Tuesday, June 16, 2015

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?


நமக்கு ஒரு துன்பம் வரும்போது, "ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நிகழ்கிறது...நான் என்ன பாவம் செய்தேன்...யார் குடியையும் கெடுத்தேனா, பொய் சொன்னேனா, கொலை களவு செய்தேனா...எல்லாருக்கும் நல்லது தானே செய்தேன்...எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை " என்று மனம் சோர்ந்து வாடிப் போவோம்.

அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள் ஆறுதலும் தேறுதலும் தருகின்றன.

எப்படி ?

முதலாவது, நமக்கு வந்த துன்பங்கள் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. நம்மை விடவும் அதிகமான, மிக அதிகமான துன்பங்கள் அடைந்தோர் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதைப் பார்க்கும் போது நம் துன்பம் அப்படி ஒன்றும் தாங்க முடியாத ஒன்று அல்ல என்று தோன்றும்.

இரண்டாவது, அப்படி துன்பம் வந்தபோது அதை அந்த இலக்கியத்தில் வந்த கதா பாத்திரங்கள் எப்படி சமாளித்தன என்று கூறி நம்மை வழி நடத்தும்.

இப்படி நம் மனதுக்கு இலக்கியங்கள் இதம் தரும்.

மகா பாரதம்.

இதிகாசங்கள் மூன்று.

இராமாயணம், மகா பாரதம், சிவ இரகசியம்.

இதில் மகா பாரதத்துக்கு மட்டும் தான் மகா என்ற அடை மொழி உண்டு.

ஏன் என்றால் அதில் இல்லாத தர்மம் இல்லை.

தர்மன் சூதாடி, நாடு நகரம் எல்லாம் இழந்து, அவமானப் பட்டு, காட்டில் வந்து இருக்கிறான்.

ஒன்றல்ல, இரண்டல்ல பன்னிரண்டு வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள், ஒரு சக்ரவர்த்தி, அத்தனையும் இழந்து, காட்டில் வாழ்வது என்றால் எப்படி இருக்கும்.

அதிலும் ஒரு நன்மை விழைந்தது. பலப் பல முனிவர்களும், சான்றோர்களும் தருமனை  சந்தித்து அவனுக்கு ஆறுதலும், தேறுதலும் , உபதேசமும் செய்தார்கள்.

12 வருடங்கள். மிகப் பெரிய ஞானிகள் தந்த அரிய பெரிய அறிவுரைகள். யாருக்குக் கிடைக்கும்.

அப்படி கிடைத்த ஒன்று தான் நளவெண்பா.

தருமன், வியாச முனிவரிடம் கேட்கிறான்....

"கண்ணை இழந்து, மாய சூது ஆடி, மண்ணை இழந்து, காட்டுக்குப் போய் , என்னை போல துன்பப் பட்டவர்கள் யாரும் உண்டா "

என்று வருந்தி வினவுகிறான்.

அப்போது , தருமனுக்கு அவனை விட துன்பப் பட்ட நள மன்னனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

நள வெண்பா....படிக்கப் படிக்கப் திகட்டாத பாடல்கள்.

மிக எளிமையான, இனிமையான, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் வெண்பாக்கள்.

படிக்கும் போது நம்மை மிக மகிழச் செய்யும் பாடல்கள். அருமையான உதாரணங்கள், அற்புதமான சொற் தெரிவுகள்....

காதல், ஊடல், கூடல், வெட்கம், நாணம், பரிவு, பிரிவு, துயரம், ஏக்கம் என்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அத்தனை நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கும் நூல்.

அதிலிருந்து சில பாடல்கள் இன்னும் வரும் ப்ளாகில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

பொருள்

கண்ணிழந்து = கண்ணை இழந்து. இங்கே கண் என்று கூறியது அறிவை. அறிவுக் கண்ணை. கண் பார்க்க உதவுகிறது. அது போல அறிவும் உண்மையைக் காண உதவுகிறது.

 மாயக்  = மாயமான

கவறாடிக் = கறவு + ஆடி = சூது ஆடி

காவலர் தாம் = அரசர்கள் தான்

மண்ணிழந்து = மண்ணை இழந்து

போந்து = போய்

வனம் = காட்டை

நண்ணி  = சேர்ந்து

விண்ணிழந்த = வானில் இருந்து விழும்

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூல் = பூனூலை அணிந்த

மார்ப  = மார்பனே (வியாசனே )

மேதினியில் = உலகில்

வேறுண்டோ = வேறு யாராவது இருக்கிறார்களா

என்போல் = என்னைபோல

உழந்தார் இடர்.= துன்பத்தில் உழன்றவர்கள் ?

என்னமோ தனக்கு மட்டும் தான் துன்பம் வந்தது போல் நம்மை போலவே தருமனும் நினைக்கிறான்.

வியாசன் சொல்லத் தொடங்குகிறான்.

என்னவென்று மேலும் சிந்திப்போம்



1 comment: