Sunday, June 7, 2015

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன்

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன் 


நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் செலுத்தும் அன்புக்கு ஏதாவது விதி வைத்து இருக்கிறோமா ?

படித்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று பிள்ளைகளிடம் சொல்கிறோமா ?

பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று கணவனிடம் சொல்கிறோமா ?

நம் பிள்ளை, நம் கணவன், நம் மனைவி, என்று எல்லோரிடமும் அன்பு செலுத்த நாம் காரணம் கேட்பது இல்லை. நம் பிள்ளைகள், என் மனைவி, என் கணவன் என்பது மட்டும் போதும்.

அது போல, இறைவனிடம் அன்பு செலுத்தவும், காரணம் ஒன்றும் வேண்டாம்.

அவன் நமக்காக அற்புதங்கள் செய்து காட்ட வேண்டாம், மலையை தூக்கினால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று சொல்ல வேண்டாம்.




பொய்கை ஆழ்வார் சொல்கிறார்....நீ ஓரடியால் இந்த உலகம் அனைத்தையும் நீ அளந்தாய் என்று சொல்கிறார்கள். இன்னோர் அடியால் மேல் உலகத்தை அளந்தாய் என்று சொல்கிறார்கள். நீ சிறு பிள்ளையாக இருக்கும் போது பேய் உருவில் வந்த பூதகியை கொன்றாய் என்று சொல்கிறார்கள். நீ எப்படி செய்தாயோ எனக்குத் தெரியாது. ....என்று சொல்லும் போதே , உன் மேல் எனக்குள்ள அன்பு  இந்த வித்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லுவது நமக்குப் புரியும்.

பாடல்

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

சீர் பிரித்தபின்

பார் அளவு ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த 
நீர் அளவும்  செல்ல நிமிர்ந்ததே –  சூர் உருவில் 
பேய் அளவு  கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

பொருள்

பார் அளவு = இந்த உலகின் அளவை

ஓர் அடி வைத்து = ஓர் அடி வைத்து அளந்தாய்

ஓர் அடியும் = இன்னோர் அடியாள்

பார் உடுத்த = இந்த உலகை சூழ்ந்த

நீர் அளவும்  =  ஆவரண நீர் என்று சொல்வார்களே

செல்ல நிமிர்ந்ததே –  அது வரை சென்றது

சூர் உருவில் = தெய்வப் பெண் வடிவில் வந்த

பேய் = பூதகியின்

அளவு  கண்ட = ஆயுளின் எல்லை கண்ட (அவளை கொன்ற )

பெருமான் = பெருமானே

அறிகிலேன்,= நான் அறிய மாட்டேன்

நீயளவு கண்ட நெறி = நீ எப்படி, யாரை அளக்கிறாய் என்பதை

குணங்களைத் தாண்டி, அவனை , அவனுக்காகவே நேசித்தார் பொய்கை ஆழ்வார்.

காரணம் இல்லாத அன்பு.

எதிர் பார்ப்பு எதுவும் இல்லாத அன்பு.

ஒரு தாய் , தன் பிள்ளையின் மேல் செலுத்தும் அன்பைப் போல.

பக்தியின் புதிய எல்லை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப்  பாருங்கள்.

1 comment:

  1. அருமை. .
    சீர் பிரித்து தந்தைக்கு மிக்க நன்றி

    ReplyDelete