Tuesday, April 14, 2015

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை 


கணவனுக்கு சர்க்கரை வியாதி. இனிப்புப் பண்டங்களை சுவைக்க முடியாது. அதற்காக மனைவியும் இனிப்பு சாபிடாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும் எத்தனை நாள் இருக்க முடியும் ?

வாழ் நாள் பூராவும் இருந்தாள் காந்தாரி.

கணவனுக்கு கண் தெரியாது என்று அறிந்ததும், தன் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டாள் . கணவனுக்கு கிடைக்காத காட்சி இன்பம் எனக்கும் வேண்டாம் என்று வாழ் நாள் பூராவும் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் . கணவன் மேல் அவ்வளவு அன்பு.

காந்தாரிக்கும் திருதராஷ்டினருக்கும் 100 பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படி ? வருடத்திற்கு ஒன்று என்றாலும் நூறு வருடம் ஆக வேண்டுமே ?

காந்தாரியும், குந்தியும் ஒரே சமயத்தில் கருவுற்றார்கள். முதலில் குந்திக்கு பிள்ளை பிறந்தது.

இதை அறிந்த காந்தாரி , பொறாமையால், தன் வயிற்றில் கல்லால் இடித்துக் கொண்டாள் . அதனால் அவளின் கர்ப்பம் கலைந்தது. உதிரம் வெளிப்பட்டது. அந்த உதிரத்தை 100 கலன்களில்  சேமித்து வைத்தார்கள். அதனோடு கூட வெளிப்பட்ட திசுக்களையும் தனியாக சேர்த்து வைத்தார்கள். வியாதன் என்பவன்  கை படாமல் அவற்றை வளர்த்து 100 பிள்ளைகளாகச் செய்தான்.

இதைத்தான், பொறாமையில் காரியம் செய்தால் , "காந்தாரி இடித்துக் கொண்டு பிள்ளை பெற்றது போல " என்று சொல்லுவார்கள்.

பாடல்


அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற் 
பெற்றனள், குந்தி' என்னும் பேர் உரை கேட்ட அன்றே, 
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு 
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.


பொருள்

அற்றனள் துயரம் எல்லாம் =துன்பம் எல்லாம் தொலைத்தாள்

அருந் தவப் பயனால் = தான் செய்த பெரிய தவத்தால்

மைந்தற் பெற்றனள், குந்தி' = மைந்தனைப் பெற்றனள் குந்தி

என்னும் பேர் உரை கேட்ட அன்றே = என்ற பெரிய செய்தியைக் கேட்ட உடனே

உற்றனள் பொறாமை = பொறாமை உற்றாள் (காந்தாரி)

கல்லால் = கல்லால்

உதரம் = வயறு

உள் குழம்புமாறு =உள்ளே குழம்புமாறு

செற்றனள் = இடித்துக் கொண்டாள்

 தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் = தனக்கு நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்காமல்

.
இதில் உள்ள நுண்ணிய பொருளை சிந்திப்போம்:

பொறாமை - மற்றவர்கள் நன்மை அடைவதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமை. 

பொறாமை கொண்டவன் தனக்குத் தானே தீமை தேடிக் கொள்வான். காந்தாரி  கல்லால் தன்  வயிற்றில் அடித்துக் கொண்டாள் குந்திக்கு என்ன தீங்கு வந்து விடும் ?  துன்பம் காந்தாரிக்குத் தான்.  பொறாமை  யாரிடம் இருக்கிறதோ அது அவர்களுக்குத்தான்  தீமை செய்யும். 

இரண்டாவது, பொறாமை கொண்டவர்கள் எது சரி எது தவறு என்று அறியமாட்டார்கள். "ஆக்கமும் கெடும் சிந்தியாதாள் " என்றார் வில்லிபுத்துராழ்வார்.  பொறாமை அறிவை மறைக்கும். 

மூன்றாவது, பொறாமை கொண்டவனுக்கு தீமை விளைவிக்கும். பொறாமையில்  இருந்து விளைவது ஊருக்குத் தீமை விளைவிக்கும். பொறாமையில் பிறந்தவர்கள் கௌரவர்கள். அவர்களால் அரச குலம் முற்றாக  அழிந்தது. 

நான்காவது, பொறாமை கஞ்சத் தனத்தை  தரும்.யாரும் நன்மை அடைந்து விடக் கூடாது  என்று நினைக்கும். எல்லாம் தனக்கே என்று நினைக்கும். 

பாண்டவர்கள் ஐந்து வீடுதான் கேட்டார்கள்.  ஐந்து வீடு கொடுத்து இருந்தால் சண்டையே இல்லை.  ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கூறினான் துரியோதனன். 35,00,000 பேர் மாண்டு போனார்கள்....ஐந்து வீட்டுக்காக. 

பொறாமை தந்த கஞ்சத்தனம். 

எது வந்தாலும் வரலாம், பொறாமை வரவே கூடாது. 

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை என்ற ஒரு பாவி நம் செல்வத்தை  அழித்து, தீராத துன்பத்தில் நம்மை தள்ளி விடும் என்கிறார்  வள்ளுவர்.

குந்தியின் பெருமை கண்டு பொறாமை கொண்ட காந்தாரியின் செயல் அவளின்  பிள்ளைகளை  கொன்று,அரசை இழந்து, தீராத பழியையும் தேடித் தந்தது. 

ஒரு பாட்டில் இவ்வளவு அர்த்தம் - என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. இன்னும் எவ்வளவு  அர்த்தங்களோ. இப்படி எத்தனையோ பாடல்களைக் கொண்டது வில்லிப்புத்துராழ்வார் அருளிச் செய்த மகா பாரதத்தில். 

நேரம் இருப்பின்,  மூல நூலை படித்துப் பாருங்கள். 

பருக பருக திகட்டாத தேன்.  


No comments:

Post a Comment