Wednesday, August 26, 2015

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள்

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள் 


இறைவன் இல்லை.

பாவ புண்ணியம் இல்லை.

பக்தியும் முக்தியும் சும்மா கட்டுக் கதைகள்.

தவமும், விரதமும் வெட்டி வேலை.

இதையெல்லாம் விட்டு விட்டு, வாழ்க்கையை அனுபவிக்க வாருங்கள்....நன்றாக உண்டு, நல்ல உடை உடுத்து, பெண்களோடு சேர்ந்து கலந்து இன்பம் அனுபவிப்பதுதான் வாழ்க்கை. இது தான் மாம் வாழ்வில் கை மேல் கண்ட பலன். மற்றவை எல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும் கயவர்களின் பால் சேராமல் இருக்க எனக்கு அருள் செய்வாய் என்று முருகனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

எல்லாம் பொருளால் ஆனது. பொருள்களைத் தாண்டி எதுவும் இல்லை என்று கூறுபவரக்ளை கயவர்கள் என்கிறார் வள்ளலார்.

இந்த உலகில் பொருள்களைத் தாண்டி வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அறிய வேண்டும். அப்படி அறியாமல், உலக இன்பமே பேரின்பம் என்று அலையும் கயவர்களோடு என்ன கூட்டு இனியே என்கிறார் வள்ளலார்.

பாடல்

 பரமேது வினைசெயும் பயனேது பதியேது 
         பசுவேது பாச மேது 
         பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது 
         பாவ புண்ணியங்க ளேது 
    வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை 
         மனம்விரும் புணவுண்டு நல் 
         வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு 
         மலர் சூடி விளையாடி மேற் 
    கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரொடு 
         கலந்து மகிழ்கின்ற சுகமே 
         கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங் 
         கயவரைக் கூடா தருள் 
    தரமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
         தலமோங்கு கந்த வேளே 
         தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
         சண்முகத் தெய்வ மணியே. 

பொருள்

 பரமேது = பரம் ஏது ? பரம் என்றால் ஆதி என்று பொருள். பரம்பரை என்றால் ரொம்ப காலமாய் வருவது. பரம சிவன். பர பிரும்மம்.

வினைசெயும் பயனேது = நல் வினை, தீ வினை இவற்றால் விளையும் பயன் ஏது ?

பதியேது = பதி ஏது  ? எல்லாவற்றிற்கும் தலைவன், ஆண்டவன் ஏது  ?

பசுவேது = பசு என்றால் அடிமை. ஆண்டான் அடிமை ஏது  ? கடவுள் , பக்தன் என்பதல்லாம் ஏது  ?

 பாச மேது  = பதிக்கும், பசுவுக்கும் இடையில் உள்ள பாசம் ஏது ?

பத்தியேது  = பக்தி என்றால் என்ன

அடைகின்ற முத்தியேது = அதன் மூலம் அடையும் முக்தி என்றால் என்ன ?

அருளேது = இறைவன் அருள் என்றால் என்ன ?

பாவ புண்ணியங்க ளேது  = பாவ புண்ணியங்கள் என்றால் என்ன ?

வரமேது தவமேது விரதமேது  = வரம், தவம், விரதம் என்றால் என்ன ?

ஒன்றுமிலை = இவையெல்லாம் ஒன்றும் இல்லை

மனம் விரும் புணவுண்டு = மனம் விரும்பும் உணவு உண்டு

 நல் வத்திர மணிந்து = நல்ல துணிகளை அணிந்து

மட மாதர்தமை நாடி = பெண்களை நாடி

நறு மலர் சூடி = வாசனையான மலர்களை சூடி

விளையாடி = விளையாடி

மேற் கரமேவ விட்டு = கையை அவர்கள் மேல் படர விட்டு

முலை தொட்டு  = அந்தப் பெண்களின் மார்புகளைத் தொட்டு

வாழ்ந்தவரொடு = வாழ்ந்து அவரோடு

கலந்து மகிழ்கின்ற சுகமே = கலந்து மகிழ்கின்ற சுகமே 
       
கண்கண்ட சுகமிதே  = கண் கண்ட சுகம் இதே

கைகண்ட பலனெனுங் = இதுவே கை கண்ட பலன் என்று சொல்லும்

கயவரைக் கூடா தருள் = கயவர்களை கூடாமல் இருக்க அருள்

தர = தருவதற்கு

மேவு = இருக்கும்

சென்னையிற் = சென்னையில்

கந்த கோட்டத்துள் = கந்த கோட்டத்தில்

வளர் = வளரும், அல்லது உறையும்

தலமோங்கு கந்த வேளே  = அதற்கு பெருமை செய்யும் கந்த வேளே

 தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.  =  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.

உணவு, உடை, ஆண் பெண் உறவு இவற்றைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லையா ?

சிந்திக்க வேண்டிய விஷயம்.

3 comments:

  1. Its nice The way you explaining the matter of a poem is fantastic. Please keep going. God bless you all.

    ReplyDelete
  2. Its nice The way you explaining the matter of a poem is fantastic. Please keep going. God bless you all.

    ReplyDelete
  3. " உணவு, உடை, ஆண் பெண் உறவு இவற்றைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லையா ? சிந்திக்க வேண்டிய விஷயம்."

    உண்மைதான். ஆனால் அந்த விஷயம் இறைவன் என்று கொள்வானேன்?

    ReplyDelete