில் வந்தனம் பண்ணுவது சந்தியா வந்தனம் என்று  பெயர்.

பல சந்திகள் இருந்தாலும், இரண்டு சந்திகள்  முக்கியமானவை ...ஒன்று காலைச் சந்தி, மற்றது மாலைச் சந்தி.

இந்த இரண்டு சந்தி வேளையிலும் மனம் மிக அதிகமான அளவில் சலனத்துக்கு உள்ளாகும்.

அந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர , நம் முன்னவர்கள், அந்த நேரத்தில் வழிபாடு பண்ணச்  சொன்னார்கள்.

சிந்தனையை ஒரு கட்டுக்குள்  வைக்கச் சொன்னார்கள்.

குழப்பமான நேரத்தில் மனம் போன வழியில் போனால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். அதை தடுத்து, மனதை நிலைப் படுத்த ஏற்பட்டது தான் சந்தியா வந்தனங்களும் , காலை , மாலை  வழிபாடுகளும்.

இஸ்லாமியர்கள் ஐந்து முறை  .தொழுகிறார்கள். ஐந்து சந்தி உண்டு.

ஆசாரக் கோவை இந்த வழிபாட்டைப் பற்றிச்  சொல்கிறது.

பாடல்

 நாள் அந்தி, கோல் தின்று, கண் கழீஇ, தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.

பொருள்  -  சுருக்கம்

காலையில் பல் துலக்கி, முகம் கழுவி தெய்வத்தை தான் அறிந்தவாறு தொழுது எழுக. மாலையில் நின்று தொழுவது சரி  அல்ல.  பழி.

பொருள்

நாள் அந்தி = அதிகாலையில்

கோல் தின்று = ஆலம்  குச்சி,அரசம் குச்சி இவற்றால் பல் துலக்கி

கண் கழீஇ = கண் கழுவி (முகம் கழுவி )

தெய்வத்தைத் = தெய்வத்தை

தான் அறியுமாற்றால் = நீங்கள் அறிந்த படி (மற்றவர்கள் சொன்ன படி அல்ல)

தொழுது எழுக! = தொழுது எழுக

அல்கு அந்தி = அல்கு என்றால் இரவு. அல்கு அந்தி என்றால்  மாலையில்

நின்று தொழுதல் பழி = நின்றபடி இறைவனை தொழக் கூடாது. அமர்ந்துதான் தொழ வேண்டும்.

நல்லது நிறைய  சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.

செய்கிறோமோ இல்லையோ, தெரிந்தாவது கொள்வோம்.












Sunday, February 15, 2015

பிரபந்தம் - உன் மனதை யார் அறிவார் ?

பிரபந்தம் - உன் மனதை யார் அறிவார் ?


நாம் சிறுவர்களாக இருக்கும் போது நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்மை சிலவற்றைச் செய்யச் சொல்வார்கள். நமக்கு அது பிடிக்காது. கோவம் வரும். ஏன் இப்படி நம்மை சிரமப் படுத்துகிறார்கள் என்று எரிச்சல் அடைவோம்.

ஆனால், நமக்கு வயதான பின், அவர்கள் சொன்னதின் அர்த்தம் விளங்கும். நம் நன்மைக்குத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

அது போல இறைவன் நமக்குச் சிலவற்றை செய்கிறான். ஏன் இப்படி நடக்கிறது, என்று நமக்கு எரிச்சலும், கோவமும் வரும். பின்னால் நாம் புரிந்து கொள்வோம் ஏன் நமக்கு அப்படி எல்லாம் நடந்தது என்று.

அதை ஆண்டாள் மிக அழகாகச் சொல்கிறாள்.

"நாங்கள் மிக இளம் பெண்கள். எங்கள் மார்புகள் கூட இன்னும் முழுவதும் வளரவில்லை. நீ என்னவெல்லாமோ செய்கிறாய். நீ செய்வது ஒன்றும் எங்களுக்கு புரியவில்லை. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நீ செய்வது. நீ எவ்வளவு பெரியவன். ஒரு பெண்ணின் பொருட்டு, கடலில் பாலம் அமைத்து, அரக்கர் குலத்தை வேரோடு அழித்தாய். உன் வலிமையின் முன் நாங்கள் எம்மாத்திரம்..."

