Sunday, September 6, 2015

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன்

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன் 


அறத்தின் படி வாழ வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நான் ஒழுக்கம் இல்லாமல் வாழ நினைக்கிறேன் என்று யாரும் முனைந்து செயல்படுவதில்லை.

இருந்தும், உலகில் எத்தனையோ அறம் பிறழ்ந்த செயல்கள் நிகழ்கின்றன.

ஏன் ?

அன்பு இல்லாத காரணத்தால்.

சுயநலத்தால்.

என்னிடம் பணம் இருக்கிறது. அதை இலஞ்சமாகக் கொடுத்து எனக்கு வேண்டியதை நான் பெற்றுக் கொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம்.

தவறு இருக்கிறது...யாருக்கோ ஞாயமாக கிடைக்க வேண்டியதை நீங்கள், உங்கள் பணத்தின் மூலம் அபகரித்துக் கொள்கிறீர்கள். அந்த முகம் தெரியாத மனிதன் துன்பத்தில் ஆழ்கிறான்.

அந்த மனிதனின் மேல் உங்களுக்கு அன்பு இல்லை. அவன் எக்கேடும் கெட்டு போகட்டும், நான் சுகமாக இருந்தால் சரி என்ற நினைப்புதான் இலஞ்சம் என்ற பெரிய  நோயை கொண்டு வருகிறது.

திருட்டு, கொலை, கற்பழிப்பு என்று எந்த குற்றத்தை எடுத்துக் கொண்டாலும், அடிப்படை அன்பு இல்லாத தன்மைதான்.

அறம் செய் , அறம் செய் என்று சொல்லுவது எளிது. அதற்கு அடிப்படை அன்பு வேண்டும்.

அன்பு இருந்தால் அறம் தானே வரும்.

அறம் அற்ற வழியில் வந்த இராஜியத்தை நினைத்து அழுகிறான் பரதன். அப்படி அழும் போதும் , இதெல்லாம் கண் துடிப்பு என்று உலகம் தன் அன்பை தூற்றுமோ என்று கவலைப் படுகிறான்.

பாடல்


‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன,
நல்லான் அன்றே துஞ்சினன்;
    நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன்
    பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான்! அன்பு

    உடையார்போல் அழுகின்றேன்!‘‘


பொருள்

‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன, = வில்லை உடைய தோள்களை கொண்ட இராமன் கானகம் போனான் என்று


நல்லான் அன்றே துஞ்சினன் = நல்லவனாகிய தசரதன் அன்றே இறந்தான்

நஞ்சே அனையாளைக் = நஞ்சு போன்ற கைகேயியை

கொல்லேன், = நான் கொல்லவில்லை

மாயேன்; = நானும் இறக்கவில்லை

வன் பழியாலே குறைவு அற்றேன் = பழிக்கு ஒன்றும் குறைவு இல்லை

அல்லேனோ யான்! = அப்படிபட்டவன் அல்லவா நான்

அன்பு உடையார்போல் அழுகின்றேன்! = அன்பு உடையவர்களைப் போல நானும் அழுகின்றேன்

அன்பிருந்தால், மற்றவர்கள் படும் துயர் கண்டு அழுகை வரும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

இராமனின் துன்பம் நினைத்து பரதன் அழுதான்.


அதிலும், அந்தத் துயருக்கு நாமே காரணம் என்றால், அந்த அழுகை இன்னும் அதிகமாகும். பரிதாப உணர்ச்சியும், குற்ற உணர்வும் சேர்ந்து அழுகை அதிகமாகும்.

 
அன்பிருக்கும் இடத்தில் அறம் இருக்கும்.

சரி, என்னிடம் அன்பும் இல்லை, அறமும் இல்லை அதனால் என்ன என்று கேட்டால்....அப்படிப் பட்டவர்களை அறம் அழிக்கும் என்கிறார் வள்ளுவர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.

அன்பில்லாதவர்களை அறம் அழிக்கும்.

அன்பு உள்ள இடத்தில் அறம் தழைக்கும்.

பரதன் மனதில் அன்பிருந்தது.


1 comment:

  1. எளிமையான, ஆனால் வலிமையான உண்மை. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete