Sunday, January 24, 2016

திருக்குறள் - இகல்

திருக்குறள் - இகல் 



இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

மனிதனுக்கு துன்பம் பெரும்பாலும் இரண்டு இடங்களில் இருந்து வருகிறது...ஒன்று உடலினால் ஏற்படும் துன்பம், இரண்டாவது மனிதனால் ஏற்படும் துன்பம்.

உடல் உபாதைகளை எளிதில் கண்டு கொள்ளலாம்...உடலுக்கு ஒரு வியாதி வரும் என்றால் அதன் விளைவுகள் அதைக் காட்டிக் கொடுத்து விடும்...உடல் சூடு அதிகம் ஆகும், தலை வலி, காய்ச்சல், பசி இன்மை, தூக்கம் இன்மை என்று பல விதங்களில் அந்த நோய் வெளிப்படும். அதைக் கொண்டு இது இன்ன நோய் என்று அறிந்து அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யலாம்.

மனதில் வரும் நோயை கண்டு கொள்வதும் கடினம். குணப் படுத்துவதும் கடினம்.

பொறாமை, பேராசை, களவு எண்ணம், கோபம், பொருந்தாக் காமம் போன்ற  மனதில் தோன்றும் நோய்களை கண்டு கொள்வதும் கடினம், நீக்குவதும் கடினம்.

மாற்றான் மனைவி மேல் காமம் கொண்ட இராவணனுக்கு தான் செய்வது தவறு என்றே தெரியவில்லை. தெரிந்தால் அல்லவா திருத்திக் கொள்ள.

மேலும், மன நோய்களுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இந்த நோயை வளர்த்து விட்டு அதில் ஆதாயம் பார்ப்பார்கள்.

அதில் முதலாவதாக வருவது, பிரிவினை.

மக்களை பிரித்து வைத்தால், அவர்களை ஆள முடியும். நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை பிரித்து ஒருவர் மேல் மற்றவருக்கு ஒரு வெறுப்பினை வளர்த்து விட்டு ஒவ்வொரு அரசியல் வாதியும், மத குருமார்களும் தங்கள் ஆதாயத்தை பார்த்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் அது தெரியாமல் வெறுப்பினை வளர்த்துக் கொண்டு நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், எப்படி எல்லாம் மக்களை பிரித்துப் போட்டிருக்கிறார்கள்..

மொழியின் பெயரால், ஜாதியின் பெயரால், வட இந்தியா, தென் இந்தியா என்ற நில பாகுபாடால்...இப்படி பல வழிகளில் மக்கள் மத்தியில் வெறுப்பினை தூவி அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள்.

நாடு அளவுக்கு ஏன் போக வேண்டும்.

சொந்தத்தில், வீட்டில், நட்பில், அலுவலகத்தில் - மற்றவர் கொண்ட வெறுப்பால் எவ்வளவு சிக்கல்கள் வருகின்றன. வெறுப்பு என்ற குணம் வந்தவுடன், யார் மேல் வெறுப்பு கொண்டோமோ அவர்களை விட்டு விலகிப் போய் விடுகிறோம். பின், விலகியதற்கு காரணம் கண்டு பிடிக்கிறோம். மேலும் வெறுப்பை கூட்டுகிறோம்.

வெறுப்பு என்பது இல்லாவிட்டால், யார் மீதும் பகை இல்லை.

நட்பு இருக்கிறதோ இல்லையோ, பகை இருக்காது.

இந்த வெறுப்பைப் பற்றி வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்....

இகல் என்று பெயர்.

இகல் என்றால் வெறுப்பு.

பாடல்

இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

பொருள்

இகல் என்ப = இகல் என்பது என்ன என்றால்

எல்லா உயிர்க்கும் = அனைத்து உயிர்களுக்கும்

பகல் என்னும் = பிரிவினை என்னும் (பகுத்தல் என்பதில் இருந்து பகல்)

பண்புஇன்மை = பண்பற்ற செயல்

பாரிக்கும் நோய் = உலகில் நிலவும் நோய் (பார் = உலகம்)

வெறுப்பு வந்தால் பிரிவினை வரும். பிரிவினை வந்தால், சேர்ந்து வாழ்வதில் உள்ள சுகம் போகும். அதன் மூலம் வரும் வசதிகள், நன்மைகள் போகும்.

சிந்தித்துப் பாருங்கள்...யார் மேல் எல்லாம் உங்களுக்கு வெறுப்பு என்று. அந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது என்று. அந்த வெறுப்பினால் விளைந்தவைகள் என்ன என்ன என்று.

வெறுப்பை மாற்றுங்கள். வாழ்வு இனிக்கும்.

வள்ளுவர் சொல்கிறார்.



















No comments:

Post a Comment