என்று இறைவனின் செயல்களுக்கு நாம் காரணம் அறிய முடியாது என்று சொல்கிறாள்.

பாடல்

முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.

பொருள்

முற்று இலாத = முதிர்வு அடையாத

பிள்ளைகளோம் = பிள்ளைகள் நாங்கள்

முலை போந்திலா தோமை  = முலைகள் முழுமை பெறாத எங்களை

நாள்தொறும் = தினமும்

சிற்றில் மேல் இட்டுக் கொண்டு = சிறிய வீட்டில் அழைத்துச் சென்று

நீ சிறிது உண்டு = நீ செய்தது சிறிது உண்டு

திண்ணென நாம் அது சுற்றிலோம் = உறுதியாக நாம் அவற்றை கற்றிலோம்

கடலை அடைத்து  = கடலை அடைத்து (பாலம் அமைத்து)

அரக்கர் குலங்களை முற்றவும் = அரக்கர் குலங்களை முற்றாக அழித்து

செற்று = சண்டை இட்டு

இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! = இலங்கையை போர்க்களம் ஆக்கியவனே

எம்மை வாதியேல் = எங்களை துன்புறுத்தாதே


குறுந்தொகை - தச்சன் செய்த தேர்

குறுந்தொகை - தச்சன் செய்த தேர் 


கவிதையின் அழகு அது சொல்வதில் அல்ல...அது சொல்லாமல் விடுவதில்.

தலைவி தலைவனை பிரிந்து இருக்கிறாள். தன் சோகத்தை தோழியிடம் சொல்கிறாள்.

"தச்சன் செய்த சிறு தேரை சிறுவர்கள் கையில் இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி இன்புறுவதைப் போல தலைவனோடு சேர்ந்து இன்பகமாக இல்லாவிட்டாலும் அவனோடு மனிதனால் கொண்ட நட்பால் நான் நன்றாக இருக்கிறேன் (என் வளையல் கழலாமல் இருக்கிறது ") என்கிறாள்.

பாடல்

தச்சன் செய்த சிறுமா வையம்      
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்     
ஈர்த்தின் புறூஉ மிளையோர்     
உற்றின் புேறெ மாயினு நற்றேர்ப் 
பொய்கை யூரன் கேண்மை     
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

சீர் பிரித்த பின் 

தச்சன் செய்த சிறு மாவையம்      
ஊர்ந்து இன்பம் உராராயினும் கையின்     
ஈர்த்து இன்பம் உறும் இளையோர்     
உற்று இன்பம் உறேமாயினும்  நற்றேர்ப் 
பொய்கை ஊரன்  கேண்மை     
செய்து இன்புற்ற என் நெஞ்சு செறிந்தன வளையே. 

பொருள்

தச்சன்  = மர வேலை செய்யும் தச்சன்

செய்த =செய்த

சிறு மாவையம் = சிறிய தேர்
     
ஊர்ந்து = மேல் ஏறி சென்று

இன்பம் உராராயினும் = இன்பம் அடையா விட்டாலும்

கையின் = கையில்
   
ஈர்த்து = இழுத்து

இன்பம் உறும் = இன்பம் அடையும்

இளையோர் = சிறுவர்களைப் போல
   
உற்று இன்பம் = தலைவனை அடைந்து  இன்பம்

உறேமாயினும் = அடையாவிட்டாலும்

 நற்றேர்ப் = நல்ல தேர்

பொய்கை = சிறந்த நீர் நிலைகளைக் கொண்ட

ஊரன் = தலைவன்

கேண்மை = நட்பு
   
செய்து = செய்து

இன்புற்ற என் நெஞ்சு = இன்புற்ற என் நெஞ்சு

செறிந்தன வளையே = கையோடு இருக்கிறது என் வளையல்கள்

பாடல் இது.

