Saturday, June 13, 2015

திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.

திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.


முந்தைய ப்ளாகில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். அதில் வரும் ஒரு வரி, "கற்பனவும் இனி அமையும்" என்பது.

அதன் அர்த்தம் என்ன ?

கற்பனவும் + இனி + அமையும் = இனி மேல் கற்க வேண்டியது ஒன்றும் இல்லை. நூல்களை கற்று பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது என்ற தொனியில். படித்தது எல்லாம் போதும். இது வரை படித்தது போதும்...இறைவன் என்பவன் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்ல என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

அமையும் என்ற சொல்ல அபிராமி பட்டரும் கையாண்டிருக்கிறார்.....


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

என்ற பாடலில்


உலகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்றல்ல.

பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லுவார்

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்"  என்று.

இறைவனை உணர முடியும். ஓத முடியாது.

அதாவது, படித்து புரிந்து கொள்ள முடியாது. உணர முடியும்.

கன்றை ஈன்ற பசு எப்படி தன் கன்றை உணர்கிறதோ அப்படி. பசு படித்து அறிவது அல்ல. ஆனாலும் அது உணர்கிறது.

பிறிதொரு இடத்தில் மாணிக்க வாசகர் சொல்லுவார்.


சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


சொல்லிய பாட்டின் பொருள் "உணர்ந்து" சொல்லுவார் என்றார்.

சொல்லிய பாட்டின் பொருள் "அறிந்து " சொல்லுவார் என்று சொல்லவில்லை.

இறை என்பது தனி மனித அனுபவம்.

மனித அறிவுக்கு எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டிய ஒன்று இறை அனுபவம்.


சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

என்பார் மணிவாசகர்.

சொல்லும், பதமும், சித்தமும் செல்லாத இடம் அது.


No comments:

Post a Comment