Wednesday, September 2, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்


வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்



No comments:

Post a Comment