கவிதை எது தெரியுமா ?

தேர் என்பது அதில் அமர்ந்து ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுகமாக செல்வதற்கு உருவாக்கப் பட்டது.

ஆனால், சிறுவர்களோ, தேரை கையில் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

காதல் என்பது, தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் கூடி இன்பம் அனுபவிக்க  ஏற்பட்டது. ஆனால், இவளோ பழைய நட்பை நினைத்து வாழ்கிறாள். பொம்மை தேரைப் போல.


மேலும், சிறுவர்கள் தேரை இழுத்துக் கொண்டு திரிவார்கள். ஒரு காலம் வரை. அதற்குப் பிறகு பொம்மை தேரை தூக்கி போட்டு விட்டு உண்மையான தேரை செலுத்த தொடங்கி விடுவார்கள். பெரிய ஆளான பின்னும் பொம்மை தேரை இழுத்துக் கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும் ?

காதல் கண்ணில் தொடங்கும், அப்பப்ப ஒரு சிறு புன் முறுவல், முடிந்தால் ஒரு சில கடிதங்கள், பின் நேரில் தனிமையில் சந்திப்பு, கொஞ்சம் விரல் பேசும், வியர்வை நீர் வார்க்க, வெட்கம் பூ பூக்கும்...இப்படியாக காதல் வளரும். வாழ் நாள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ? (next step கு போடா ).

அது போல, இன்னும் அவன் மேல் கொண்ட நட்பை எண்ணி வாழ்கிறேன் என்கிறாள். காதல் வளரவில்லை. தேரை இழுத்துக் கொண்டு அலைகிறாள்.


சிறுவர்கள் சிறிய தேரை இழுத்துக் கொண்டு அலைகிறார்கள். அவன் பெரிய தேரில் செல்கிறான் என்று இரண்டையும் சேர்த்தும் படிக்கலாம் நாம். 

தலைவன் ஏன் பிரிந்தான் ?  கவிஞர் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பரத்தையிரடம் போய் இருக்கலாம்.

எப்படி தெரியும் ?

பாடல் சொல்கிறது, அவன் பெரிய பணக்காரன் என்று. அவனிடம் தேர் இருக்கிறது, நீர் நிலைகள்  நிறைந்த ஊருக்குத் தலைவன். பெரிய ஆள் தான். தலைவியை மறந்து விட்டான்.

இன்னும் சொல்லப் போனால், கவிதை , தலைவன் மறந்து விட்டான் என்று கூடச் சொல்ல வில்லை.

அவன் நட்பை நான் மறக்க மாட்டேன் என்கிறாள். எனவே அவன் மறந்து விட்டான் என்று நாம் அறியலாம்.


 



Thursday, February 12, 2015

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை 


ஆசாரக் கோவை என்பது பெரியவர்கள், அறிஞர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட நல்ல வாழ்கை முறைகளின் தொகுப்பு.

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டும். நமக்கும் உதவும்.

அதிலிருந்து சில பாடல்கள்.

ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறது கீழே வரும் பாடல்.

காலையில் எழ வேண்டும். காலை என்றால் ஏதோ ஆறு அல்லது ஏழு மணி அல்ல. நாலு அல்லது ஐந்து மணிக்கு எழ வேண்டும். வைகறையில் எழ வேண்டும்.

எழுந்தவுடன், அன்று செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். யாருக்கு உதவி செய்யலாம், என்ன தர்மம் செய்யலாம், என்ன படிக்கலாம் என்று நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல காரியம் செய்கிறோமோ இல்லையோ, மனம் கெட்ட வழியில் போகாது.

