Friday, June 5, 2015

திருவாசகம் - நெறி அல்லா நெறி

திருவாசகம் - நெறி அல்லா நெறி 


நமக்கு கை கால்கள் நன்றாக இருக்கிறது, கண் தெரிகிறது, மற்ற உறுப்புகள் எல்லாம் சரியாக இயங்குகின்றன, அமைதியான இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்,  பெற்றோர்கள், அன்பான உடன் பிறப்பு, தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் படித்திருக்கிறோம்...

இது எல்லாம்  சம்பாதித்துப் பெற்றதா ?

எப்படியோ நமக்கு கிடைத்தது. நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை இவை எல்லாம்  கிடைக்க.

பின் எப்படி இவை நமக்கு கிடைத்தது ? என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர். "அச்சோவே" என்று அவருக்கு ஆச்சரியம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும்....

வெளிய விட்ட மூச்சு மீண்டும் உள்ளே போகிறது...அட !

பசிக்கிறது, சாப்பிடுகிறோம்...அதுவே செரிமானமாகி விடுகிறது...அட !

வாழ்வில் எத்தனை ஆச்சரியங்கள் ....

இது போக இறை அருளும் கிடைத்து விட்டால் ? ஆச்சிரியதிற்கு அளவே இல்லை.

அச்சோவே என்று பத்து பாடல் பாடி இருக்கிறார் மணிவாசகப் பெருந்தகை...அத்தனையும்  ஆச்சரியம்தான்

அதில் இரண்டாவது பாடல்...

இந்த வாழ்வின் குறிக் கோள் என்ன ? எதற்காகப் பிறந்தோம் ? என்ன செய்யப் படித்தோம் ? இந்த  வேலை,  கல்யாணம், பிள்ளைகள், சொத்து, சம்பாத்தியம் எல்லாம் எதற்காக ? இந்த வாழ்வின் குறிக்கோள் (objective ) என்ன ?

எதற்காக இறைவன் அல்லது இயற்கை நம்மைப் படைத்தது ? நம் மூலம் அது என்ன  நினைக்கிறது ?

ஒன்றும் இல்லை.

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று   கிடையாது. நீங்களாகவே கற்பித்துக் கொண்டால்தான் உண்டு. அப்படி நீங்கள் நினைக்கும் அர்த்தமும் மாறிக் கொண்டே இருக்கும்.
   
வாழ்கையை ரொம்ப தீவிரமாக (serious ) எடுத்துக் கொண்டு சிரமப் படாதீர்கள். இது ஒரு விளையாட்டு. அவ்வளவுதான்.

இறைவனுக்கு அல்லது  இயற்கைக்கு ஒரு  குறிகோளும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுக்குத்தான்.

இதில் என்ன நான் பெரியவன், சிறியவன், உயர்ந்தவன் , தாழ்ந்தவன்,  உள்ளவன்,இல்லாதவன் என்று அடி தடி சண்டை.

விளையாட்டாக எடுத்துக் கொண்டு போங்கள் . வாழ்கை லேசாக இருக்கும்.

மணிவாசகர் .சொல்கிறார்..இறைவனுக்கே ஒரு குறிக்கோளும் கிடையாதாம். சும்மா  கூத்து அடித்துக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கே இல்லை  என்றால் நீங்கள் ஏன்  கவலைப் படுகிறீர்கள். ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருங்கள்.

சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

பாடல்

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பொருள்

நெறியல்லா நெறிதன்னை = நெறி  அல்லாத நெறி தன்னை. நெறி என்றால் வழி. வழி அல்லாத வழி என்றால் என்ன ? பெரியவர்கள் எது சொன்னாலும் நல்லதையே சொல்லுவார்கள். நினைப்பார்கள். அவர்கள் நெறி என்று சொன்னால் அது நல்ல நெறியையே குறிக்கும். எனவே "அல்லாத நெறி" என்றால்  தீய வழி. " நல்ல வழி அல்லாதவழியை " அதாவது தீய வழியை.  தீய வழி என்று  கூட தன் வாயால் சொல்ல மறுக்கிறார் மணிவாசகர்.  தீய வழி என்று சொன்னால்,  அது என்ன வழி என்று குதர்க்கம் பேசும் ஆட்கள் இருப்பார்கள். அது எப்படி தீய வழி ஆகும் என்று தர்க்கம் பண்ணுவார்கள். எனவே, நல்ல வழியை மட்டும் சொல்லி விட்டு, அது அல்லாதது தீய வழி என்று சொல்கிறார் அவர்.

தீமைகளை விவரித்துச் சொல்லக் கூடாது. ஏன் என்றால், அப்படி விவரித்துச் சொன்னால் , நாளடைவில் நமக்கு அதில் ஒரு ருசி வந்துவிடும். அப்படி செய்து பார்த்தால்  என்ன என்று  தோன்றும். ஒரே முறை செய்து பார்ப்போம் என்று மனம் நினைக்கும்.   எனவே தான் "நெறி அல்லாத நெறி தன்னை" என்றார். 

வழியே ஏகுக , வழியே மீளுக என்றாள் ஔவைப் பாட்டி.

நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம்.

வழியே என்று தானே சொன்னாள் , நல்ல வழி என்று சொல்லவில்லையே என்று வாதம் பண்ணக் கூடாது. வழி என்று பெரியவர்கள் சொன்னால் அது நல்ல  வழிதான்.


நெறியாக நினைவேனைச் = அதையே நெறியாக நினைக்கும் என்னை. நெறி அல்லாத  நெறியை, நெறியாக நினைக்கும் என்னை. அதாவது, நல்ல வழி இல்லாத வழியை நல்ல வழி என்று நினைக்கும் என்னை.


சிறுநெறிகள் சேராமே = சிறு நெறிகள் சேராமே. சிற்றின்பத்தை அடையும் வழியில் செல்லாமல் 

திருவருளே சேரும்வண்ணம் =  திருவருளே சேரும் வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன் = ஒரு குறிக்கோளும் இல்லாத கூத்தன். ஒரு நோக்கமும் இல்லாமால் ஆடிக் கொண்டிருக்கிறான்.  ஆனந்தம்,ஆட்டம் வருகிறது. அவ்வளவுதான்.

தன் கூத்தையெனக் = அவனுடைய கூத்தை

அறியும் வண்ணம் = நான் அறிந்து கொள்ளும் படி

அருளியவா றார் பெறுவார்= அருளியவாறு யார் பெறுவார்

 அச்சோவே = அய்யோ  !

நான் அறிந்து கொண்டது மாதிரி யார்  அறிந்து கொள்வார் என்று ஆச்சரியப் படுகிறார்.

நல்ல வழியில் சென்றால் கூத்தனின் கூத்து  புரியும்.

சிற்றின்பத்தை நோக்கிப் போகாமல் இருக்கும் வழி சரியான வழி.

செல்லத் தொடங்குகள்...எல்லாம் புரிபடும்.




2 comments:

  1. "குறியொன்றும் இல்லாத கூத்தன்" - கடவுளுக்கே ஒரு குறி இல்லை என்றால், நமக்கு நடப்பது எல்லாமே random என்றால்... ஒரு புறம் நம் வாழ்வை முக்கியமாக எண்ணித் துன்புறக்கூடாது என்ற பொருளும், இன்னொரு புறம் "கடவுளை ஏன் தொழ வேண்டும்?" என்ற கேள்வியும் எழுகின்றன.

    என்ன ஒரு பாடல்!

    ReplyDelete
  2. Really interesting Sir. I like your way of explanations. Your name Sir. I want to reado all your tamil works.

    ReplyDelete