Tuesday, January 5, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2 




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

மனிதன், இறைவனிடம் பொதுவாகவே ஏதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.

படிப்பைக் கொடு, செல்வத்தைக் கொடு, உடல் ஆரோக்யத்தைக் கொடு, மன நிம்மதியைக் கொடு, என் பிள்ளைக்கு வேலை, நல்ல இடத்தில் திருமணம், சிக்கல்களில் இருந்து விடுதலை, என்று ஏதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

பற்றுகளை விட்டு விட்டேன் என்று சொல்லும் துறவிகளும், ஞானிகளும் கூட முக்தி கொடு, பரமபதம் கொடு என்று கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாவிட்டால் , இங்கேயே, உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும்  வரம் தா என்று வேண்டுகிறார்கள்.

காலம் காலமாக மனிதன் ஆண்டவனிடம்  எதையோ கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். அவனின் தேவைகள் தீர்ந்தபாடில்லை.


இறைவா உன் கருணை  வேண்டும்,உன் அன்பு வேண்டும், உன் தயை வேண்டும் என்று உருகிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இறைவன் பெரிய ஆள் தான். அவனால் எல்லாம் முடியும். மிக மிக சக்தி வாய்ந்தவன் தான்.

எதைக் கேட்டாலும் தருவான்...

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு தாய்  இருக்கிறாள். அவளுடைய பையன் படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகி விட்டான். அவனுக்கு கீழே ஒரு பெரிய நிறுவனமே இயங்குகிறது. அவன் ஆணையை நிறைவேற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது , அந்தத் தாய்  " பாத்து போப்பா, ஜாக்கிரதையா போப்பா " என்று சொல்லி அனுப்பவாள் .

ஏன் ?

மகனுக்கு அறிவில்லையா ? அவனுக்கு எப்படி போக வேண்டும்  என்று  தெரியாதா ?

 தெரியும்.அது அந்தத்  தாய்க்கும்    தெரியும்.  இருந்தும்,அவள் மனதில் ஊற்றெடுக்கும் காதலால், அந்த பிள்ளையின்  மேல் உள்ள வாஞ்சையால் அவள் அப்படி சொல்கிறாள். அவனுக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலையில் சொல்கிறாள்.

 பக்தி இலக்கியத்தில் முதன் முதலாக , இறைவனிடம் ஒன்றும் கேட்காமல், ஒரு நன்றி கூட சொல்லாமல், "இறைவா நீ நல்லா இரு ...பல்லாண்டு காலம் நீ சௌக்கியமாக வாழ வேண்டும்  " என்று பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்.

இறைவனுக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ? வந்தாலும் அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ளத் தெரியாதா ?

தெரியும். அது ஆழ்வாருக்கும் தெரியும்.

இருந்தும்  பெருமாள் மேல் அவ்வளவு காதல்.

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

ஒரு தாய், தன் பிள்ளையை வாழ்த்துவதைப் போல வாழ்த்துகிறார்.


இவர் வாழ்த்துவதைப் பார்த்து பெருமாளுக்கு ஒரே  சிரிப்பு.

எனக்கு என்ன ஆபத்து வந்து விடும் என்று நீர் என்னை வாழ்த்துகிரீர். என்னுடைய தோள்களைப் பாரும். பெரிய பெரிய மல்லர்களை வீழ்த்திய தோள்கள் என்று தன் தோள்களைக் காட்டுகிறான் அவன்.

 அதைப் பார்த்ததும் , ஆழ்வாருக்கு இன்னும் பயம் வந்து விட்டது....

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


என்ன பயம் ?

=============== பாகம் 2 ===============================================

பிள்ளை வந்து அம்மாவிடம், "அம்மா இன்னிக்கு பள்ளிக் கூடத்ல எனக்கும் என்  நண்பர்களுக்கும் சண்டை வந்திருச்சு...எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டேன் ...அவங்க எல்லாம் கீழே விழுந்து நல்லா அடிபட்டுகிட்டாங்க "...என்று  மகன் தன் வீர தீர பிரதாபங்களை சொன்னால் அம்மா என்ன நினைப்பாள் ...

"ஐயோ, இந்த பிள்ளை இப்படி எல்லார் கிட்டேயும் சண்டை போடுறானே...இன்னிக்கு  இவன் ஜெய்ச்சிட்டான் ...நாளைக்கு அவனுக எல்லாம்  ஒண்ணா சேர்ந்து இவனோட சண்டை போட்டா இவன் என்ன ஆவானோ " என்று பதறுவாள்.

"அப்படி எல்லாம் சண்டை போடக் கூடாதுடா " என்று சொல்லுவாள்.

அவனோ "...அம்மா நீ ஒரு சரியான பயந்தாங்கோளி ...என் கிட்ட யார் சண்டைக்கு  வர முடியும் " என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே விளையாடப் போகிறான்.

அம்மாவுக்கு கவலை....

அவனுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று.

கையைக் காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணுமே என்று கவலைப் படுவாள்.

அதே போல பெரியாழ்வார்...கவலைப் பட்டு பெருமாளை வாழ்த்துகிறார் ...

பெருமாள் சொல்கிறார்

"என் தோள் வலிமையைப் பார், மல்லர்களை சாய்த்து வெற்றி பெற்றவன் ...என் கிட்ட   யார் மோத முடியும் " என்று ஆழ்வாருக்கு ஆறுதல் சொல்கிறான்.

ஆழ்வாருக்கு அதுவே பெரிய கவலையாகப்  போய் விட்டது.

தான் தான் பெரிய சண்டியர் என்று மல்லுக்கு சண்டைக்குப் போய்  எங்காவது அடி கிடி   பட்டுவிடப் போகிறது என்று கவலைப் பட்டு...

உன் வலிமையான தோள்களுக்கும் பல்லாண்டு

உன்னைத் தாங்கி நிற்கும் உன் திருவடிகளுக்கும் பல்லாண்டு

என்று பெருமாளுக்கு ஒரு துன்பமும் வந்து விடக் கூடாது, அவர் பல்லாண்டு வாழ வேண்டும்   என்று வாழ்த்துகிறார்.

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


அது என்ன திருவடிகளுக்கு காப்பு ? பெருமாளின் கண் முக்கியம் இல்லையா ? காது முக்கியம் இல்லையா ? மார்பு முக்கியம் இல்லையா ? எல்லாவற்றையும் விட்டு விட்டு எடுத்த எடுப்பில் சிவந்த அடிகளுக்கு ஏன் காப்புச் சொல்கிறார் ?


பொதுவாகவே, நமது தமிழ் இலக்கிய மரபில் இறைவனை வாழ்த்துவது என்றால் அடியில் தொடங்கி முடியில் முடிக்க வேண்டும்.

இறைவியை போற்றுவது என்றால் முடியில் தொடங்கி அடியில் முடிக்க வேண்டும்.

பாதாதி கேசம்
கேசாதி பாதம்

என்று சொல்லுவார்கள்.

உதாரணமாக, அபிராமி அந்தாதி பாட தொடங்கிய பட்டர்...

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று தலையில் இருந்து தொடங்குகிறார்.

இறைவனைப் பாட வந்த மாணிக்க வாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன்  தாள் வாழ்க 

என்று திருவடியில் இருந்து தொடங்கினார்.

இங்கும் நம்மாழ்வார் பெருமாளின் திருவடிகளை முதலாக வைத்து தொடங்குகிறார்.


1 comment:

  1. அருமையான தொடக்கம் புத்தாண்டுக்கு. இன்னும் பலப் பல உரைகளை இந்த வருடத்தில் அளிக்கவும். நன்றி.

    ReplyDelete