அடுத்தது, பொருள் தேடும் வழி பற்றி சிந்திக்க வேண்டும். இன்று அலுவலகத்தில், வேலையில் , பள்ளியில், கல்லூரியில் , தொழிலில், கடையில் என்ன செய்தால் நமக்கு பொருள் வரவு கூடும், உத்தியோக உயர்வு கூடும், நல்ல rating கிடைக்கும், இலாபம் பெருகும், அதிக மதிப்பெண் வரும், என்று சிந்தித்து அதற்கான வழிகளை காண வேண்டும்.

அடுத்து, பெற்றோரை தொழ வேண்டும்.

பாடல்

வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள்

வைகறை யாமந் துயிலெழுந்து = நள்ளிரவு தாண்டி வரும் அதிகாலையில் தூக்கத்தை விட்டு எழுந்து


தான்செய்யும் = தான் செய்ய வேண்டிய

நல்லறமு = நல்ல அறங்களையும்

மொண்பொருளுஞ் = ஒள்  பொருளும் = ஒளி பொருந்திய பொருள். அதாவது வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் பொருள்கள். வாழ்வை பிரகாசமாக்கும் பொருள்கள். கல்வி, செல்வம், போன்றவை.

சிந்தித்து = எப்படி பெறுவது என்று சிந்தித்து.  அதை எப்படி அடைவது என்று திட்டமிட்டு

வாய்வதில் = வாய்புடைய

தந்தையுந் தாயுந்  = தந்தையையும் தாயையும்

தொழுதெழுக = தொழுது எழுக

என்பதே = என்பதே

முந்தையோர் கண்ட முறை = நம் முன்னவர்கள் கண்ட முறை.

இதைவிடவும் வாழ்வில் வெற்றி பெற இன்னுமொரு வழி இருக்குமா  என்ன ?

புதையலின் மேல் அமர்ந்து வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்த பிச்சைக் காரனைப் போல  நமக்கு வாய்த்த செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு மேலை  நாடுகளில் இருந்து பாடம் பயில முயல்கிறோம்.

நம் பெருமை அறிவோம்




Tuesday, February 10, 2015

திருவாசகம் - எதுவும் வேண்டாம்

திருவாசகம் - எதுவும் வேண்டாம் 


எல்லோரும் கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள்.

கேட்காவிட்டால் கூட, இருப்பதை எடுத்துக் கொள் என்று யாரும் வேண்டிக் கொள்ள மாட்டார்கள்.

"இறைவா, என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. இவ்வளவு வேண்டாம், கொஞ்சத்தை எடுத்துக் கொள்.

நான் நிறைய படித்துவிட்டேன். என் பட்டத்தில் ஒன்றிரண்டை எடுத்துக் கொள்.

எனக்கு ஊருக்குள் நல்ல பேரும் புகழும் இருக்கிறது. இவ்வளவு வேண்டாம். என் புகழை குறைத்து விடு.

எனக்கு ஆறு அறிவு இருக்கிறது. அதில் ஒன்றை குறைத்து என்னை ஒரு ஐந்தறிவு உள்ள விலங்காக மாற்றி விடு "

என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டிய ஒரே ஆள், மாணிக்க வாசகர்.

பாடல்

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

பொருள்

உற்றாரை யான் வேண்டேன் = சொந்தக்காரர்கள் வேண்டாம்

ஊர் வேண்டேன் = சொந்த ஊர் வேண்டாம்

பேர் வேண்டேன் = புகழ் வேண்டாம்

கற்றாரை யான் வேண்டேன்; = கற்றவர்கள் உறவு வேண்டாம்

கற்பனவும் இனி அமையும்; = படிப்பும் வேண்டாம்

குற்றாலத்து = குற்றாலத்தில்

அமர்ந்து = அமர்ந்து

உறையும் கூத்தா! = வாழும் கூத்தனே

உன் குரை கழற்கே = உன்னுடைய திருவடிகளுக்கே


கற்றாவின் = கன்றை ஈன்ற பசுவின் (கற்று + ஆ )

மனம் போல = மனம் போல்

கசிந்து, உருக வேண்டுவனே! = கசிந்து உருக வேண்டுவனே

பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.

