Sunday, January 31, 2016

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

நாம் யாருக்குமே அடிமையாக, அடியவனாக இருக்க விரும்புவதில்லை. எப்போதுமே தலைவனாக, மற்றவர்களுக்கு வழி நடத்துபவர்களாக, எல்லாவற்றையும் கட்டுபாட்டுக்குள் வைத்து இருப்பவர்களாவே இருக்க விரும்புகிறோம்.

ஆனால், நடப்பது என்ன. எவ்வளவுகெவ்வளவு நாம் இந்த உலகை, அதில் உள்ள மக்களை நம் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் அவற்றிற்கு அடிமையாக மாறிப் போகிறோம்.

எதன் மேல் பற்று இருக்கிறதோ, அதற்கு நாம் அடிமையாகிப் போகிறோம்.

அது எப்படி ?

என் வீட்டு வேலையாள், அலுவகலத்தில் எனக்கு கீழே வேலை பார்பவர்கள், தோட்டக்காரன், வண்டி ஓட்டுபவன், இவர்களுக்கெல்லாம் நான் எப்படி அடிமையாவேன் ?

எந்தத் தலைவனும், தொண்டனுக்கு அடிமைதான்.

தொண்டனுக்கு வேண்டியதை, விரும்பியதை செய்யும் வரை தான் தொண்டன் தலைவன் பின்னால் நிற்பான்.

தொண்டன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று தலைவன் நினைத்தால், தொண்டனுக்கு எது பிடிக்கும், எது தேவை என்று பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

குடும்பத்திலும் அப்படித்தான். குடும்பத் தலைவன் சம்பாதித்து கொண்டு வரும்வரை, குடும்பத்திற்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருக்கும்வரை மற்றவர்கள் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

 இப்படி ஆயிரம் இடத்தில் அடிமைகளாகத்தான் இருக்கிறோம்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், நாம் விரும்பியே அடிமைகளாக இருக்கிறோம்.

இப்படி யார் யாருக்கோ அடிமைகளாக இருப்பதை விட, ஏன் இறைவனுக்கே அடியவனாக இருக்கக் கூடாது ?


 பெரியாழ்வார் சொல்கிறார்

"உனக்கு என்று ஆட்பட்டோமோ அன்றில் இருந்து நான் மட்டும் அல்ல, என் குடும்பமே வீடு பேற்றை அடைந்து விட்டோம் "

இறைவனுக்கு ஆட்படுவதில்தான் பெரியவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம்....

"நான் உன் அடிமை. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். நான் உன்னுடைய பொருள். நீ என்னை ஆண்டு கொள், விற்க வேண்டும் என்றால் விற்றுக் கொள், அடமானம் வைக்க வேண்டும் என்றால் அடமானம் வைத்துக் கொள். ஆனா ல், என்ன செய்தாலும், என்னை விட்டு விடாதே" என்று உருகுகிறார் மணிவாசகர்.

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,

மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

நான் என்றைக்கு உனக்கு அடியவனானேனோ, அன்றே நானும் என் குலமும் வீடு பேற்றினை அடைந்து விட்டோம்.

அப்படி என்று யாரிடம் சொல்கிறார் ?

"ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே "

ஐந்து தலையுடன் படம் எடுத்து ஆடும் நாகப் பாம்பின் மேல் பாய்ந்தவனே என்று கண்ணனாக வந்த திருமாலிடம் கூறுகிறார்.

அது என்ன ஐந்து தலை நாகம் ?

புலன்கள் ஐந்தையும் அடக்கி அதன் மேல் நடனம் ஆடியவன். மற்றவர்கள் இந்த ஐந்து புலன்களையும் கண்டு பயப்படுவார்கள். கண்ணன் , அந்த பாம்பை அடக்கி அதன் மேல் நடனம் ஆடினான். புலன்களை அடக்கி விட்டால், பின் அவை நாம் சொல்வதை  கேட்கும். இல்லை என்றால் , அது நம்மை பாடாய் படுத்தும்.

பாடல்

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பொருள் 

எந்நாள் =எந்த நாளில்

எம்பெருமான் = என்னுடைய பெருமானே

உன்றனுக்கு = உனக்கு

அ டியோமென்று = அடியவன் என்று

எழுத்துப் பட்ட = எழுதி தந்து விட்டோமோ

அந்நாளே = அந்த நாளே

அடியோங்கள் = அடியவர்களாகிய நாங்கள்

அடிக்குடில் = குலம் முழுவதும்

வீடு பெற்றுய்ந்தது காண் = வீடு பேற்றினை அடைந்தோம்

சென்னாள்  = செம்மையான நாளில் . சிறந்த நாளில்

தோற்றித் = தோன்றி

திருமதுரையுட் = மதுராபுரியில்

சிலைகுனிந்து = வில்லை வளைத்து

ஐந்தலைய = ஐந்து தலையை கொண்ட

பை = படம் எடுத்து ஆடும்

நாகத்தலைப் பாய்ந்தவனே ! = நாகத்தின் தலையின் மேல் பாய்ந்தவனே

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே = உனக்கு பல்லாண்டு என்று வாழ்த்து கூறுகிறோம்















No comments:

Post a Comment