Friday, September 25, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2


கல்வி கற்கும் முறை.

நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம் ?

முதலில் நமக்கு சிலவற்றை சொல்லித் தருகிறார்கள். பின் சிறிது நாள் கழித்து, முதலில் சொன்னவை அவ்வளவு சரியில்லை, என்று திருத்திச் சொல்கிறார்கள்.

முதலில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சொல்லித் தருகிறார்கள். பின்னாளில், சூரியன் உதிப்பது இல்லை. அது ஒரே இடத்தில் தான் இருக்கிறது.  பூமிதான் சுற்றி வருகிறது என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் உயர் வகுப்புகளுக்குப் போனால், சூரியன் நிலையாக இல்லை, அதுவும் பால்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லித் தரக்கூடாதா ?

பொருள்கள் மூன்று நிலையில் இருக்கின்றன. திட, திரவ, வாயு நிலையில் இருக்கின்றன என்கிறார்கள். பின், அதெல்லாம் சரி இல்லை....பொருள்கள் எல்லாம் அணுவால் ஆனது என்கிறார்கள். பின், அணு கூட இல்லை, அவை எலேக்டரோன் , ப்ரோடான், நியுட்ரான் என்ற துகள்களால் ஆனது என்கிறார்கள்.

ஏன் , மூன்றாம் வகுப்பிலேயே இதை சொல்லித் தரக் கூடாதா என்றால் சொல்லித் தரக் கூடாது. சொல்லித் தந்தால் புரியாது.

படிப்படியாகத் தான் சொல்லித் தர முடியும். படிக்க படிக்க , முன்னால் படித்தது மாறும்.

இராமன், முதலில் வசிஷ்டரிடம் பாடம் பயின்றான். அது ஒரு உயர் நிலை பள்ளி மாதிரி.

அடுத்து விச்வாமித்ரரிடம் பாடம் பயிலப் போகிறான். அது கல்லூரி படிப்பு மாதிரி.

வசிட்டர் சொல்லித் தந்த அறங்களை இன்னும் கூர்மை படுத்தி, அவற்றின் நெளிவு சுளிவுகளை விஸ்வாமித்ரர் சொல்லித் தருகிறார்.

பொய் சொல்லக் கூடாது என்பது ஒரு அறம் .

புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் , பொய்யும் சொல்லலாம் என்பது இன்னொரு அறம்.

முரண்பட்ட அறங்களை எதிர் கொள்ள நேரும்போது என்ன செய்ய வேண்டும்.

எப்படியும் ஒரு அறத்தை விட்டு விலகித்தான் போக வேண்டி இருக்கும்.

அப்படி என்றால், எந்த அறத்தை விடுவது, எதை கைகொள்வது ?

இந்த சிக்கலுக்கு இராமன் வழி காட்டுகிறான்.

இந்த மாதிரி சிக்கல் வரும்போது, பற்றற்ற ஞானிகளின், உலக நன்மையில் நாட்டம் கொண்ட சான்றோர் சொல்வதை கேட்டு நடப்பது என்பது இராமன் காட்டிய வழி.

நாம் படித்த பாடங்கள் நமக்கு சரியான ஒரு முடிவை எடுக்க உதவி செய்யாவிட்டால், கற்றறிந்த சான்றோரிடம் கேட்பதுதானே முறை.

இராமன் அதைத்தான் செய்தான்.

முதலில் தாடகை வதத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமனுக்கு தெரிகிறது  தாடகை ஒரு பெண், அவளைக் கொல்லக் கூடாது என்று. அப்படித்தான் வசிட்டர் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால் இப்போது தாடகையை கொல்லவில்லை என்றால் அவள் இராமனையும், இலக்குவனையும், விச்வாமித்ரரையும் கொன்று விடுவாள்.

என்ன செய்வது ?




No comments:

Post a Comment