Saturday, January 30, 2016

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை 




உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 

எப்போதாவது அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தது உண்டா ? அம்மாவின் சேலைக்கு ஒரு மணம் உண்டு. அம்மாவின் மணம் அந்த சேலையில் இருக்கும்.

எப்போதாவது அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்தது உண்டா ? அப்பாவின் வேட்டியிலும் அப்பாவின் மணம் தெரியும்.

குழந்தையை தோளில் போட்டு தூங்க வைக்கும் போது குழந்தையின் மணம் தெரியும்.

அன்யோன்யமாய் இருப்பவர்களுக்கு இந்த வாசம் தெரியும்.

உடுத்த உடையில், உடுத்தியவரின் வாசம் இருக்கும்.

இந்த உலகை யார் படைத்தார் ? படைத்தவன் பெயர் என்ன ? ஊர், விலாசம் என்ன ? உலகம் படைக்கப் பட்டதா அல்லது தன்னைத் தானே படைபித்துக் கொண்டதா ?

விடை தெரியாத கேள்விகள்.

எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம், நீங்களோ, நானோ இந்த உலகைப் படைக்கவில்லை.

யாராலோ, எப்படியோ படைக்கப் பட்டது. அது யார் என்று தெரிய வேண்டும் என்றால், உலகை அன்யோன்யமாக, ஆழ்ந்து அனுபவித்தால் இது யாரிடம் இருந்து  வந்தது என்று தெரியும்.

புடவையின் மணத்தைக் கொண்டு அம்மாவை அறிவதைப் போல, உலகினை அறிந்தால், உலகைப் படைத்தவனை அறிய முடியும்.

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்

அவன் உடுத்த ஆடை, அவன் உண்ட உணவு, அவன் சூடிய மாலை இவற்றை உடுத்து, உண்டு, சூடி அவனை அறியலாம்.

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, சூடும் மாலை என்பன குறியீடுகள். இந்த உலகில் எல்லாம்   எங்கிருந்தோ வந்தது. உலகில் உள்ளவற்றை ஆழ்ந்து அறிவதன் மூலம்   இதைப் படைத்தவனை அறியலாம்.

ஆடை - கண்டு அறிவது. பார்த்தால் அதன் நிறம் தெரியும். கனம் தெரியும். பார்த்து அறிவது.  புறத் தோற்றம். பீதக ஆடை என்றார். பீதகம் என்றால் மஞ்சள். மஞ்சள் நிற ஆடை. மஞ்சள் அல்ல எங்கே முக்கியம். ஆடை என்பது பார்த்து அறியக் கூடியது. ஒரு புறத் தோற்றம் உள்ளது. 

உணவு - உணர்வது. உணவை பார்த்து அறிய முடியாது. சுவைத்துத் தான் உணர முடியும்.  எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது. இனிப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா ? வெளியில் சொல்ல முடியாது. அனுபவிக்க முடியும். 

மணம்  -  துளசியின் மணம் .  மணம் காற்றில் இருக்கும். உருவம் அற்றது. எங்கும் பரந்து விரிந்து கிடக்கும். 

ஆடையை நான் மட்டும்தான் அணிய முடியும்.

உணவை கொஞ்ச பேருடன் பகிர்ந்து உண்ணலாம். 

மணம் என்பதை நான் பிடித்து வைக்க முடியாது. ஒரு சமயம் இருக்கும், அதை உணர்வதற்குள் மறைந்து விடும். அது எல்லோருக்கும் பொது. 

முதலில்  இறைவன் என்பவன் எனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு அருள் புரிய வேண்டும், எனக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பரம பதம் அருள வேண்டும்,  என்ற  சுயநலம் சார்ந்தே பக்தி ஆரம்பிக்கிறது. 

அடுத்த கட்டம், பக்தியை, இறை அனுபவத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது. எல்லோரிடமும் என்றால் நமக்கு தெரிந்த, அருகில் உள்ள எல்லோரிடமும். 

அதற்கும் அடுத்த கட்டம், இறை உணர்வ, பக்தி என்பது எங்கும் பரவி நிற்பது. நான் யார்   அதை மற்றவர்களுக்குத் தர ? அது எல்லோருக்கும் பொது என்ற எண்ணம் வருவது. 

அவனை அறிவது. அறிந்த அவனை மற்றவர்களோடு  பகிர்ந்து கொள்வது. அறிவதும், உணர்வதும், பகிர்வதும் சுய முயற்சியால் நிகழ்வது. இவை அனைத்தையும் தாண்டி, என்றும் எப்போதும் இருக்கும் இறை தன்மையை உணர்வது  அடுத்த கட்டம். அது நம் சிந்தனைக்கும், அறிவுக்கும் சிக்காதது. ஒரு சமயம்  புரிந்த மாதிரி இருக்கும். மறு சமயம் நழுவி விடும்.  துளசியின் மணம் போல.

அறிவால் அறிவது. - "நீ உடுத்த பீதக ஆடை "

உணர்வால் புரிவது.- "கலந்தது உண்டு "

அறிவையும், உணர்வையும் தாண்டி நிற்பது  " தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன"

பாடல்

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 


பொருள்

உடுத்துக் களைந்த = உடுத்து களைந்த

நின் = உன்னுடைய

பீதக ஆடை = மஞ்சள் நிற ஆடை

உடுத்து = (அதை நாங்கள் ) உடுத்து

கலத்தது உண்டு = (நீ) உண்ட கலத்தில் உண்டு

தொடுத்த துழாய் மலர் = தொடுத்த துளசி மற்றும் மலர்  மாலையை

சூடிக் = நீ சூடி

களைந்தன சூடும் = நீ அதை களைந்த பிறகு அதை சூடும்

இத்தொண்டர்களோம் = தொண்டர்களாகிய நாங்கள்

விடுத்த = நீ சொல்லிய

திசைக் கருமம் = அன்றாட கருமங்களை

திருத்தித் = திருத்தமாகச் செய்து

திரு வோணத் திருவிழவில் = திருவோண நட்சத்திரத்தில் வரும்
திருவிழாவில்

படுத்த = பள்ளி கொண்ட

பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் = படம் எடுத்து ஆடும் நாகத்தின் மீது பள்ளி கொண்டவனுக்கு

பல்லாண்டு கூறுதுமே = பல்லாண்டு கூறுவோம்


1 comment:

  1. காதலன்-காதலி இருவரும் ஒருவர் கடித்த ஆப்பிளை மற்றவர் உண்பதை சினிமாவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete