Monday, April 20, 2015

வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம்

வில்லி பாரதம் -  பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம் 


நாத்திகம் இன்று நேற்று வந்தது அல்ல. மகாபாரத காலத்தில் இருந்தே இருக்கிறது.

அஸ்வமேத யாகம் முடிந்தபின் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

எல்லோரும் கண்ணனுக்கே என்று கூறினார்கள் - சிசுபாலனைத் தவிர.

சிசுபாலன் கண்ணனுக்கு முதல் மரியாதை தரக் கூடாது என்று கூறி வாதாடுகிறான்.

ஒரு தாய் போல முலைப் பால் தர வந்த பூதனை என்ற அரக்கியை இரக்கம் இல்லாமல் கொன்றவன் கண்ணன். பால், நெய், வெண்ணை முதலியவைகளை திருடித் தின்றவன் கண்ணன். அதற்காக உரலில் கட்டுண்டு அழுதவன் கண்ணன். அவனுக்கா முதல் மரியாதை என்று வெகுண்டு எழுகிறான்.

பாடல்

'ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
                               தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
                                உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
                                நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
                                இருந்து அழுதான்!


(http://interestingtamilpoems.blogspot.in/2015/04/blog-post_31.html)

பொருள்

'ஈன்ற = பெற்ற

தாய் = தாயின்

வடிவம் கொண்டு = வடிவம் கொண்டு

உளம் உருகி = உள்ளம் உருகி

இணை = இணையான

முலைத் தடத்து அணைத்து = மார்போடு அனைத்து

அமுதம் போன்ற பால் கொடுப்ப = அமுதம் போன்ற பால் கொடுக்க முனைந்த போது

பொழி முலைப் பாலோ = பொழிந்த முலைப் பாலோடு

பூதனை = பூதனை என்ற அரக்கியின்

உயிர்கொலோ, நுகர்ந்தான் = உயிரையும் சேர்த்து உறிஞ்சினான்

சான்ற பேர் உரலால் = பெரிய உரலால்

உறிதொறும் = உறிகள் தோறும்

எட்டாத் தயிருடன் = எட்டாத தயிருடன்

நறு நெய் = நல்ல நெய்

பால்  = பால்

அருந்தி = அருந்தி

ஆன்ற தாய் = சிறந்த தாயான யசோதை

கண்டு = கண்டு வருந்தி

வடத்தினின் பிணிப்ப = கயிறால் கட்ட

அணி உரலுடன் = உரலுடன்

இருந்து அழுதான்! = இருந்து அழுதான்


உலகளந்த பெருமாள் , சிசுபாலன் கண்ணுக்கு, திருடனாகத் தெரிந்தார்.

உலகம் அவரவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

ஆணவம் தலைக்கு ஏறினால் அருகில் உள்ள ஆண்டவன் கூடத் தெரியாது.


No comments:

Post a Comment