யோசிக்கவாவது முடிகிறதா நமக்கு ? இருக்கிறதை வேண்டாம் என்று சொல்ல  எப்படி பட்ட மனம் வேண்டும் ?

அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்த ஊரில் நாமும் வாழ்கிறோம்.

அவர்கள் எழுதியதை நாம் படிக்கிறோம்.

நாம் தான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?



திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது - பாகம் 2

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது  - பாகம் 2  



இறைவனை அடைய விடாமல் நம்மை பல விதமான சிக்கல்கள் பின்னி பிணைத்து இருக்கின்றன.

அவற்றை சிக்கல்கள் என்று கூட சொல்லக் கூடாது, அவற்றை ஆபத்துகள் என்று சொல்கிறார் மணிவாசகர். எத்தனை ஆபத்துகளில் இருந்து பிழைத்தேன் என்று பட்டியல் தருகிறார்.

உணவு ஒரு பெரிய தடை. ஆபத்து. எந்நேரமும் பசி, உணவு, உண்டதைக் செரித்தல் பின் மீண்டும் பசி, உணவு என்று வாழ்நாளில் மிகப் பெரிய நேரம் உணவு தேடுவதிலும், உண்பதிலும் சென்று விடுகிறது.

இரை தேடும் மும்முரத்தில் இறை தேட முடியாமல் போகிறது.

உணவு தேட வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் அதிக நேரம் போகிறது.

வேலை செய்த களைப்பில் தூக்கத்தில் கொஞ்ச நேரம். வேலைக்காக அங்கும் இங்கும் அலைவதில் கொஞ்ச நேரம்.

இடைப்பட்ட நேரத்தில் காமம், அதில் இருந்து வரும் பிள்ளைகள், அதனால் வரும் சிக்கல்கள் என்று வாழ்வு செக்கு மாடு போல இவற்றிலேயே போய் விடுகிறது.

இவை போதாது என்று கல்வி என்ற பெரும் கடலில் இருந்து பிழைக்க வேண்டும். கல்வி குழப்பும். இறைவனை அடைய கல்வி ஒரு தடை.

செல்வம் ஒரு தடை.

வறுமை ஒரு தடை.

மணிவாசகரின் பட்டியல் இதோ

பாடல்


காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

பொருள்

காலை மலமொடு = காலையில் கழிக்கும் மலமொடு

கடும் பகல் பசி = பகலில் வரும் பசி

நிசி = இரவு

வேலை  = வேலை

நித்திரை = நித்திரை. மாற்றிப் படிக்க வேண்டும். பகலில் வேலை மற்றும் பசி. இரவில் நித்தரை.

யாத்திரை, பிழைத்தும் = அதற்காக அலையும் அலைச்சல்களில் இருந்து பிழைத்தும்

கரும் குழல் = கரிய முடி

செவ் வாய் = சிவந்த உதடுகள்

வெள் நகை = வெண்மையான (பற்கள் தெரிய சிரிக்கும்) சிருப்பும்

கார் மயில் = கரிய மயிலைப்

ஒருங்கிய சாயல் = ஒத்த சாயலும்

நெருங்கி = நெருங்கி

 உள் மதர்த்து = உள்ளே கிளர்ந்து எழுந்து

கச்சு அற நிமிர்ந்து = மார்பு கச்சை மீறி நிமிர்ந்து

கதிர்த்து = உயர்ந்து

முன் பணைத்து = முன் எழுந்து

எய்த்து = அடைந்து

இடை வருந்த = இடை வருந்த

எழுந்து = எழுந்து

புடை பரந்து = பரந்து விரிந்து

ஈர்க்கு = ஈர் குச்சி

இடை போகா = இடையில் போக முடியாமல்

இள முலை = இளமையான மார்புகள்

மாதர் தம் = பெண்களின்

கூர்த்த = கூர்மையான

நயனக் = கண்களின்

கொள்ளையில் = கொள்ளையில்

பிழைத்தும் = பிழைத்தும்

பித்த உலகர் = பித்தர்கள் நிறைந்த உலகில்

பெரும் துறைப் பரப்பினுள் = பெரிய கடல் சூழ்ந்த உலகில்

மத்தக் களிறு = யானை

எனும் = போன்ற

அவாவிடைப் பிழைத்தும் = ஆசையில் பிழைத்தும் (யானை போன்ற ஆசை; பேராசை)

