Friday, September 4, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2



வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்

=============== பாகம் 2 =================================================

ஈதல் - அறம்
தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டது - இன்பம்
பரனை நினைத்து இம்மூன்றையும் விடுவது - வீடு பேறு

இது பாடலின் சாரம்.

இதை மேலும் ஆழ்ந்து சிந்தித்தால், ஒன்று புலப்படும்.

இந்த "பரனை நினைத்து" என்ற சொற்றடரை மற்ற மூன்றுக்கும் சேர்த்துப் பார்ப்போம்.

பரனை நினைத்து ஈதல் - அறம்
பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
பரனை நினைத்து காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே - இன்பம்
பரனை நினைத்து இம் மூன்றையும் விடுதல் - வீடு பேறு


அது என்ன பரனை நினைத்து ஈதல் அறம் ?

பொருளை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டா வெறுப்பாக, எரிச்சலோடும் கொடுக்கலாம். அப்படி கொடுப்பது அறமாகாது.

நாம் பெற்ற பொருள் அவன் தந்தது என்று நினைத்து அதை மற்றவர்களுக்குத் தருவது அறம்.

வரும் போது கொண்டா வந்தோம் ?

இதையே அருணகிரிநாதரும்

"வையிற் கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்கு என்றும் நொய்யிர்  பிளவேனும் பகிருங்கள்"

என்றார்.

கொடுக்கும் போது முருகனை நினைத்து, இப்படி ஒரு செல்வத்தை நமக்கு கொடுத்ததற்கும், கொடுத்த செல்வத்தை மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனதை தந்ததற்கும் அவனை வாழ்த்தி மற்றவர்களுக்குத் ஈதல் வேண்டும் என்கிறார்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 

இறைவனை வாழ்த்தி தானம் செய்ய வேண்டும். நான் கொடுக்கிறேன், என் செல்வம், என்ற ஆணவம் இல்லாமல் ஈதல் அறம் .

பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்

இரை தேடும் போதும் இறையும் தேட வேண்டும். 

செய்யும் செயலில் பக்தி கலக்கும் போது அதில் ஒரு ஆனந்தம், அமைதி பிறக்கிறது.  அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது.  போட்டி பொறாமை  மறைகிறது. இறைச் செயல் என்று நினைத்து செய்யும் போது  அதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற சுயநல கலப்பு மறைகிறது. 

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது 

கணவனும் மனைவியும்  ஒன்றாக இருக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும்  என்கிறார்.

இப்படி ஒரு அன்பான, அழகான, பண்புள்ள, என் மேல் ஆர்வம் உள்ள கணவனையோ, மனைவியையோ தந்த இறைவனுக்கு நன்றி என்று நினைக்க வேண்டும்.  நினைத்துப் பாருங்கள் , உங்கள் துணை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நீங்கள் விரும்படியும் இருக்கலாம், மற்றபடியும் இருக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன், அழகுடன், அன்புடன், பண்புடன், உங்கள் நலத்தில்  அக்கறை உள்ள துணை இறைவன் அருளால் அமைவது. நீங்கள்  என்ன செய்து விட முடியும் இங்கே. உங்களுக்கு கிடைத்தது அவன் அருள் . அதை நினைத்து, காதல் செய்யுங்கள். அடுத்த முறை உங்கள் துணையை  அன்போடு பார்க்கும் போது , அவன் அருளை நினைத்துப் பாருங்கள். அதன் சுகமே தனிதான். 

இந்த மூன்றையும் விடுவது என்பது எளிதான காரியம் அல்ல.  வேண்டா வெறுப்பாக  விடுவது ஒரு துறவறம் இல்லை. மருத்துவர் உங்களுக்கு சர்க்கரை வியாதி  என்று சொல்லி விட்டார்.  சர்கரையின் பக்கமே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்.  அதற்காக நீங்கள் சர்க்கரையை விட்டால் அதன் பெயர்  துறவறம் அல்ல. 

பரனை நினைத்து விடுவது வீடு பேறு.

இவற்றையெல்லாம் விடுவது இவற்றை விட பெரிய ஒன்றை அடைய என்று நினைக்கும் போது,  விடுவது ஒன்றும் பெரிதாகத் தெரியாது. 

பாட்டி பெரிய ஆளு....
 

2 comments:

  1. "பரனை நினைத்து" என்ற சொற்றொடரைச் சேர்ப்பது நல்ல கற்பனையே. கொஞ்சம் வலிந்து சொல்வது போல இருக்கிறது.

    ReplyDelete
  2. Arumai...Vera level....

    ReplyDelete