Sunday, June 21, 2015

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும்

அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும் 


துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த இடத்தை தந்திருக்கிறது.

நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர்.

அப்படி என்ன துறவிகளுக்குப் பெருமை ?

மனித மனம் மயக்கமுறும் தன்மை கொண்டது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாமல் தடுமாறும் இயல்பு கொண்டது. எது சரி, எது தவறு என்று தெரியாமல் மயங்கும்போது யாரிடம் போய் கேட்பது ? யார் நமக்கு சரியான வழியை காட்டுவார்கள் ?

தனி மனிதன் மட்டும் அல்ல, சில சமயம் சமுதாயமே குழம்பி தவிக்கும் ?

இன்றும் கூட சமுதாயம் அப்படி பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.

உதாரணமாக ஒரே இனத்தில் உள்ளவர்கள்  (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ) திருமணம் செய்து கொள்ளலாமா ? துப்பாக்கி வைத்துக் கொள்ளலாமா ? விவாகரத்து சரியான தீர்வா ? என்று பல சிக்கல்களில் கிடந்து உலகம் உழல்கிறது.

யாரை கேட்டு உலகம் தெளிவு பெற முடியும் ?

துறவிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகு பாடு கிடையாது...ஆசை கிடையாது , நாம்  செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இலாபமும் இல்லை , நட்டமும் இல்லை.

எனவே, அறிவுரை பெற சமுதாயமும், தனி மனிதர்களும் அவர்களிடம் போய் நின்றார்கள்.

அப்படி அறிவுரை சொல்லத் தக்கவர்கள் யார் என்று அறநெறிச்சாரம் கூறுகிறது.


பாடல்

அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.

சீர் பிரித்த பின்

அறம் கேட்டு அருள் புரிந்து  ஐம்புலன்கள் மாட்டும்
 இறங்காது  இருசார் பொருளும்-துறந்து அடக்கி 
 மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேல் 
 பன்னுதற்குப் பாற் பட்டவன்.

பொருள்

அறம் கேட்டு = பல அற நூல்களை  கேட்டு அறிந்து

அருள் புரிந்து = அருள் புரியும் நோக்கத்தோடு

 ஐம்புலன்கள் மாட்டும் = ஐந்து புலன்களின் பால்

 இறங்காது = சாராமல்

 இருசார் பொருளும் =   அகப்பற்றையும் புறப் பற்றியும்

துறந்து = துறந்து

அடக்கி = புலன்களை அடக்கி

மன்னுயிர்க்கு  = உயிர்களுக்கு

உய்ந்து போம் = பிறவிப் பிணியில் இருந்து விட்டு வீடு பெற

வாயில் = வழியை

உரைப்பானேல் = உரைப்பவனே

பன்னுதற்குப் = அற உரைகளை சொல்லப்

பாற் பட்டவன் = நல்லவன்


அறவுரை சொல்வதற்கு இத்தனை தகுதிகள் வேண்டும் என்கிறது அறநெறிச் சாரம். 

முதலில் , தெளிந்த அறிவு 

இரண்டாவது, புலனடக்கம் 

மூன்றாவது, உயிர்கள் மேல் அருள் 

நான்காவது , உயிர்கள் வீடு பேறு பெற வேண்டும் என்ற சிந்தனை 

இவை நிறைந்தவனே அறவுரை சொல்லச் சிறந்தவன்.

பிறர் சொல்லும் அறிவுரையை கேட்பதன் முன்னம்,  அவர்களுக்கு இந்த தகுதி இருக்கிறதா  என்று பாருங்கள்.




3 comments:


  1. Whom to appreciate? The araneri chaaram or the one who is giving that to us in such a beautiful and simple way. Hats off to you.

    ReplyDelete
  2. Who poet the aranei saram

    ReplyDelete
  3. சிவகுமார்February 21, 2024 at 5:36 PM

    முனைப்பாடியார்

    ReplyDelete