Wednesday, April 15, 2015

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?


இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? கருப்பா? சிவப்பா ? உயரமா ? குள்ளமா ? 

நமக்கு ஒன்றும் தெரியாது. சிலைகளும் படங்களும் யாரோ கற்பனையில் செய்தவை. நேரில் பார்த்து வந்து யாரும் அதைச் செய்யவில்லை. 

எனவே, இறைவன் நேரில் வந்தால் கூட நமக்கு அவன் இறைவன் என்று தெரியாது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்வோமா என்றால் அதுவும் சந்தேகம்தான். 

உனக்கு  எப்படித் தெரியும் என்று அவர்களை மேல் கேள்வி கேட்போம்.

அப்படி ஒரு முறை நிகழ்ந்தது. 

இறைவன் நேரில் வந்தான். 

அங்கிருத்த பெரியோர்கள் எல்லாம் அவன் இறைவன் என்றே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு சிலர் ஏற்றுக்  கொள்ளவில்லை. அவர்களில் ஒருவன் சிசுபாலன். 

வந்த இறை கண்ணன். 

ஏற்றுக் கொண்ட பெரியவர்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர்.

நடந்த இடம் தர்மனின் அசுவமேத யாகம் பூர்த்தி அடைந்த மண்டபத்தில், முதல் தாம்பூலம் யாருக்கு தருவது என்ற சிக்கல் எழுந்த போது .

 எல்லோரும் கண்ணனுக்கே முதல் தாம்பூலம் என்று ஏற்றுக் கொண்டார்கள். சிசு பாலனுக்கு பொறுக்கவில்லை. 

அரசர்கள் இருக்கும் அவையில் ஒரு இடையனுக்கு முதல் தாம்பூலமா என்று கொதித்து எழுந்தான். 

பாடல் 

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார், 
                                புறங்கானில் வாழ் 
கோபாலரோ'' என்று உருத்து, அங்கு அதிர்த்து, 
                                கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின் 
                                எய்தி, ஏழ் 
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.

பொருள் 

பூபாலர் அவையத்து = பூலோகத்தை காக்கும் அரசர்கள் இருக்கும் அவையில் 

முற்பூசை பெறுவார் = முதல் பூசை (தாம்பூலம்) பெறுவது 
 
புறங்கானில் = ஊருக்குப் புறத்தே காட்டில் 

வாழ் = வாழும் 
 
கோபாலரோ'' = மாடு மேய்பவனோ (கோ என்றால் பசு. பாலர் என்றால் காப்பவன்) 

என்று உருத்து = என்று கூறி 

அங்கு அதிர்த்து = அதிரச் சொல்லி 

கொதித்து = உள்ளம் கொதித்து 

ஓதினான் = கூறினான் 

காபாலி = சிவன் 

முனியாத = கோபம் கொள்ளாத 

வெங் காமன் = மன்மதன் 

நிகரான  = நிகரான , சமமான  

கவின் எய்தி =  அழகு கொண்ட  

ஏழ் தீ பால் = ஏழு தீவுகளிலும் 

அடங்காத புகழ் = அடங்காத புகழ் கொண்ட 

வீர = வீரனான 

கயம் அன்ன = யானையைப் போன்ற பலம் பொருந்திய 

சிசுபாலனே = சிசுபாலனே 


அது கதை. 

அழகு, வீரம், புகழ் இருக்கிறது. ஆணவம் தலைக்கு ஏறுகிறது. என்னை விட உயர்ந்தவன்  யார் என்ற எண்ணம் வருகிறது. 

இறைவனே வந்தால் கூட ஆணவம் கண்ணை மறைக்கிறது. 

திருமாலை இடையன்   என்று சொல்லி அழிந்தான் சிசுபாலன். 

திருமாலை மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

ஆணவம். 

ஆணவம் கண்ணை மறைக்கிறது. அறிவை மயக்குகிறது. அழிவைத் தருகிறது. 

தெளிந்த பார்வை வேண்டுமா ? எங்கேயாவது ஆணவம் இருக்கிறதா என்று பாருங்கள். ஆணவம் இருக்கும்வரை உண்மை தெரியாது. 

இறைவன் அருகில் இருந்தால் கூட உணர முடியாமல் போகும். 

யாருக்குத் தெரியும் ?  இறைவனுக்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள்  என்று ?


No comments:

Post a Comment