Tuesday, January 19, 2016

தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன்




தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


எல்லோருக்கும் தெரிந்த தேவாரம் தான்.

ஞான சம்பந்தருக்கு  உமை பால் தந்தாள். குளத்தில் இருந்து குளித்து வெளியில் வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு யார் பால் தந்தது என்று கேட்டார். குழந்தை வானத்தைக் காட்டி

"தோட்டினை காதில் உள்ள அவன், எருதின் மேல் ஏறி , தூய்மையான வெண்ணிலவின் கீற்றை தலையில் சூடி, காட்டில் உள்ள உள்ள சாம்பலை உடலில் பூசி, என் உள்ளத்தை கவர்ந்த அவன் தந்தான்.  அவனை மலரால் நான் முன்பு அர்ச்சனை செய்தேன். எனக்கு அருள் புரிந்தான். சிறந்த பிரமாபுரம் என்ற ஊரில் இருக்கும் பெம்மான் இவன் "

.என்று பாடினார்.

பாடலும் பொருளும் எல்லோருக்கும் தெரிந்தது  தான்.

தெரியாத உட்பொருள் என்ன என்று பார்ப்போம்.

பாட்டை கொஞ்சம் உற்று பார்த்தால் ஏதோ சம்பந்த சம்பந்தமில்லாத வாரத்தை கோர்வைகள் போலத் தோன்றும்.

தோடுடைய செவியன்
விடை ஏரியவன்
மதி சூடியவன்
சாம்பலை பூசினவன்
உள்ளத்தை கவர்ந்தவன்
அருள் செய்தவன்
பிரம புரத்தில் இருப்பவன்

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் ஒரே வார்த்தை அடுக்காக இருக்கிறதே  என்று நினைப்போம்.

இறைவன் ஐந்து தொழில்களை செய்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். அவையாவன

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

 அது அப்படி இருக்கட்டும் ஒரு பக்கம்.

இந்த உலகம் எல்லாம் ஊழிக் காலத்தில் அழிந்து போகும். எது அழிந்தாலும் அறம் அழியாது. தர்மம் என்றும் நிலைத்து நிற்கும். உலகமே அழிந்தாலும் தர்மம் அழியாது.

உலகமே ஊழித் தீயால் அழிந்த போது தர்மத்தை எருதாகச் செய்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார் சிவன். எருதின் இன்னொரு பெயர் விடை.

உலகில் உள்ள அத்தனை சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தர்மம் தான் விடை.

அப்படி உலகம் அழிந்த போது தர்மத்தை விடையாக (எருதாக) செய்ததால், அது படைப்புத் தொழில். "விடை ஏறி"

சந்திரன், தன் மாமனாரின் சாபத்தால் நாள் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். தன்னை காக்கும் படி வேண்டிய சந்திரனை , காப்பாற்றி தன் தலையில் சூடிக் கொண்டார். ஆதலால் அது காத்தல் தொழில். "தூவெண் மதி சூடி"

உலகம் ஊழித் தீயால் அழியும். மிஞ்சுவது சாம்பல் மட்டுமே. அந்த சாம்பலை மேலே பூசிக் கொண்டிருப்பவன் என்பதால் அது அழித்தல் தொழில். "காடுடைய சுடலை பொடி பூசி "

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறான். இருந்தும் உயிர்களால் அவனை அறிய முடிவதில்லை. மாயை மறைக்கிறது. மனதுக்குள் மறைந்து நிற்பதால் அது மறைத்தல் தொழில். "என் உள்ளம் கவர் கள்வன்". கள்வன் மறைந்து தானே இருப்பான்.

வேண்டும் அடியவர்களுக்கு அவன் அருள் செய்வதால் அது அருள்தல் தொழில்.  "ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த"

இப்படி ஐந்து தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று குறிப்பாக உணர்த்தும் பாடல்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாட்டின் ஆழம்  விளங்கும்.

தேவாரத்தின் ஒரு பாடலுக்கு இவ்வளவு பொருள்.

எவ்வளவு படிக்க இருக்கிறது.


No comments:

Post a Comment