Wednesday, January 6, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்


அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே



எனக்கு அப்புறம் என் பிள்ளையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை எல்லா தாய்மார்களுக்கும் உண்டு.

அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு எனக்குத்தான் தெரியும். நான் இல்லாட்டி என் பிள்ளை என்ன செய்வான் என்று தவிக்காத தாய் இல்லை.

மகன் வெளியூருக்கு படிக்கப் போய் இருக்கலாம், வேலை நிமித்தமாய் வெளி நாட்டுக்கோ, வெளியூருக்கோ போய் இருக்கலாம்....

...அங்க என் மகன் என்ன துன்பப் படுகிறானோ, வேளாவேளைக்கு சாப்பிட்டானோ, குளித்தானோ, தூங்கினானோ என்று மறுகிக் கொண்டிருப்பாள் தாய்.

அது போல,

பெருமாளே, நீயோ எப்போதும் இருப்பவன். நானோ சாதாரண மானிடன். என் ஆயுள் அற்பம். எனக்கப்புறம் உன்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று தவித்த பெரியாழ்வார் தனக்கும் சேர்த்து பல்லாண்டு பாடிக் கொள்கிறார்.

"அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு"

அடியவர்களாகிய நாங்களும், ஆண்டவனாகிய நீயும் பல்லாயிரம் ஆண்டுகள் பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார்.

தனக்கு ஆயுள் வேண்டும் என்று இல்லை. தான் இருந்தால் பெருமாளை ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே என்றே ஆதங்கத்தில் வேண்டுகிறார்.

நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற அனைத்து அடியார்களும் உன்னோடு எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் .

அப்புறம் , ஆழ்வார் சிந்தித்தார். என்ன தான் இருந்தாலும் தான் ஒரு ஆண். மேலும் ஒரு மானிடன். தான் எத்தனை சேவை செய்தாலும் அது ஒரு மனைவி கணவனுக்குச் செய்யும் சேவை போல வருமா என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தார்.

பெருமாளின் வலது மார்பில் பெரிய நாச்சியாரின் உருவம் தெரிந்தது.

"ஹா...இவள் தான் சரி"

என்று நினைத்து அவளுக்கும் ஒரு பல்லாண்டு பாடினார்....

"வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு"


பெருமாளுக்குத் துணையாக திருமகள் இருக்கிறாள். அவர்களுக்கு ஒரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள அடியவர்களான நாங்கள் இருக்கிறோம்.

இதையும் மீறி பெருமாளுக்கு ஏதாவது அல்லது யாராவது துன்பம் தருவார்களே ஆனால்,  அவர்களிடம் இருந்து பெருமாளை காக்க சங்கத்தாழ்வானும் சக்கரத்தாழ்வானும் இருக்கிறார்கள். அவர்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறார்.

படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பெருமாள்,  பெருமாளோடு சேர்ந்து உறையும் திருமகள், அவரின் அடியவர்கள், அவனுக்குத் துணை செய்யும் சங்கும் சக்கரமும் என பெருமாளோடு தொடர்புள்ள எல்லோரையும் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறார். 









1 comment:

  1. என்ன அருமையான, சுவை ததும்பும் பாடல்! படிக்கும்போது உதட்டோரம் ஒரு புன்முறுவல் வருகிறது. அதுதான் கவிதைக்கு வற்றி, உன் உரைக்கு வெற்றி! நன்றி.

    ReplyDelete