Sunday, April 5, 2015

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும்

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும் 


நம் புலன்களுக்கு இன்பம் தருவன பல.

அவற்றில் சில, ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும். இசை, காதுக்கு மட்டும் இன்பம் தரும். அதை தொட முடியாது, நுகர முடியாது.

நல்ல உடை கண்ணுக்கும், உடலுக்கும் இன்பம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும், அணியும் போது உடலுக்கும் சுகமாக இருக்கும்.

லட்டு - பார்க்க அழகாக இருக்கும், வாயில் போட்டால் சுவையாக இருக்கும். அதில் உள்ள ஏலக்காய் , கிராம்பு போன்றவை நல்ல மணத்தைத் தந்து மூக்குக்கும் இன்பம் தரும்.

இப்படி ஒரு புலனுக்கு, இரு புலனுக்கு , மூன்று புலனுக்கு என்று இன்பம் தரும் பொருள்கள் உள்ளன.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் ஒன்று உண்டா  என்றால் , உண்டு.

அது ஆணுக்கு பெண்ணும், பெண்ணும் ஆணும் தரும் இன்பம்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

என்பார் திருவள்ளுவர்.  கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், தொட்டு அறியும்  ஐந்து புலன்களுக்கு இன்பமும் வளையல் அணிந்த அவளிடம் உள்ளது என்கிறார் வள்ளுவர்.

அது ஆணுக்கும் பொருந்தும்.

ஆணும் , பெண்ணும் சேர்ந்து அடையும் அந்த சிற்றின்பம் , பேரின்பத்திற்கு வழி வகுக்கும் என்கிறது இன்னிலை என்ற நூல்.

திருமணம் ஆன புதிதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காமத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அது குறையும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக முக்தி அடைய உதவுவார்கள்.

காம விருந்து படைத்த கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாவார்கள். எப்போது என்றால், கலவி இன்பத்தில் குற்றம் ஏதும் வந்து விடாமல்,  அளவு கடக்காமல் இருந்தால். குற்றம் வராமல் என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ நாடாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்தல்.

அப்படி குற்றம் இல்லமால், அளவோடு காமத்தை சுகிப்பவர்கள்,பின்னாளில் முக்தி அடைய ஒருவருக்கு ஒருவர் துணையாவார்.

அந்த சிற்றின்பமே அவர்களுக்கு ஒரு படகு போல அமைந்து முக்தி கரை சேர்க்கும்.

இளைமையில், மணம் புரிந்த போது இருந்த இளமையும் அழகும் அதன் மூலம் கிடைக்கும் கலவி இன்பமும், கசப்பான மருந்துக்கு இனிப்பு தடவி தருவது போல.

பாடல்

துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.

பொருள்

துணையென்ப = துணை என்று சொல்லுவார்கள்

காம விருந்துய்ப்பார் = காம விருந்து உய்ப்பார் (அடைவார்)

தோமில் = குற்றம் இல்லாமல்

இணைவிழைச்சின் = கலவி இன்பத்தில்

மிக்காகா ராகல் = அளவுக்கு அதிகமாக போகாமல் இருந்தால்

புணைதழீஇக் = ஆற்றைக் கடக்க உதவும் புணை போல (படகு போல )

கூட்டுங் கடுமிசையான்  = கசப்பான மருந்தை

கட்டியிற் கொண்டற்றால் = கற்கண்டு கொண்டு அதன் ஆற்றாலால் (கசப்பை மறைப்பது போல )

வேட்டபோழ் தாகு மணி = மனந்த போது உண்டான அழகு

சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி வகுக்கும். 


1 comment:

  1. குற்றம் இல்லாமல், அளவு கடக்காமல் என்று இரண்டு நிபந்தனைகளை போட்டு விட்டார்! அதன் பொருள் என்ன என்பது கால மாறுபாட்டில் மாறி வந்திருக்கிறது.

    நம்மை சிந்திக்க வைக்கும் பாடல். நன்றி.

    ReplyDelete