Wednesday, January 6, 2016

நான்மணிக்கடிகை - பெரிய அறன் ஒக்கும்

நான்மணிக்கடிகை -  பெரிய அறன் ஒக்கும் 



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம் பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அடுத்து, "பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்" என்றால் என்ன என்று பார்ப்போம்.

அற நெறியில் வாழ வேண்டும், அறத்தை பின் பற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லப் படுகிறது.

அற நெறி என்றால் என்ன ? அது எந்தப் புத்தகத்தில் இருக்கிறது ?

நம் பெரியவர்கள் அறத்தை இரண்டாகப் பிரித்தார்கள்

- இல் அறம் = இல்லறம்
- துறவு + அறம் = துறவறம்

துறவறம் தூய்மையானது. பற்று அற்றது. ஆசைகளை துறந்தது. ஆனால் அது எல்லோராலும் முடியாது .

எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவது என்றால் நடக்கிற காரியமா ?

இல்லறத்தில் இருந்து அதை ஒழுங்காக நடத்திக் கொண்டு சென்றால் அதுவே தூய்மையான துறவறத்துக்கு ஒப்பானது.

பெரிய அறம் = துறவறம். அது பெரியது. ஏன் என்றால் அதை செய்வது கடினம்.

பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகுதல் ...

ஆற்றின் ஒழுகுதல் என்றால் சிறப்பான முறையில் இல்லறத்தை நடத்திக் கொண்டு செல்வது.

அது எப்படி ஆற்றின் ஒழுகுதல் என்றால் வழியே செல்லுவது என்றுதானே அர்த்தம் ? ஆறு என்றால் வழி என்று தானே பொருள் என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் சொல்கிறார்...

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

இதற்கு பொருள் சொன்ன பரிமேலழகர் ....

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்;

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் = அவன் அதற்குப் புறமாகிய நெறியிற் போய்ப்பெறும் பயன் யாது?

இல்லறத்தில் இருந்து, அதை அற வழியில் செலுத்துபவனுக்கு , துறவறத்தில் என்ன கிடைக்கப் போகிறது ? ஒன்றும் இல்லை.

அது என்ன அற வழியில் இல்லறம் ? ஒரு குடும்பத்தை எப்படி நல்ல வழியில் செலுத்துவது ?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்கை பண்பும் பயனும் அது

என்பார் வள்ளுவர்.

பழிக்கு அஞ்சி, பகுத்து உண்டல் இல் வாழ்வின் அறம் .

இல்லறத்தில் அன்பு இருக்க வேண்டும்.

இல்லறத்தில் அறம் இருக்க வேண்டும்.

இல்லறத்தில் வாழ்பவன் யார் யாரை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று பெரிய பட்டியல் தருகிறார் வள்ளுவர்.  அதை பின் ஒரு நாள் பார்ப்போம்.

இப்போதைக்கு பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்....




1 comment:

  1. இது என்ன, ஒரு நாளைக்கு ஒரு வரிதானா? எஞ்சிய இரண்டு வரிகளுக்கு உரை எப்பொழுது வரும்?

    ReplyDelete