Wednesday, April 29, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.



1 comment: