Wednesday, March 23, 2016

இராமாயணம் - அவை அடக்கம் - பிள்ளைகளின் கிறுக்கல்

இராமாயணம் - அவை அடக்கம்  - பிள்ளைகளின் கிறுக்கல்



சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து,  இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள். அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர். அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின்  விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.

அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.

தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.

பாடல்

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 

பொருள்

அறையும் = பல்வேறு அறைகளும் (பூஜை அறை , சமையல் அறை )

ஆடரங்கும் = ஆடும் இடமும்

மடப் பிள்ளைகள் = அறிவில் முதிர்ச்சி இல்லாத பிள்ளைகள்

தறையில் கீறிடின் = தரையில் படம் வரைந்தால்

தச்சரும் = மர  வேலைகளில் வல்ல தச்சரும்

காய்வரோ? = கோபம் கொள்வாரா ? (மாட்டார் )

இறையும் = கொஞ்சம் கூட

ஞானம் இலாத = ஞானம் இல்லாத

என் புன் கவி, = என்னுடைய பிழையான கவிதைகளை

முறையின் = முறைப்படி

நூல் உணர்ந்தாரும் = புத்தகங்களைப் படித்தவர்களும்

முனிவரோ? = கோபிப்பார்களோ ? (மாட்டார்கள் )

அவை அடக்கம் என்பது மேலோட்டமான செய்தி.

அதற்கு கீழே உள்ளது கம்பனின் ஆளுமை.

தன் நூலை யாரும் குறை சொல்லாதபடி ஒரு வேலி அமைக்கிறான் கம்பன்...மிக மிக சாமர்த்தியமாக.

பிள்ளைகளின் படத்தை ஒரு பெரிய பட வல்லுநர் (drawing master ) குறை சொன்னால்  பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்...இந்த வல்லுநர் கொஞ்சம் புத்தி  கழண்டவன் என்றுதானே  நினைப்பார்கள். "ஏதோ சின்ன பிள்ளை வரைஞ்சிருக்கு...அதை பாராட்டிடுப் போகாம பெரிய மேதாவி மாதிரி குறை சொல்ல வந்துட்டார் " அப்படின்னு அந்த வல்லுனரைத்தான் குறை சொல்லுவார்கள்.

அது போல, என் கவியை யாராவது குறை சொன்னால், குறை சொல்பவர்களைத்தன்  உலகம் தூற்றும் என்று சொல்கிறான் கம்பன்.

அதாவது, பேசாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்பது அவனுடைய மறைமுகக் கட்டளை.

எப்படி, கம்பனின் அவை "அடக்கம்"  ?

கம்பனைப் படிக்கும் போது இந்த எழுத்துச் சாதுரியமும் நமக்குள் வரும்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_23.html )



No comments:

Post a Comment