Saturday, March 7, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?


இன்று புதியதாய் பிறந்தோம், சென்றது இனி மீளாது என்று பாரதி சொன்னான். (பார்க்க முந்தைய ப்ளாக்).

அப்படி என்றால் நாம் காலம் காலமாக கர்மா என்று சொல்லிக் கொண்டு வருகிறோமே அது என்ன ஆகும் ?

மறு ஜென்மம், பாவம்  புண்ணியம், இருவினை, எழு பிறப்பு, சொர்க்கம் , நரகம் என்றெல்லாம் சொல்லக்  இருக்கிறோமே அது எல்லாம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழும் அல்லவா ?

பாரதி சொல்கிறான்....



மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே, மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.


பொருள்

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, .... மேலும் மேலும் நடந்தையே நினைத்து அழ வேண்டாம். தவறு செய்து  விட்டேன்,பாவம் செய்து விட்டேன், இதனால் என்ன ஆகுமோ என்று நினைத்து அழாதீர்கள்.



அந்தோ! .... ஐயோ

மேதையில்லா மானுடரே = அறிவு இல்லாத மானிடரே


மேலும் மேலும் = மேலும் மேலும்

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியகாற் றெம்முள் வந்து = புதிய காற்று எம்முள் வந்து

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியவுயிர் விளைத்தல் கண்டீர் = புதிய உயிர் விளைதல் கண்டீர்

ஆன்மாவென்றே = ஆன்மா என்றே

கருமத் தொடர்பை யெண்ணி = கருமத் தொடர்பை எண்ணி. அதாவது நல்லது செய்தால் நல்லது  நடக்கும்,தீமை செய்தால் தீமை நடக்கும், என்ற கருமத் தொடர்பை எண்ணி

அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே! = அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி = மான் போன்ற விழியுடைய சக்தி தேவி

வசப்பட்டுத் = அவள் வசப் பட்டு

தனைமறந்து வாழ்தல் வேண்டும். = தன்னை மறந்து வாழ வேண்டும்

ஆன்மா , கருமம் என்று மயக்கம் கொள்ளாதீர்கள் என்று  சொல்கிறார்.

நம்மால் ஒத்துக் கொள்ள முடியுமா ? எத்தனை வருடத்திய பழக்கம், படிப்பு.

அத்தனையும் வீண் என்று ஒத்துக் கொள்ள ஒரு தைரியம் வேண்டும். நம்மிடம் இருக்கிறதா  ? பாரதியார் அப்படித்தான்  சொல்லுவார்.நாம நம்ம வேலையப்  பார்ப்போம்  என்று கிளம்பி விடாமல் சற்று  சிந்திப்போம்.

ஒரு வேளை நாம் நம்பியவை தவறாக இருந்தால்...இன்றே மாற்றிக் கொள்ளலாமே ?





No comments:

Post a Comment