Sunday, July 5, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே



திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது இராமனுசர் நூற்றந்தாதி.

குருவின், ஆசாரியன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்பது நம் முன்னவர்களின் முடிந்த முடிபு.

இறைவனைப் பற்றி நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்தானே புரியும்.

தந்தையையே தாய் சொல்லித்தானே தெரிந்து கொள்கிறோம்.

இறைவனை குரு தான் அடையாளம் காட்ட வேண்டும்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பார் மணிவாசகர். மணிவாசகருக்கு இறைவனே குரு வடிவாக வந்து உபதேசம் செய்தான். 

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருவரங்கத்து அமுதனார், இராமானுசரை குருவாகக் கொண்டு, விண்ணப்பம் செய்கிறார்.....

"என் மனம் என்ற வண்டு உன் திருவடித் தாமரைகளை அடைந்தது, தேன் உண்ணும் பொருட்டு. அந்தத் தேனை நீ அந்த வண்டுக்கு அருளிட வேண்டும். அது அல்லாமல் வேறு எதையாவது தந்து என் மனதை மயக்கிடாதே "

என்று  வேண்டுகிறார்.

பாடல்

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

சீர் பிரித்த பின்

போந்தது என் நெஞ்சு என்னும்  பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, நின் பால் அதுவே 
ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றி ஒன்றும் 
மாந்த இல்லாது , இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.


பொருள் 

போந்தது = சென்று அடைந்தது

என் நெஞ்சு = என் மனம்

என்னும் = என்ற

பொன் வண்டு = பொன் வண்டு

 உனது அடிப் = உனது திருவடி என்ற

போதில் = மலரில். போது என்றால் மலர். போதொடு நீர் சுமந்து போவார் என்பார் திருநாவுக்கரசர்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


ஒண் சீர் = சிறந்த

ஆம் தெளி தேன் உண்டு = தெளிந்த தேனை உண்டு

அமர்ந்திட வேண்டி = அமர்ந்திட வேண்டி

நின் பால் அதுவே = உன்னிடம் அதுவே

ஈந்திட வேண்டும் = அளித்திட வேண்டும்.  உயர்ந்தவர்கள் , தாழ்ந்தவர்களுக்குத் தருவதற்கு ஈதல் என்று பெயர்.

இராமனுக்கு பெயர் சூட்டும் போது, "இராமன் என்ற பெயர் ஈந்தான்" என்பார் கம்பர்.  அது எப்படி,  வசிட்டர் இராமனை விட உயர்ந்தவர் ? (இது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம் )

இராமானுச!  = இராமானுச

இது அன்றி ஒன்றும் =  இதைத் தவிர வேறு ஒன்றும்

மாந்த இல்லாது  = அருந்த  முடியாது

இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே = இனி வேறொன்றைக் காட்டி என்னை மயக்கி விடாதே.


இராமானுசா ! உன் திருவடி மட்டுமே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்று  உருகுகிறார். 


1 comment:

  1. குருவுக்கு மேலான சிஷ்யனாக இருப்பார் போல இருக்கிறதே!

    ReplyDelete