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் = கல்வி என்ற பல கடலைப் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் = செல்வம் என்ற  துன்பத்தில் இருந்து பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் = வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும்

மிக ஆழமான பாடல். இதன் விரிவுரையை அடுத்து வரும் ப்ளாகுகளில் சிந்திப்போம்


=======================பாகம் 2 =========================================


எதுவெல்லாம் தடை, இவற்றில் இருந்தெல்லாம் தான் பிழைத்தேன் என்று சொல்ல வந்த  மணிவாசகர், எல்லாவற்றிற்கும் ஒரு வரி சொன்னார்...ஆனால் பெண்ணிடம்  இருந்து பிழைத்ததைச் சொல்ல ஆறு வரி எடுத்துக்  கொள்கிறார்.

கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

காமம் மிகப் பெரிய ஆபத்து. அதை கடப்பது என்பது எளிதான காரியம் அல்ல. மணிவாசகருக்கு ஆறு வரி தேவைப்பட்டது.  

நமக்கு எத்தனை வரியோ ?

பெண்ணைக் கடந்து மேலும் சில ஆபத்துகளை சொல்கிறார். 

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;

கல்வி ஒரு தடை.  கல்வி தலையில் ஏற ஏற குழப்பமும் ஏறுகிறது. கல்வியின் கரையை  கண்டது யார் ?  ஞான மார்கத்தில் இறைவனை கண்டவர்களை விட பக்தி  மார்கத்தில் கண்டவர்கள்தான் அதிகம்.

கற்றாரை யான்  வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

என்பார் மணிவாசகர்.

படித்தவர்களின் சகவாசமே வேண்டாம்  என்கிறார்.படித்தவன், தான் அறிந்ததுதான்  உண்மை என்று சாதிப்பான். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவான் என்பது அவர் எண்ணம்.

அறிவு கர்வத்தைத் தரும். வித்யா கர்வம் என்பார்கள்.

கற்பனவும் இனி அமையும்....படித்தவரை போதும் என்கிறார். யாரால் முடியும் ?

படிப்பு வேண்டாம் என்று சொன்னவரின் பாடல் காலங்களை கடந்து நிற்கிறது. பெரிய பெரிய படிப்பு படித்தவர்களின் புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.



செல்வம் எனும் அல்லலில் பிழைத்தும் 

அல்லல் என்றால் துன்பம். 

நாம் எல்லாம் செல்வம் துன்பத்தை தொலைக்கும் கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் மட்டும் இருந்து விட்டால், நமது எல்லா தொல்லைகளும் தொலைந்து போய் விடும்  என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், அந்த செல்வமே துன்பம் என்கிறார் அடிகள்.

சேர்க்க சேர்க்க, மேலும் மேலும் வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். சேர்த்த செல்வத்தை காக்க வேண்டும். முதலீடு செய்தால் நஷ்டம் வந்து  விடுமோ என்ற கவலை.

அதற்காக செல்வமே வேண்டாம் என்று இருந்தால் வறுமை வந்து சேருமே . அது மட்டும்  சரியா ?

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;


இல்லை. நல்குரவு என்றால் வறுமை.  வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும் என்கிறார்.

செல்வம் ஒரு அளவோடு வேண்டும். பேராசை கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பாடல்.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல்.

Wednesday, February 4, 2015

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது - பாகம் 1

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது  - பாகம் 1  



இறைவனை அடைய விடாமல் நம்மை பல விதமான சிக்கல்கள் பின்னி பிணைத்து இருக்கின்றன.

