Sunday, September 27, 2015

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?


வயிற்று வலி, பல் வலி என்று உடலுக்கு ஏதாவது ஒரு வலி வந்து விட்டால்,  "கடவுளே, இந்த வலி தாங்க முடியவில்லையே, இந்த வலியில் இருந்து என்னை காப்பாற்று, உன் கோவிலுக்கு வருகிறேன், மொட்டை போடுகிறேன், அபிஷேகம் பண்ணுகிறேன்..."என்று எல்லா தெய்வத்தையும் வேண்டுவோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தாங்க முடியாத வலி வரும்போது இறைவனை நினைக்கிறான்.

உடல் வலி என்று இல்லை, எந்த நோவு வந்தாலும் ...பணக் கஷ்டம், நெருங்கிய உறவுகளுக்கு உடல் நிலை சரி இல்லை, காதலில் தோல்வி, பரிட்சையில் தோல்வி என்று எத்தனையோ நோவுகள் வருகின்றன.

அத்தனை நோவிலும் மனிதன் கடவுளை இரகசியமாகவேனும் நினைக்கிறான்.

ஞானசம்பந்தரிடம் கடவுள் எங்கு இருக்கிறான் என்று கேட்ட போது , வலி உள்ளவன் வாயில் கடவுள் இருக்கிறான் என்றார்.

பெருமாளே என்னை காப்பாற்று...

முருகா என் பிள்ளையை காப்பாற்று...

பிள்ளையாரப்பா என் கணவனை காப்பாற்று ...

என்று அவரவர் , தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லிச் வேண்டுகிறார்கள்.

சத்தியமாக அவர்கள் இறைவனை நம்புகிறார்கள்...எப்போதும் இல்லாவிட்டாலும் அந்த நோவு உள்ள பொழுதிலேனும் நம்புகிறார்கள்.

அவர்கள் வாயில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான் என்றார் ஞான சம்பந்தர்.

பாடல்


நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.


பொருள்

நுண்ணியான் = மிக மிக நுட்பமானவன்

மிகப்பெரியான் = மிக மிக பெரியவன்

நோவுளார் வாயுளான் = அப்பேற்பட்ட இறைவன், வலி உள்ளவர்கள் வாயில் இருப்பவன்


தண்ணியான் = குளிர்ச்சியானவன்

வெய்யான் = வேப்பமானவன்

அந் தலைமேலான் = தலைக்கு மேலே உள்ளவன்

மனத்துளான் = மனதுக்கு உள்ளேயும் உள்ளவன்

திண்ணியான் = உறுதியானவன்

செங்காட்டங் குடியான் = செங்காட்டங்குடி என்ற ஊரில் உள்ளவன்

செஞ் சடை = சிறந்த சடை

மதியக் கண்ணியான் = நிலவை ஆபரணமாக  தலையில் அணிந்தவன்

கண்ணுதலான் = நெற்றியில் கண் உள்ளவன்  (நுதல் = நெற்றி)

கணபதீச் சரத்தானே. = கணபதிச்சீரம் என்ற ஊரில் உள்ளவனே

என்கிறார்.

அது என்ன தலைக்கு மேல் உள்ளவன், மனதுக்கு உள்ளே உள்ளவன் ?



இறைவன் இரண்டு இடத்தில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார்.

தலைக்கு மேலே சில அங்குல உயரத்தில். இதயத்தின் உள்ளே.


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

நெஞ்சுக்கு நேரே இரண்டு கையையும் சேர்த்து கூப்பி வணங்குவது ஒரு முறை. 

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றாகச் சேர்த்து வணங்குவது இன்னொரு  முறை.

தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்குபவர்களை உயரச் செய்வான் அவன் என்கிறார்  மணிவாசகப் பெருந்தகை. 

செய்து பாருங்கள். 

நெஞ்சுக்கு நேரே கை கூப்புவதற்கும், தலைக்கு மேலே கை கூப்புவதற்கும் வித்தியாசம்  தெரிகிறதா என்று செய்து பாருங்கள். 

ஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும் சொல்லுகிறார்கள். 


1 comment:

  1. என்ன ஒரு சந்தம் பொருந்திய பாடல்!

    ReplyDelete