Tuesday, August 4, 2015

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

கம்ப இராமாயணம் - இடையூருக்கு இடையூறு

நான் செய்யும் வேள்வியைக் காக்க இராமனை துணைக்கு அனுப்பு என்று விஸ்வாமித்திரன் தசரதனிடம் கேட்கிறான்.

இராமனை விட்டு பிரிய மனம் இல்லாமல் தசரதன் மிகுந்த துன்பப்பட்டு சொல்கிறான்

"முனிவரே, இராமன் சின்னப் பிள்ளை. அவனுக்குப் போர் பயிற்சி எல்லாம் கிடையாது. உங்களுக்கு என்ன நல்ல துணை வேண்டும் அவ்வளவு தானே ? நான் வருகிறேன். புறப்படுங்கள். உங்கள் வேள்விக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் யார் தடையாக வந்தாலும் நான் அவர்களுக்குத் தடையாக நின்று உங்கள் வேள்வியை காப்பேன் ...வாருங்கள் போவோம்"

பாடல்

தொடை ஊற்றில் தேன் துளிக்கும் நறும்
    தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கிப்
‘படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்!
    பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும் நான்முகனும்
    புரந்தரனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென்
    பெரு வேள்விக்கு எழுக ‘என்றான்.


பொருள் 

தொடை = தேன் அடை அல்லது தேன் கூடு

ஊற்றில் = ஊற்றுப் போல்

தேன் துளிக்கும் = தேன் சிதறும்

நறும் = நறுமணம் மிக்க

தாரான் = மாலை அணிந்தவன் (தார் என்றால் மாலை )

ஒரு வண்ணம் துயரம் நீங்கிப் = ஒரு வழியாக துயர் நீங்கி

‘படையூற்றம் இலன்;= படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்

சிறியன் இவன் = சின்னப் பையன்

 பெரியோய்! = பெரியவரே (விச்வாமித்ரரே)

பணி இதுவேல், = வேலை இதுதான் என்றால் (யாகத்தை காப்பது தான் பணி என்றால்)

பனி நீர்க் கங்கை = சில்லென்று நீரை கொண்ட கங்கை

புடை ஊற்றும் சடையானும்= நான்கு புறமும் தெறிக்கும் சடை கொண்ட சிவனும்

நான்முகனும் = பிரமாவும்

புரந்தரனும் = உலகைக் காக்கும் திருமாலும்

புகுந்து செய்யும் = இடையில் புகுந்து  செய்யும்

இடையூற்றுக்கு இடையூறு ஆ, = இடையூறுகளுக்கு இடையூறாக

யான் காப்பென் = நான் காவல் செய்வேன்

பெரு வேள்விக்கு எழுக ‘என்றான். = பெரிய வேள்வி செய்ய புறப்படுங்கள் என்றான்.

இது பாட்டும், அதன் அர்த்தமும்.

அதில் பொதிந்துள்ள செய்தி என்ன ?

நம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கும். ஆனால், அந்த கல்லூரி நாம் இருக்கும் இடத்தை விட்டு ரொம்ப தள்ளி இருக்கும் . ஏன், வெளி நாட்டிலே கூட இருக்கலாம்.

"இந்த சின்ன பிள்ளை அங்க போய் எப்படி சமாளிக்குமோ, பேசாம அக்கம் பக்கத்தில்  ஏதாவது நல்ல கல்லூரியில் சேர்ப்போம் " என்று நாம் நினைக்கலாம். அப்படி நினைத்து, பிள்ளைகளின் எதிர் காலத்தை நாம் பாழடித்து விடக் கூடாது.

அதே போல, பெண்ணுக்கு ஒரு நல்ல தரம் வந்திருக்கும். மாப்பிள்ளை அயல்நாட்டில் வேலை  பார்ப்பவராய் இருப்பார். எதுக்கு அவ்வளவு தூரத்தில் போய்  பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து உள்ளூரில் ஏதோ ஒரு வேலையில் உள்ள பையனுக்கு கட்டி கொடுத்து அந்த பெண்ணின் வாழ்வின்  முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக இருந்து விடக் கூடாது.

Hostel இல் போய் என் பெண்ணோ பிள்ளையோ எப்படி இருப்பார்கள் ? அவர்களுக்கு பழக்கமே இல்லையே என்று நாம் பாசத்தில் தவிப்போம். "அப்படி ஒண்ணும் என் பிள்ளை கஷ்டப் பட வேண்டாம், ...இதோ உள்ளூரிலேயே நல்ல  கல்லூரி இருக்கிறது " என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்த்து  விடும் பெற்றோர்கள் நிறைய பேர் உண்டு.


பாசம் கண்ணை மறைக்கக் கூடாது.

அப்பேற்பட்ட இராமனை பற்றி தசரதன் என்ன நினைக்கிறான் ?

சின்னப் பையன், படை நடத்தும் அனுபவம் இல்லாதவன்....அவனை அனுப்பக் கூடாது என்று நினைக்கிறான்.

அப்படி அவன் அனுப்பாமல் இருந்திருந்தால், என்ன ஆகி இருக்கும் ? யோசித்துப் பாருங்கள்.

நாம் நம் பிள்ளைகளை குறைவாக மதிப்பிடுகிறோம். அவர்களின் திறமை, சாமர்த்தியம்  எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிட்டு நாமே அவர்களின் வளர்ச்சிக்கு  தடையாக இருந்து விடுகிறோம்.

அப்படி இருக்கக் கூடாது என்று சொல்கிறது இந்தப் பாடல்.

பிள்ளைகளை வேலை செய்ய விட வேண்டும். பாவம், அவனுக்கு என்ன தெரியும், சின்ன பிள்ளை என்று பொத்தி பொத்தி வளர்க்கக் கூடாது. தசரதன் சொல்கிறான், "அவன் விட்டு விடுங்கள்...நான் வருகிறேன் " என்று.

நாம் செய்வது இல்லையா.

கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை தளர்த்தி, கொஞ்சம் பாசத்தை குறைத்து, குழந்தைகளை, சவால்களை எதிர் கொள்ள அனுப்புங்கள். நீங்கள் நினைப்பதை விட  உங்கள் குழந்தைகள் அதிகமாகவே செய்வார்கள்.

சரி, இப்படி ஒரு குழப்பம் வரும்போது என்ன செய்யவேண்டும்.

அயல் நாட்டுக்கு பெண்ணையோ பிள்ளையையோ அனுப்ப முடியாமல் தவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் ?


தசரதன் என்ன செய்தான் ? 

அதை அடுத்த ப்ளாகில் பார்ப்போம். 


3 comments:

  1. நல்ல பொருள் வாய்ந்த விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் . நன்றி

    ReplyDelete