Tuesday, September 22, 2015

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை 


ஒரு நாள் நம் உடையை சரியாக இஸ்திரி (iron ) போடாமல் போட்டுக்கொண்டு வெளியே செல்ல முடியுமா ? கசங்கின ஆடையை உடுத்திச் செல்வோமா ?

உடம்பை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள், அல்லது தொள தொள என்று தொங்கும் ஆடைகளை நம்மால் உடுக்க முடியுமா ? எவ்வளவு சங்கடப் படுவோம் ?

சகர்வர்த்தியின் பிள்ளைகள் , இராமனும், சீதையும், இலக்குவனும் மர உறி உடுத்துச் சென்றார்கள்.

அது உடலோடு சரியாகப் பொருந்தாது. மெத்தென்று மென்மையாக இருக்காது. அங்கங்கே குத்தும். உரசும். எரிச்சல் தரும்.

அப்பா சொன்னார் , என்ற ஒரே காரணத்துக்காக இராமன் மர உரி உடுத்து கானகம் போனான்.

கணவன் போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக சீதை மாற உரி உடுத்து, அவன் பின் கானகம் போனாள் .

அண்ணன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக இலக்குவன் சென்றான்.

இவர்கள் சென்றதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அப்பாவின் மேல் உள்ள மரியாதை, கணவன் மேல் உள்ள காதல், அண்ணன் மேல் உள்ள பாசம் என்று.

அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வர  பரதனும் மர உரி உடுத்து கானகம் போனான்.

அறத்தை நிலை நாட்ட மட்டுமே அவன் சென்றான்.

மந்திரிகளை விட்டு அழைத்து வரச் சொல்லி இருக்கலாம்.

அல்லது அவனே கூட சாதாரண ஆடை அணிந்து சென்றிருக்கலாம். அதை விடுத்து அவனும் மர உரி உடுத்துச் சென்றான்.


பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். பரதனைப் பார்த்து அவர் கேட்கிறார்

"நீ முடி சூடி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. முடியெல்லாம் சரியாக சீவாமல் சடை பிடித்துப் போய் இருக்கிறது. இப்படி மர உரி உடுத்து இங்கு எதைத் தேடி வந்தாய் " என்று.

பாடல்


‘எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான்.

பொருள் 

‘எடுத்த மா முடி = உன் தாய் எடுத்துக் கொடுத்த பெரிய மணி முடியை

சூடி = தலையில் அணிந்து

நின்பால் = உன்னிடம்

இயைந்து = அனுசரித்து வந்த

அடுத்த பேர் அரசு ஆண்டிலை = அந்த பெரிய அரசை நீ ஆளவில்லை

ஐய! நீ = ஐயனாகிய நீ

முடித்த = தலையை வாராமல் முடித்து

வார் சடைக் கற்றையை  = சடை கற்றையை

மூசு =  மொய்க்கும்

தூசு = தூசு என்றால் ஆடை

உடுத்து  = உடுத்து

நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான். = இந்த கானகத்திற்கு வந்ததன் காரணம் என்ன ?

மூசு தூசு என்றால் உடலை சுற்றி இருக்கும் ஆடை. பொருந்தாத ஆடை. மர உரி.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏதோ பேருக்கு போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தவன் அல்ல பரதன்.

வருத்ததோடு, சிரத்தையோடு போனவன்.

தவறுக்கு வருந்தி பிராயாசிதம் தேடி போனவன்.



No comments:

Post a Comment