Monday, January 18, 2016

இராமாயணம் - இராமனின் பிரிவு

இராமாயணம் - இராமனின் பிரிவு 


சீதையை பிரிந்த இராமனின் நிலையைப் பார்த்தோம். இராமன் சீதையின் அழகை, அவளின் அருகாமையை இழந்ததை நினைத்து வாடுகிறான். குறிப்பாக காமம் அவனை வாட்டுகிறது. மன்மத கணைகளுக்கு வருந்துகிறான்.

அதே சமயம், இலங்கையில் சீதை என்ன நினைக்கிறாள் ?

"யார் இராமனுக்கு உணவு தருவார்கள் ? அவருக்கு தானே போட்டு சாப்பிடத் தெரியாதே. யார் அவருக்கு உணவு பரிமாறுவார்கள் ? வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் எப்படி அவர் சமாளிப்பார் ?  என் துன்பத்திற்கு ஒரு மருந்தும் இல்லையே" என்று வருந்துகிறாள்.

இராமனோடு தான் இன்புற்று இருக்க முடியவில்லையே என்று அவள் வருந்தவில்லை. அவன் எப்படி சாபிட்டானோ, வீட்டுக்கு யாராவது வந்தால் எப்படி அவர்களை உபசரிப்பானோ என்று வருந்துகிறாள்.

பாடல்

'அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள் 

‘அருந்தும் = உண்ணும்

மெல் அடகு =  இலை கறி உணவு

ஆர் இட = யார் பரிமாற

அருந்தும்? ‘ = சாப்பிடுவான் ?

என்று அழுங்கும்; = என்று வருந்துவாள்

‘விருந்து கண்டபோது என் உறுமோ?  = விருந்து வந்தால் என்ன செய்வானோ

என்று விம்மும்; = என்று நினைத்து விம்முவாள்

‘மருந்தும் உண்டுகொல் = மருந்து கூட இருக்கிறதா

யான்கொண்ட நோய்க்கு? = என் துன்பத்திற்கு

‘என்று மயங்கும்; = என்று மயங்குவாள்

இருந்த = அவள் அமர்ந்து இருந்த

மா நிலம்  =நிலம்

செல் அரித்து எழவும் = கரையான் புற்று எழுப்பி அரித்த போதும்

ஆண்டு எழாதாள். = இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்து இருந்தாள்

இதில் நாம் பார்க்க வேண்டியது இரண்டு விஷயங்கள்.

ஒன்று சீதையின் துயரம். அது தெளிவாகத் தெரிகிறது. கணவன் எப்படி சாப்பிடுவன், எப்படி விருந்தை உபசரிப்பான் என்று வருந்தியது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது, பாடலின் உள்ளே கம்பன் காட்டும் இல்லறம். இல்லத்தின் அறம்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ? 

ஏன் திருமணம் செய்து கொண்டாய் என்று திருமணம் செய்து கொண்ட யாரையாவது கேட்டால்   என்ன சொல்லுவார்கள் 

"கணவன் அல்லது மனைவியோடு சேர்ந்து இன்பம் அனுபவிக்க, வாரிசுகளை பெற்றுக் கொள்ள " என்று சொல்லுவார்கள். 

அதற்கா திருமணம். இன்பம் அனுபவிப்பதும், சந்ததிகளை பெற்றுக் கொள்வதும்  விலங்குகள் கூட செய்கின்றன. 

இல்லத்தின் அறம் பற்றி திருவள்ளுவன் சொன்னதை கம்பன் இங்கே சொல்கிறான்.

அது என்ன அறம் ?

மேலும் சிந்திப்போம். 


1 comment:

  1. ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்! இராமனுக்கும் சீதைக்கும் கூட! கம்பரே சொல்லி விட்டார்.

    ReplyDelete