Tuesday, March 17, 2015

திருவாசகம் - திருச் சதகம் - நாடக வேஷம்

திருவாசகம் - திருச் சதகம் - நாடக வேஷம் 


ஒருவன் நாடகத்தில் இராஜா வேஷம் போடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்குத் தெரியும் அவன் இராஜா இல்லை என்று. அது ஒரு நடிப்பு என்று. உள்ளத்தில் ஒட்டாத ஒன்று. ஏதோ வருவான்,  நாலு வசனம் பேசுவான், அன்றைய நடிப்பு கூலியை பெற்றுக் கொண்டு போய் விடவேண்டும்.

தான் உண்மையிலேயே ஒரு இராஜா என்று அவன் நினைத்துக் கொண்டு, எங்கே என் படை, என் மாதிரி , என் செல்வம் என்று கேட்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ?

அது போல,

இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய்

என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.


பொருள்

நாடகத்தால் = நடிப்பால்

உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல

நடித்து = நடித்து

நானடுவே = நான் நடுவே

வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே

புகுந்திடுவான் = புக வேண்டி

 மிகப்பெரிதும் = மிக வேகமாக

 விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்

ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன

மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே

இடையறா = இடைவிடாத

அன்புனக்கென் = அனுப்பு உனக்கு என்

ஊடகத்தே = உள்ளத்தில்

நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக

தந்தருள் = தந்து அருள்வாய்

எம் உடையானே.= என்னை உடையவனே

இறைவனை அடைய அறிவைக் கேட்கவில்லை, ஆற்றலை கேட்கவில்லை....உருகும் அன்பு வேண்டும் என்று  கேட்கிறார்.

"உள்ளம் உருகும் அன்பு படைத்தனை " என்பார் அபிராமி பட்டர்


(உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு 
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் 

துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.)

"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரி நாதர்


(நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.)

"உள்ளி உருகும் அவர்களுக்கு அருளும்" ...என்பார் வள்ளலார் 

உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு 
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும் 
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ 
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.



1 comment:

  1. இந்த உள்ளம் உருகுவது என்றால் என்ன? உன் விளக்கம் தர முடியுமா? எனக்குக் புரியவில்லை.

    ReplyDelete