Tuesday, May 26, 2015

பிரபந்தம் - கொங்கை நல்லார் சிரியா முன்னம்

பிரபந்தம் - கொங்கை நல்லார் சிரியா முன்னம் 


நிலையாமை பற்று நம் முன்னோர்கள் ரொம்பவும் சிந்தித்து இருக்கிறார்கள்.

செல்வத்தின் நிலையாமை, இளமையின் நிலையாமை பற்றி ரொம்ப சிந்தித்து இருக்கிறார்கள்.

வயதாகி, படுக்கையில் விழுந்து, எழுந்து நடக்கக் கூட முடியாமல் இருக்கும் போது நாம் நேசித்தவர்கள், நம்மை நேசித்தவர்களே கூட நம்மை சுற்றி நின்று ஏளனம் செய்யும் நிலை வரும்.

மற்றவர்களுக்கு பாரமாய் ஆகும் காலம் வரும்.

கட்டிய மனைவியே 'கிழம் எப்போது போகும்' என்று சலிக்கும் காலம் வரும். அந்த காலம் வருவதற்கு முன்னே பத்ரிநாத்தில் உள்ள நாராயணனை வணங்குகள் என்று கூறுகிறார் திருமங்கை ஆழ்வார்.



பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே.

பப்ப = அப்பப்பா

அப்பர் = பெரியவர் (பெருசு)

மூத்த ஆறு = வயதாகும் விதம் (ஆறு = வழி)

பாழ்ப்பது = பாழானது

சீத்திரளை யொப்ப = சீழானது திரண்டு

ஐக்கள்போத வுந்த  = வாந்தி போல வந்து (ஐ = வாந்தி)

உன் = உங்களோட

தமர்க் = உறவினர்

காண்மினென்று = பார்த்துக் கொள்ளுங்கள் என்று

செப்பு = சொம்பைப்

நேர் = போன்ற

மென் = மென்மையான

கொங்கை = மார்புகளை கொண்ட

நல்லார் = நல்ல பெண்கள்

தாம் சிரியாத முன்னம் = தாங்கள் சிரிப்பதற்கு முன்னம்

வைப்பும் = சேர்த்து வைத்தவைகளும்

நங்கள் = நம்முடைய

வாழ்வு மானான் = வாழ்வும் ஆனான்

வதரி வணங்குதுமே = பத்ரிநாத்தில் உள்ள நாராயணனை வணங்குவோமே


மனைவி நம் மேல் மரியாதை வைத்து இருப்பாள், நமக்கு முடியாத காலத்தில் அன்புடன் பணிவிடை செய்வாள் என்றெல்லாம் கனவு காணாதீர்கள். அவளும் ஒரு மனுஷிதானே. அவளுக்குள்ளும் அருவருப்பும், ஆயாசமும், சலிப்பும் இருக்கும். கிண்டலும், நக்கலும் அவளுக்குள்ளும் இருக்கும். 'அந்த காலத்தில் கிழம் என்ன பாடு படுத்தியது ' என்ற எண்ணம் அவளுக்குள் எழாது என்று சொல்ல முடியாது.  

நம் கண் முன்னமேயே நம் மனைவி நம்மை பார்த்து , நம் இயலாமையைப் பார்த்து  சிரிக்கும் காலம் வரும். 

இதற்கா இந்தப் பாடு, விட்டு விட்டு அவனை வணங்குவோம் என்கிறார் ஆழ்வார். 

கடினமான காரியம் தான்...அன்பான மனைவியை அப்படி நினைத்துப் பார்ப்பது...இருந்தும் அதுதான் உண்மையாக இருக்குமோ ?


1 comment:

  1. "செப்பு நேர் மென் கொங்கை நல்லார்" என்பது மனைவி என்று என்னுவானேன்? "இளம் பெண்கள்" என்று கொண்டால் என்ன? (பெரியவர் சொல்கிறார் ... "அந்தக் காலம் மாதிரி இன்னும் சைட் அடிக்க முடியாத நிலை வரும் முன்னம்...")

    ReplyDelete