Saturday, March 7, 2015

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அந்தணரைப் பேணுதி

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அந்தணரைப் பேணுதி 


மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றில் ஆர்வம் இருக்கும். திறமை இருக்கும்.

சிலருக்கு பாட்டு வரும், சிலருக்கு வராது.

சிலருக்கு விளையாட்டு நன்றாக வரும், சிலருக்கு ஒரு எடுத்து வைக்க சோம்பேறித்தனமாக இருக்கும்.

சிலருக்கு உழைக்கப் பிடிக்கும்...அவர்களை கொண்டு போய் ஒரு அறையில் உட்கார வைத்து பெரிய கணக்கு புத்தகங்களைக் கொடுத்து நாள் முழுவதும் உட்கார்ந்து கணக்குப் பாரு என்றால் ஓடி விடுவார்கள்.

இப்படி ஒவ்வொருவர்க்கும் ஒரு குணம் இருக்கும்.

அந்தணர் என்பவர் யார் ?

படிப்பில் ஆர்வம் உள்ளவர், நல்லது கெட்டதுகளை ஆராய்வதில் முனைப்பு உள்ளவர்,  தேடுதல் மனம் படைத்தவர், வருவதை முன்கூட்டியே எப்படி அறிவது என்பதில்   ஆர்வம் உள்ளவர், அற நெறியில்  நிற்பவர்.

இப்படிப் பட்ட அந்தணர்கள் திருமாலை விடவும், சிவனை விடவும், பிரமாவை விடவும், ஐந்து பூதங்களை விடவும் உயர்ந்தவர்கள், அவர்களை மனதால் விரும்பு என்று உபதேசத்தை தொடங்குகிறார் வசிட்டர்.

பாடல்

‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

பொருள்

‘கரிய மாலினும் = கருப்பு நிறம் கொண்ட திருமாலினும்

கண்ணுத லானினும் = நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும்

உரிய தாமரை மேல் உரைவானினும் = தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும்

விரியும் பூதம் ஓர் ஐந்தினும் = நாளும் விரிந்து கொண்டே போகும் ஐந்து பூதங்களை விடவும்

மெய்யினும் = உண்மையைக் காட்டிலும்

பெரியர் அந்தணர் = பெரியவர்கள் அந்தணர்

பேணுதி உள்ளத்தால் = அவர்களை உள்ளத்தால் பேணுதி

பேணுதல் = விரும்புதல், விரும்பி காப்பாற்றுதல் என்றும் கூறுவர்

தந்தை தாய் பேண் 

கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுகன்நிறை கனி பேணி 

பிணை, பேண் என்ற சொற்கள் பெட்பு என்ற ஆசையை குறிக்கும்  என்பார் தொல்காப்பியர் 





1 comment:

  1. அந்தணர் என்ற சொல்லின் பொருள் நீ சொல்கிறாய், நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கம்பர் என்ன சொல்கிறார்?

    ReplyDelete