Tuesday, September 8, 2015

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?


தண்டலையார் சதகம் என்ற நூலை எழுதியவர் படிக்காசு புலவர்.  இந்த நூல் முழுவதும் இனிமையான எளிமையான தமிழ் பாடல்கள்.

உடம்பில் வலு இருக்கின்ற போது என்னவெல்லாம் செய்கிறோம், சொல்கிறோம்.

சண்டை பிடிக்கிறோம், வாதம் செய்கிறோம், மற்றவர்களின்  உணர்சிகளைப் பற்றி கவலைப் படுவது கிடையாது.

அறச் சிந்தனை கிடையாது.

ஒரு நாள் வரும். படுக்கையில் படுத்து செய்ததெல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்கும் போது , செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யலாம் என்று நினைக்கும் போது, எழுந்திரிக்க முடியாது, பேச முடியாது, நடக்க முடியாது...

இன்னும் கொஞ்ச நாள் ஆரோக்கியம் வேண்டும் என்றால் கிடைக்குமா ? நல்லது செய்து விட்டு வருகிறேன் என்று கிளம்ப முடியுமா ?

முடியாது.

இயலாமையை நினைத்து கண்ணீர் விடலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

பூனை , எலியைப் பிடித்து கொண்டு போகும். எலி என்னதான் அழுதாலும் பூனை விடாது.

அது போல, நம் காலம் முடியும் போது என்னதான் அழுதாலும் மரணம் விடாது.

அதற்கு முன் நல்லது செய்யுங்கள்.

பாடல்

பொலியவளம் பலதழைத்த தண்டலநீ ணெறிபாதம்
     போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர் மறஞ்செய்வீர் நமன்தூதர்
     வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர் உகுத்தாலும்
     விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித் ததுவிடுமோ
     என்செய் வீரே.          


பொருள்

பொலியவளம் = பொலிவு தரும் வளங்கள்

பலதழைத்த = பல தழைத்து நிற்கும்

 தண்டல = தண்டலை எனும் ஊரில் உள்ள சிவனை

நீ  ணெறிபாதம் = நீண்ட நல் (நெறியில்) செலுத்தும் பாதங்களை

போற்றி  = போற்றி

நாளும் = ஒவ்வொரு நாளும்

வலிய = வல்லமை பெற

வலம் செய்தறியீர் = வலம் செய்து அறியீர் .

மறஞ்செய்வீர் = கொடுமைகள் செய்வீர்

நமன்தூதர் = எமனின் தூதர்கள்

வந்து = வந்து

கூடி = கூட்டமாக

மெலிய = நீங்கள் மெலிவு அடைய

அறைந் திடுபொழுது = கூப்பிடும் போது

கலக்கண்ணீர் உகுத்தாலும் = கலங்கி கண்ணீர் உகுத்தாலும்

விடுவ துண்டோ = விடுவது உண்டோ ?

எலியழுது புலம்பிடினும் = எலி அழுது புலம்பினாலும்

பூனைபிடித் ததுவிடுமோ = பூனை பிடித்தது விடுமோ ?

என்செய் வீரே. = என்ன செய்யப் போகிறீர்கள் ?

நம் ஓலை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே ..நல்லதைச் செய்யுங்கள்




1 comment: