Saturday, June 13, 2015

இராமாயணம் - பிறவியின் பகைவன்

இராமாயணம் - பிறவியின் பகைவன் 



இறைவனை யாரும் கண்டதில்லை. இறைவனைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப் பட்டிருக்கிறோம். அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று தெரியாது.

அப்படி இருக்கும் போது , காணாத ஒன்றின் மேல் எப்படி அன்பு, பக்தி எல்லாம் வரும் ?

வீடணன் எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாய் இல்லை. இராவணனை விட்டு விட்டு இராமனிடம் செல்வதாக முடிவு செய்து விட்டான்.

"நான் இராமனை இதற்கு முன்னாள் பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. ஆனாலும் அவன் மேல் அன்பு தோன்றக் காரணம் எதுவும் தெரியவில்லை. எலும்பு வரைக் குளிர்கிறது. நெஞ்சு உருகுகிறது. இந்த புன்மையான பிறவியின் பகைவன் அவன் போலும் "

என்று உருகுகிறான்.

பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்

'முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டதில்லை

கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி முன்பு கேட்டது கூட இல்லை

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு வரக் காரணம் தெரியவில்லை

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்

நெஞ்சு உருகுமேல் = என் மனம் உருகுகிறது

அவன் = இராமன்

புன் புறப் பிறவியின் = புன்மையான பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது .

காணவும் இல்லை.

கேட்கவும் இல்லை.

இருந்தும் அன்பு பிறக்கிறது.

எனவேதான் அரக்க குலத்தில் பிறந்த வீடணனை விபீஷண ஆழ்வார் என்று கொண்டாடுகிறது வைணவம்.

நம்புங்கள், காண்பீர்கள்.

You will see it, when you believe it.



No comments:

Post a Comment