Wednesday, July 1, 2015

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன்

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன் 


இறைவன் நாமத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை சொல்ல வேண்டும் ? காலையில் கொஞ்ச  நேரம், மாலையில் கொஞ்ச நேரம் சொல்லலாம்.  நாள்  கிழமை என்றால் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் சொல்லலாம்.

அவ்வளவுதானே ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் -  கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி நாக்கே தடித்துப் போக வேண்டுமாம். அத்தனை முறை சொல்ல வேண்டுமாம்.

நாக்கில் தழும்பு ஏற வேண்டுமாம்.


குதிரை வடிவில் வந்த கேசிகன் என்ற அரக்கனின் வாயை பிளந்து மகிழ்ந்தவனை, கடல் போல நிறம் கொண்டவனை, என் கண்ணனை, மலையைக் குடையாகப் பிடித்து அன்று பசுக்களை காத்த இடையர் தலைவனை, தேவர்களின் தலைவனை, தமிழ் மற்றும் வட மொழியின் இனிய பாசுரங்கள் போன்றவனை, பற்று அற்றவர்கள் பயிலும் , திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் கோவிந்தனை நாக்கு தடிப்பு ஏறும்வரை சொல்லி, கைகளால் மலர் தூவி சேவிக்கும் நாள் என்றோ

பாடல்

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

சீர் பிரித்த பின்


மாவினை வாய் பிளந்து உகந்த மாலை 
வேலை வண்ணணை 
என் கண்ணணை 
அவன் குன்ற மேந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர் ஏற்றை  
அமரர்கள் தம்  தலைவனை 
அந்த தமிழ் இன்பப் பாவினை 
அவ் வடமொழியைப் 
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில்  பள்ளி கொள்ளும்
கோவினை
நாவுற அழுந்தி என்றன் கைகள் கொய் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே

பொருள் 

மாவினை = குதிரையினை

வாய் பிளந்து = வாயைப் பிளந்து

உகந்த = மகிழ்ந்த

மாலை = திருமாலை

வேலை = கடல் போன்ற

வண்ணணை  = வண்ணம் கொண்டவனை

என் கண்ணணை = என் கண்ணனை

அவன் = அவன்

குன்ற மேந்தி = மலையை தூக்கி

ஆவினை = பசுக் கூட்டங்களை

அன்று = அன்றொரு நாள்

 உயக் கொண்ட = காப்பாற்றிய

ஆயர் ஏற்றை = இடையர்களின் தலைவனை
 
அமரர்கள் தம்  தலைவனை = தேவர்களின் தலைவனை

அந்த தமிழ் இன்பப் பாவினை = தமிழின் இனிமையான பாடல்கள் போன்றவனை

அவ் வடமொழியைப் = வடமொழி போன்றவனை

பற்று அற்றார்கள்  = பற்று இல்லாதாவர்கள்

பயில் = நாளும் அறிந்து கொள்ளும்

அரங்கத்து = திருவரங்கத்து

அரவணையில் = பாம்பு படுக்கையில்

பள்ளி கொள்ளும் = கண் வளரும்

கோவினை = தலைவனை

நாவுற அழுந்தி = நாக்கு தழும்பு ஏறும்படி அழுந்தி

என்றன் கைகள் = என்னுடைய கைகள்

கொய் மலர் = மலர்களை கொய்து

 தூய் = தூவுவது

என்று கொலோ கூப்பும் நாளே = என்று நான் வணங்குவேனோ ?

திருப்பி திருப்பி சொல்லி நாக்கில் தழும்பு ஏற வேண்டும்.

தேவை இல்லாதவைகளை நாளும் எவ்வளவு பேசுகிறோம்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறி என்பார் மாணிக்க வாசகர். கடவுள் இல்லை என்று சொல்லி சொல்லி  நாக்கில் தழும்பு ஏறிப் போய் இருக்குமாம்.

திரும்பச் திரும்பச் சொல்லுவதன் மூலம், நம்மை அறியாமலேயே நம் நாக்கு இறைவன் நாமத்தை  தானே சொல்லத் தொடங்கி விடும்  என்கிறார் சுந்தரர்.

நற்றவா உன்னை நான் மறக்கினும் என் நாக்கு மறக்காது, அது நமச்சிவாய என்றே சொல்லிக் கொண்டிருக்கும் என்கிறார். 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


இறைவன் நாமத்தை சொல்லச் சொல்ல நமது வாய் அழகு அடையும் என்கிறார்  திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

திருவாய் பொலியச்  சிவாயநம என்று நீறணிந்தேன் என்பார் ....

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

இந்த பாடல் பாசுரம் பற்றி மேலும் சிந்திப்போம்....



 

2 comments:

  1. :) சீர் பிரித்து தந்தமைக்கு நன்றி

    அழகான பாடல்கள். ..அந்த பக்குவம் வாய்க்கவேண்டும் என்று உள்ளம் விரும்புகிறது :(

    ReplyDelete
  2. அழகான பாடல். ஏன் செய்யவேண்டும் என்பது தெரியவில்லை!

    ReplyDelete