Monday, June 29, 2015

பிரபந்தம் - மணத்தூணே பற்றி

பிரபந்தம் - மணத்தூணே பற்றி 


ஓடுகின்ற தண்ணீரில் நின்று இருக்கிறீர்களா ? பெரிய அலை அடைக்கும் போது கடற்கரையில் கால் நனைத்து இருக்கிறீர்களா ?

தண்ணி அப்படியே இழுத்துக் கொண்டு போவது போல, தள்ளிக் கொண்டு போவது போல இருக்கும் அல்லவா ?

நிற்கவும் முடியாது, அதே சமயத்தில் விழுந்தும் விடுவது இல்லை...இரண்டுக்கும் நடுவில் கிடந்து தத்தளிப்போம். எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொள்ளலாம் போல இருக்கும் அல்லவா ?

அந்த அனுபவம் ஒரு புறம் இருக்கட்டும்.....

வாழ்வில் உங்களுக்கு கிடைத்த வரங்களை, இன்பங்களை எண்ணிப் பாருங்கள்...

முதலில் ஆரோக்கியமாக பிறந்து இருக்கிறீர்கள்...நொண்டி, முடம், குருடு இல்லாமால்,

நல்ல படிப்பு, நல்ல குடும்பம், நல்ல ஊரில் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள், நல்ல நண்பர்கள், நல்ல உறவு, இனிமையான கணவன் மனைவி, பிள்ளைகள், கொஞ்சம் சொத்து...இப்படி எத்தனையோ நல்லவை உங்களுக்கு வாய்த்திருக்கிறது . எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும் என்று சொல்லவில்லை...பொதுவாகவே நமக்கு எல்லாம் கிடைத்து இருக்கிறது....

எத்தனை சந்தோஷம்....எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கூறுவது போல....

இதை எண்ணிப் பார்க்கிறார் குலசேகர ஆழ்வார்...

அவன் அன்பை, அருளை எண்ணி எண்ணி உருகுகிறார்...ஏதோ அவனிடம் இருந்து அருள் , அன்பு வெள்ளம் பொங்கி வருவது போல இருக்கிறது...அந்த வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகாமல் கோவில் மண்டபத்தில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார்...

அப்படி ஒரு அருள் வெள்ளம்....

பாடல்

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 

வாய் = வாய்

ஓர் ஈர் ஐநூறு = இரண்டு ஐநூறு அதாவது ஆயிரம்

துதங்கள் = துதம் என்றால் தோத்திரம். துதித்தல் என்பது  அதிலிருந்து வந்தது. துதங்கள் , அதன் பன்மை. பலப் பல தோத்திரங்கள்.  

ஆர்த்த  = பொங்கி வரும். அல்லது தொடர்ந்து வரும்.

ஆர்த்த பிறவித் துயர் கெட என்பார் மணிவாசகர்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

வளை உடம்பின்  = வளைந்த உடம்பின்

அழல் = தீயின் நாக்கு

நாகம் உமிழ்ந்த  = நாகம் (ஆதி சேஷன் ) உமிழ்ந்த

செந் தீ = சிவந்த தீ

வீயாத = கீழே விழாத

மலர்ச் = மலர்களால் ஆன

சென்னி = தலைக்கு மேல் உள்ள

விதானமே போல் = பந்தல் போல

மேன் மேலும் = மேலும் மேலும்

மிக எங்கும் = எங்கும்

பரந்த = பரந்து விரிந்து

தன் கீழ் = தனக்கு கீழே

காயாம்பூ  = காயாம்பூ

மலர்ப் = மலர்

பிறங்கல் அன்ன  மாலைக் = ஒளி பொருந்திய மாலை

கடி அரங்கத்து = சிறந்த திருவரங்கத்தில்

அரவணையில் = அரவு + அணையில் = பாம்பணையில்

பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்

மாயோனை = மாயோனை

மணத் தூணே பற்றி = மணத்  தூணைப் பற்றிக் கொண்டு

நின்று = நின்று

என்  வாயார = என் வாயார

என்று கொலோ வாழ்த்தும் நாளே! = என்று வாழ்த்துவேனோ

நாம் எல்லாம் கோவிலுக்குப் போனால் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும்  என்று கேட்போம். ஒரு படி மேலே போனால், கொடுத்ததற்கு நன்றி சொல்லப்  போவோம்.

ஆழ்வார் ஒரு படி இன்னும் மேலே போகிறார்.

"நீ நல்லா இருக்கணும் " என்று இறைவனை இவர் வாழ்த்துகிறார். "பாவம் , நீ தான் எவ்வளவு கஷ்டப் படுகிறாய்...நீ நல்லா இருக்கணும்" என்று இறைவனை வாழ்த்துகிறார்.

இரண்டாவது,  மணத் தூணே பற்றி நின்று. வைணவக் கோவில்களில் சந்நிதியில் இரண்டு தூண்கள் இருக்கும். அவற்றிக்கு "திருமணத்தூண்கள் " என்று பெயர்.

பக்தி பெருகும்போது, ஆனந்த வெள்ளம் கரை புரண்டு வரும்போது, பற்றிக் கொள்ள உதவும்  தூண்கள் அவை.

இப்படி கரை புரண்டு வெள்ளத்தை , குலசேகர ஆழ்வார் மட்டும் தான் உணர்ந்தாரா ?

இல்லை . அபிராமி பட்டர் கூறுவார்

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

கரை காணாத வெள்ளம் என்கிறார்.


இதையே அருணகிரிநாதரும் 

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே

தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்று கூறுவார்.

ஆனந்தமான கடல்.

ஒன்றும் இல்லாமலா எல்லோரும் சொல்லி இருப்பார்கள் ?

 


2 comments:

  1. Your analogy across various things really amazing....
    Thank you

    ReplyDelete
  2. Hey man. You just made my day with your writing. Please continue your efforts. Thank you.

    ReplyDelete