Saturday, March 21, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு 


நல்லது வேண்டும் என்று சிலவற்றைச் செய்யத் தொடங்குகிறோம். ஆரம்பித்த சில நாட்களில் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் அதை விட்டு விடுகிறோம்.

ஒரு மாதமாக நடை பயிற்சி செய்கிறேன்....தொப்பை குறையவே மாட்டேன் என்கிறது. இது பிரயோஜனம் இல்லை என்று நிறுத்தி விடுவது.

பொறுமை கிடையாது. விடா முயற்சி கிடையாது.

இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்கே இப்படி என்றால், இறையருள் போன்ற விஷயங்களுக்கு எப்படி இருக்கும் ?

என்று வருமோ, எப்போது வருமோ...தெரியாது. நம்பிக்கையில் தொடர வேண்டியதுதான்.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.....

இன்றோ, நாளையோ, இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம்...எவ்வளவு நாள் ஆனால் என்ன, உன் அருள் எனக்கு கிடைத்தே ஆக வேண்டும். எனக்கும் உன்னை விட்டால் ஆள் இல்லை; உனக்கும் என்னை விட்டால் ஆள் இல்லை.

பக்தன் இல்லாமல் கடவுள் இல்லை.

கடவுள் இல்லாமல் பக்தன் இல்லை.


இறைவன் பெரியவன் தான். அளவற்ற ஆற்றல் உடையவன் தான். அன்பும் கருணையும் உடையவன்தான்.

இதை எல்லாம் வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வான் ?

அன்பையும், கருணையும் செலுத்த ஒரு ஆள் வேண்டாமா ?

இறைவா, உன் அருளைத் தர என்னை விட சிறந்த ஆள் உனக்குக் கிடைகப் போவது இல்லை....உனக்கும் என்னை விட்டால் வேறு ஆள் யாரும் இல்லை. அது போல இறை அருளைப் பெற உன்னைவிட்டால் எனக்கும் வேறு யாரும் இல்லை.

பாடல்

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.



பொருள்

இன்றாக = இன்றைக்கு

நாளையே யாக = இல்லேனா நாளைக்கு

இனிச்சிறிதும் நின்றாக = இன்னும் கொஞ்சல் நாளில்

நின்னருளென் பாலதே, = நின் அருள் என் பாலதே - உன் அருள் எனக்குத்தான்

நன்றாக = சரியாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய் = நான் உன்னை அன்றி வேறு இல்லை

நாரணனே = நாரணனே

நீயென்னை யன்றி யிலை = நீ என்னை அன்றி இல்லை


1 comment:

  1. Very nice :)

    One small request
    சொல் பிரித்தது பாடல் தந்தால் மனனம் செய்ய உதவும்

    ReplyDelete