Friday, June 19, 2015

பிரபந்தம் - படியாய் கிடக்கும் படி வேண்டுவனே

பிரபந்தம் - படியாய் கிடக்கும் படி வேண்டுவனே 


காரணம் இல்லாமல் காரியம் இல்லை. வாழ்வில் ஒன்று நடக்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அப்படி என்றால் விதி ஒன்று இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். விதி ஒன்றை ஏற்றுக்கொன்றால் பின் நம் செயல் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். எதற்கு வேலை செய்ய வேண்டும், எதற்கு இறைவனை வணங்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்.

நல்ல வினை செய்தால் நல்லது நடக்கும். தீய வினை செய்தால் தீயது நடக்கும் என்று கொண்டால் அதிலும் ஒரு சிக்கல். நல்லது செய்து, அதனால் வரும் நன்மையை அனுபவிக்கும் போது ஏதாவது ஒரு தீமை செய்து விடலாம். பின் , அந்த தீமையை அனுபவிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். இப்படி முடிவு இல்லாமல் போய் கொண்டே இருந்தால் என்ன செய்வது. இதுக்கு ஒரு முடிவுதான் என்ன ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார்.

செடி போல அடர்ந்து வளர்ந்து கிடக்கும் இந்த வலிமையான வினைகளை அவன் தீர்த்து தீர்த்து வைப்பான். அப்படிப்பட்ட திருமாலின் கோவில் வாசலில் பக்தர்கள் நாளும் வந்து போவார்கள். அப்படி அவர்கள் வந்து போகும் வழியில் இருக்கும் படியாக வேண்டுவனே என்று வேண்டுகிறார்.

படியாகக் கிடப்பதில் ஒரு சௌகரியம். பக்தர்களையும் பார்க்கலாம். ஆண்டவனையும்  பார்க்கலாம்.

பாடல்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

பொருள்


செடியாய = செடி போல வளர்ந்து கிடக்கும் 

வல்வினைகள் = வலிமையான வினைகளை

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வல் வினை போகும் என்கிறது விவேக சூடாமணி 

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க 
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் 
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே. 
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

நன்மை தீமை என்று வாழ்வோடு இழையும் வினைகளின் வழியே சென்று வாழ்வு முடியும் போது நீ வந்து அந்தத் துயரில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்பார் அபிராமி பட்டர் 



தீர்க்கும் = தீர்த்து வைக்கும்

திருமாலே = திரு மாலே

நெடியானே = உயர்ந்தவன். உலகளந்தவன்

வேங்கடவா = திருவேங்கட மலையில் இருப்பவனே

நின் = உன்னுடைய

கோயி லின் = கோவிலின்

வாசல் = வாசலில்

அடியாரும் = அடியவரும்

வானவரும் = தேவர்களும்

மரம்பையரும் = அரம்பையுரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் = படிக்கல்லாக

கிடந்துன் = கிடந்து உன்

பவள வாய் = பவளம் போன்ற சிவந்த ஆதாரங்களை

காண்பேனே = காண்பேனே

இது மேலோட்டமான அர்த்தம்.



இன்னும் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டவனை அடைய முடியாது என்பது வைணவத்தின்  ஆழ்ந்த நம்பிக்கை. ஒரு விதத்தில் அது சரிதான். இறைவனை நமக்கு  யார் அடையாளம் காட்டுவார்கள்.

அப்பாவை , அம்மா அடையாளம் காட்டுவாள். அம்மா சொல்லாவிட்டால் , அப்பா யார் என்று தெரியாது நமக்கு.

குருவை , அப்பா அடையாளம் காட்டுவார். கை பிடித்துக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்து விடுவது அப்பாவின் கடன். "சான்றோனாக்குவது தந்தைக்கு கடனே".

ஆண்டவனை, குரு அடையாளம் காட்டுவார். கல்வியின் மூலம் கடவுளை அடைய வேண்டும் என்பது கருத்து.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். குரு அறிவைத் தருவார். அறிவு இறைவனிடம் கொண்டு சேர்க்கும் .

எனவே, மாதா, பிதா, குரு , தெய்வம் என்று வரிசைப் படுத்தினார்கள் நம் முன்னவர்கள்.

இறைவனுக்கும் , நமக்கும் இடையில் இருப்பவர் ஆசாரியன்.

இறைவனுக்கும் , நமக்கும் இடையில் இருப்பது வாசல் படி. அந்தப் படியைத் தாண்டி தானே  இறைவனை அடைய முடியும் ?

அந்த படியாக நான் இருக்கிறேன் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

உங்களை, இறைவனிடம் கொண்டு சேர்கிறேன் என்கிறார்.

இதற்கு முந்தைய பாசுரத்தில் , வழியாக இருப்பேன் என்றார். (இந்த ப்ளாகில் போடவில்லை. மூலத்தை தேடிச் சென்று படியுங்கள் ....)

வழியைத் தாண்டி , படியாகவும் இருக்கிறேன் என்கிறார்.

சீக்கியர்கள் தங்கள் கோவிலை குருத்வாரா என்று அழைப்பார்கள்.

த்வாரா என்றால் வழி.

ஹரித்துவார் என்று கூறுவதைப் போல.

குருவே வழி - குருத்வார்...

படியாய் கிடந்து ....

இன்றும் கூட  அனைத்து வைணவத் தலங்களிலும் , கோவில் வாசலுக்கு குலசேகரப் படி  என்றே கொண்டாடுகிறது வைணவம்.

அவர் படியாக கிடக்கிறார் என்பதல்ல பொருள்...அவர் வழியாகவும் இருக்கிறார் என்பது  பொருள்.

பிரபந்தத்தைப் படியுங்கள்...அதுதான் வழி.


No comments:

Post a Comment