அவற்றை சிக்கல்கள் என்று கூட சொல்லக் கூடாது, அவற்றை ஆபத்துகள் என்று சொல்கிறார் மணிவாசகர். எத்தனை ஆபத்துகளில் இருந்து பிழைத்தேன் என்று பட்டியல் தருகிறார்.

உணவு ஒரு பெரிய தடை. ஆபத்து. எந்நேரமும் பசி, உணவு, உண்டதைக் செரித்தல் பின் மீண்டும் பசி, உணவு என்று வாழ்நாளில் மிகப் பெரிய நேரம் உணவு தேடுவதிலும், உண்பதிலும் சென்று விடுகிறது.

இரை தேடும் மும்முரத்தில் இறை தேட முடியாமல் போகிறது.

உணவு தேட வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் அதிக நேரம் போகிறது.

வேலை செய்த களைப்பில் தூக்கத்தில் கொஞ்ச நேரம். வேலைக்காக அங்கும் இங்கும் அலைவதில் கொஞ்ச நேரம்.

இடைப்பட்ட நேரத்தில் காமம், அதில் இருந்து வரும் பிள்ளைகள், அதனால் வரும் சிக்கல்கள் என்று வாழ்வு செக்கு மாடு போல இவற்றிலேயே போய் விடுகிறது.

இவை போதாது என்று கல்வி என்ற பெரும் கடலில் இருந்து பிழைக்க வேண்டும். கல்வி குழப்பும். இறைவனை அடைய கல்வி ஒரு தடை.

செல்வம் ஒரு தடை.

வறுமை ஒரு தடை.

மணிவாசகரின் பட்டியல் இதோ

பாடல்


காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

பொருள்

காலை மலமொடு = காலையில் கழிக்கும் மலமொடு

கடும் பகல் பசி = பகலில் வரும் பசி

நிசி = இரவு

வேலை  = வேலை

நித்திரை = நித்திரை. மாற்றிப் படிக்க வேண்டும். பகலில் வேலை மற்றும் பசி. இரவில் நித்தரை.

யாத்திரை, பிழைத்தும் = அதற்காக அலையும் அலைச்சல்களில் இருந்து பிழைத்தும்

கரும் குழல் = கரிய முடி

செவ் வாய் = சிவந்த உதடுகள்

வெள் நகை = வெண்மையான (பற்கள் தெரிய சிரிக்கும்) சிருப்பும்

கார் மயில் = கரிய மயிலைப் 

ஒருங்கிய சாயல் = ஒத்த சாயலும்

நெருங்கி = நெருங்கி

 உள் மதர்த்து = உள்ளே கிளர்ந்து எழுந்து

கச்சு அற நிமிர்ந்து = மார்பு கச்சை மீறி நிமிர்ந்து

கதிர்த்து = உயர்ந்து

முன் பணைத்து = முன் எழுந்து

எய்த்து = அடைந்து

இடை வருந்த = இடை வருந்த

எழுந்து = எழுந்து

புடை பரந்து = பரந்து விரிந்து

ஈர்க்கு = ஈர் குச்சி

இடை போகா = இடையில் போக முடியாமல்

இள முலை = இளமையான மார்புகள்

மாதர் தம் = பெண்களின்

கூர்த்த = கூர்மையான

நயனக் = கண்களின்

கொள்ளையில் = கொள்ளையில்

பிழைத்தும் = பிழைத்தும்

பித்த உலகர் = பித்தர்கள் நிறைந்த உலகில்

பெரும் துறைப் பரப்பினுள் = பெரிய கடல் சூழ்ந்த உலகில்

மத்தக் களிறு = யானை

எனும் = போன்ற

அவாவிடைப் பிழைத்தும் = ஆசையில் பிழைத்தும் (யானை போன்ற ஆசை; பேராசை)

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் = கல்வி என்ற பல கடலைப் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் = செல்வம் என்ற  துன்பத்தில் இருந்து பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் = வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும்

மிக ஆழமான பாடல். இதன் விரிவுரையை அடுத்து வரும் ப்ளாகுகளில் சிந்திப்போம்


Monday, February 2, 2015

திருவாசகம் - காட்டாதன எல்லாம் காட்டி

திருவாசகம் - காட்டாதன எல்லாம் காட்டி 


சிற்றின்பம், பேரின்பத்திற்கு வழி  காட்டுகிறது.

