Monday, September 7, 2015

இராமாயணம் - பரதன் - குலப் பழி

இராமாயணம் - பரதன் - குலப் பழி 


ஒரு தவறு செய்யும் முன், அந்தத் தவறு யாரையெல்லாம் பாதிக்கும் என்று நினைக்க வேண்டும்.

நம்மை மட்டும் பாதித்தால் பரவாயில்லை. நம் குடும்பத்தில் உள்ளவர்களை பாதித்தால் அது மோசம். நம் குலத்தையே பாதித்தால் அது இன்னும் மோசம் அல்லவா.

ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அவன் மட்டும் தண்டனை அடைய மாட்டான். அவன் மனைவியும், பிள்ளைகளும் "கொலைகாரன் மனைவி" என்றும் "கொலைகாரன் பிள்ளை" என்றும் தூற்றப் படுவார்கள்.


சில பழிகள், குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

தனக்கு வந்த அரசால் இந்த சூரிய குலமே பழிச் சொல்லுக்கு ஆளாகும் என்றும் நினைக்கிறான் பரதன்.

கைகேயி அப்படி நினைத்தாள் இல்லை. தீர்க்க சிந்தனை இல்லை.

பாடல்


‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் -

மரதக மலை என வளர்ந்த தோளினான்.


பொருள்

‘இரதம் ஒன்று ஊர்ந்து = இரதத்தில் சென்று

பார் இருளை நீக்கும் = உலகில் உள்ள இருளை நீக்கும்

அவ்வரதனில் = அந்த சூரியனின்

ஒளி பெற மலர்ந்த தொல் குலம் = ஒளி  பெற சிறந்த இந்த சூரிய குலம்

“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால்  = பரதன் என்ற ஒருவனால் பழி அடைந்தது என்று சொல்லும் நிலை வந்து விட்டதே என்று என்று எண்ணி வருந்தினான்


மரதக மலை என வளர்ந்த தோளினான். = மரகத மலை போல வளர்ந்த தோளினை உடைய  பரதன்

இலஞ்சம் வாங்கும்போது, பொய் புரட்டு செய்யும் போது, கொலை , களவு செய்யும் போது  குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். தாய் தந்தையரை நினைக்க வேண்டும்.   குலத்தை நினைக்க வேண்டும்.

தவறான செய்கைகள் , செய்பவனுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்திற்கு மட்டும் அல்ல,  அவன் குலத்துக்கே கெட்ட  பெயரை கொண்டு வந்து சேர்க்கும்.

அதனால் தான் வள்ளுவரும் - "ஈன்றாள் பசிக் காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை " என்றார்.

இந்த அரசை தான் பெற்றுக் கொண்டால் தன் குலத்துக்கே பழி வந்துவிடுமே என்று அஞ்சினான் பரதன்.

அப்படி நினைத்ததால் அவன் உயர்ந்தான்.

அது உயரும் வழி.






1 comment:

  1. பரதன் இப்படி சூப்பரான ஆளு என்று சொல்லி இத்தனை பாடல்களா?! அருமை.

    ReplyDelete