Saturday, June 6, 2015

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான்

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான் 



பாடல்

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

கொஞ்சம் சீர்  பிரிப்போம் 

என்று கடல்கடைந்தது ? எவ்வுலகம் நீர் ஏற்றது,
ஒன்றும் அதனை உணரேன்  நான், - அன்று
தடைத்து உ டைத்துக் கண்படுத்த ஆழி, இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்.

பொருள்

என்று கடல்கடைந்தது ? = கடலை கடைந்தது எப்போது ?

எவ்வுலகம் நீர் ஏற்றது = எந்த உலகத்துக்காக மாவலியிடம் நீர் ஏற்றது (தானம் பெற்றது)

ஒன்றும் அதனை உணரேன்  நான் = அதெல்லாம் எனக்குத் தெரியாது

அன்று = அன்றொரு நாள்

தடைத்து  உ டைத்துக் = தடைகளை உடைத்து (இலங்கை செல்ல)

கண்படுத்த = நீ துயில் கொள்ளும்

ஆழி இது = கடல் இது ,

நீ = நீ

படைத்து = படைத்து

இடந்து = இகழ்ந்து (தோண்டி எடுத்து )

உண்டு =பிரளய காலத்தில் உண்டு 

உமிழ்ந்த பார் = பின் உமிழ்ந்த பார்

மேலோட்டமாக பார்த்தால் இது தான் பொருள்.  பெரியவர்களின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
 
சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


அந்தக் காலத்தை விட இப்போது அநியாயங்களும், அநீதிகளும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இருந்தும் ஆழ்வார்களும், நாயனமார்களும் இப்போது ஏன் வருவது இல்லை?

இன்று தான் அவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இருந்தும் பெரியவர்கள் யாரும் உதிப்பாதாகக் காணோம்.

மக்கள் அறம் எது, நீதி எது, தர்மம் எது என்று அறியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களை வழி நடத்த ஏன் பெரியவர்கள் யாரும் தோன்ற மாட்டேன் என்கிறார்கள் ?

எப்போதோ சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அது இன்றைக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.  கீதையும், குறளும் , வேதங்களும், உபநிஷத்துக்களும் நடை முறைக்கு சாத்தியமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

தேவாரமும் , திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் இன்று நம் வாழ்க்கைக்கு துணை செய்யுமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

பொய்கை ஆழ்வார் விடை சொல்கிறார்.

பாற்கடலை எப்போது கடைந்தார்கள்  ?

மாவலியிடம் மூன்று அடியை எப்போது தானமாகப் பெற்றான் ?

இலங்கைக்கு எப்போது பாலம் கட்டியது ?

யாருக்குத் தெரியும் ?

ஆனால் , அது இன்றுபோல் இருக்கிறது.

இதோ இந்த கடல் இன்றும் யாரோ கடைவது போல அலை பொங்குகிறது. நுரை பொங்குகிறது.

அன்று மூவடியால் அளந்த உலகம் இதோ இந்த உலகம்தான்.

என்றோ உண்டு, அகழ்ந்து எடுத்து, உமிழ்ந்தது இந்த உலகம்தான்.

நீங்கள் நிற்கும், அமர்ந்து இருக்கும் இந்தத் தரைதான் உலகளந்த பெருமாள் அன்று அளந்தது.

அவை எல்லாம் முடிந்து போனது மாதிரி  இருந்தாலும்,இன்று வரை அவற்றுள்   ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பக்தியும், தெளிந்த அறிவும் இருந்தால் காலம் மறைந்து போகும். அன்று நடந்தது இன்று நடப்பது போல இருக்கும்.

அன்று சொன்ன கீதை இன்று சொல்வது போல இருக்கும்.

எதுவும் முடிந்து போகவில்லை. அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.

சிந்திப்போம்.





No comments:

Post a Comment