சிற்றின்பத்தையே அறிய முடியாவிட்டால் பேரின்பத்தை எப்படி அறிவது ?

மாணிக்க வாசகர் பெண்ணாக மாறி உருகுகிறார்.

ஒரு இளம் பெண்,  தன் தோழியிடம், அவளுடைய காதலன் எப்படியெல்லாம் அவளிடம் நடந்து கொண்டான் என்று வெட்கப்பட்டு கூறுகிறாள்.

"  கேட்டாயோ தோழி, என்னை அவன் தந்திரம்  செய்தான். அவன் வீட்டு மதிள் சுவர் மிகப் பெரியாதக இருக்கும். அதில் படங்கள் எல்லாம் வரைந்து இருப்பார்கள். அவன் எனக்கு என்னவெல்லாமோ காட்டினான். சிவத்தைக் காட்டினான். அவன் பாதங்களைக் காட்டினான். அவனுடைய கருணையைக் காட்டினான். எல்லோரும் சிரிக்க என்னை மேலுலகம் சேர்பித்தான் . என்னை ஆட்க் கொண்டவனை சொல்லி நாம் அம்மானை ஆடுவோம்"  என்கிறார்.

பாடல்


கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டாண்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

கேட்டாயோ தோழி = தோழி, கேட்டாயா ?

கிறிசெய்த வாறொருவன் = கிறி செய்தவாறு ஒருவன். கிறி என்றால் தந்திரம். ஒருவன் தந்திரம் செய்து

தீட்டார் = தீட்டப்பட்ட (ஓவியங்கள் )

மதில் = சுவர்

புடை சூழ் = சூழ்ந்து இருக்க

தென்னன் = தென்புறத்தை சேர்ந்தவன்

பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்

காட்டா தனவெல்லாங் காட்டிச் = காட்டதனவெல்லாம் காட்டி. இதுவரை கான்பிக்கதவற்றை எல்லாம் காண்பித்து

சிவங்காட்டித் = சிவத்தைக் காட்டி

தாட்டா மரைகாட்டித் = தாள் + தாமரை + காட்டி = தாள் என்கிற தாமரையைக் காட்டி

தன்கருணைத் தேன்காட்டி = தன்னுடைய கருணையான தேனினைக் காட்டி

நாட்டார் நகை செய்ய  = நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நகைக்க

நாம்மேலை வீடெய்த = நாம் மேலை வீடு எய்த . நாம் சொர்கத்தை அடைய

ஆட்டாண்  = ஆள் + தான் = அவன் தானே

கொண்டாண்ட வா = கொண்டான் (ஆட் கொண்டான்)

பாடுதுங்காண் அம்மானாய் = நாம் அம்மானை பாடுவோம்

மணிவாசகர் ஒரு அரசின் முதல் அமைச்சராக  இருந்தவர்.பெரிய அறிவாளி. 35 வயது இருக்கும்.

பெண்ணாக மாறி  உருகுகிறார்.

கேட்டாயோ தோழா என்று ஆரம்பித்து  இருக்கலாம்.கேட்டாயோ தோழி என்று  தொடங்குகிறார்.

பெண்ணின் இயல்பு எளிதில் சரணாகதி அடைய வழி வகுக்கும்.

இன்று பெண்ணீயம் பேசுபவர்கள் பெண்களை ஆண்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே   கருதுகிறேன்.

மணிவாசகர் பெண்ணாக  உருக்கினார்.

80 வயதில் நாவுக்கரசர் பெண்ணாக உருகினார்.

நம்மாழ்வாரும் அப்படியே...

பெண்ணில் அப்படி என்னதான் இருக்கிறது ?