Thursday, April 28, 2016

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.


பாடல் 

வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

நம்மாழ்வாரின் அருமையான பாசுரம்.

அது ஒரு அமைதியான கடற்கரை. எங்கு பார்த்தாலும் வெண் மணல். காதோரம் கவிதை பாடும் கடல் காற்று. சற்று தூரத்தில் , ஒரு அந்த கடலில் வந்து சேருகிறது. அங்கே நிறைய நாணல்களும், கோரை புற்களும் வளர்ந்து இருக்கின்றன. அவற்றில் சில குருகுகள் வாழ்கின்றன. அவை தினமும் இரை தேடி அங்கும் இங்கும் அலையும்.

அங்கே வருகிறாள் தலைவி. அவளுக்கோ அவன் நினைப்பு. அவனை பார்க்க வேண்டும், அவனோடு பேச வேண்டும் , அவனோடு இருக்க வேண்டும் என்று ஆசை. அவன் இருக்கும் இடமோ வேறு இடம். எப்படி போவது. வீட்டில் விட மாட்டார்கள். நிறைய வேலை வேறு இருக்கிறது.

தவிக்கிறாள்.

அங்கே வந்த குருகை தூது விட நினைக்கிறாள்.

ஏய் குருகே, என்னால் தான் அவன் இருக்கும் இடத்துக்கு வர முடியவில்லை. அவனால் இங்கே வர முடியும் அல்லவா. எனவே, நீ போய் என் காதலை அவனுக்குச் சொல்லிவிட்டு வா என்று குருகை தூது அனுப்புகிறாள்.


காதலனுக்கு குருகை தூது விடுவதாக அமைந்த பாசுரம்.

பொருள்


வைகல் = தினமும்.

இந்த வைகல் என்ற வார்த்தையை வைத்து நாலடியாரில் ஒரு இனிமையான பாடல் உண்டு.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


பூங் கழிவாய் = ஆறும் கடலும் சேரும் இடத்திற்கு கழிவாய் என்று பெயர். பூக்கள் நிறைந்த அந்த இடம். ஆறு வரும் வழியில் உள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்களை சுமது வருவதால் அது பூக்கள் நிறைந்த கழிவாய் .

வந்து மேயும் = இங்கேயே இருப்பது இல்ல. இங்கே வந்து மேயும்

குருகினங்காள் = குருகு இனத்தை சேர்ந்த பறவையே

செய்கொள் செந் நெல் உயர் =  செய்த, உற்பத்தி செய்த , கொள் கலங்கள் நிறைந்த நெல் உள்ள

திருவண் வண்டூர் = திருவண்  வண்டூர் என்ற திருத் தலத்தில்

உறையும் = வசிக்கும்

கைகொள் = கையில் கொண்ட

சக்கரத் = சக்கரம்

என் = என்னுடைய

கனி வாய் = கனிந்த வாய். ஆகு பெயராக புன் முறுவலைக் குறிக்கும்

பெருமானைக் கண்டு = பெருமானைக் கண்டு
,
கைகள் கூப்பிச் = கைகளை கூப்பி

சொல்லீர் = சொல்வீர்களாக

வினையாட்டியேன் = வினையால் ஆட்படுத்தப் பட்ட என்

காதன்மையே = காதல் தன்மையை

ஏதோ காதலனுக்கு காதலி அனுப்பிய தூது மாதிரி தான் இருக்கிறது.

நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் ஏதோ சினிமாவுக்கு பாட்டு எழுதுவது மாதிரி எழுதிப் போபவர்கள் அல்ல.

என்ன சொல்ல வருகிறார் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

காலம் காலமாய் மனிதன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறான். இறைவன் இருக்கிறானா இல்லையா என்று கூட இன்னும் அறிந்த பாடில்லை. சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

நிராகரிக்கவும் முடியவில்லை.

நமக்குத்தான் அவனைத் தெரியவில்லை. அவனுக்கு நம்மைத் தெரியும்தானே. அவன் விரும்பினால் தன்னை நமக்கு காட்டலாம்தானே ?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

அவன் நமக்கு அருள் தரலாம் அல்லவா ?

சில மகான்கள், பெரியவர்கள் தோன்றி இறைவனைப் பற்றி சொல்கிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அவர்களிடம் கேட்டால் , அவர்கள் நினைத்தால் இறைவனை காண வேண்டும் என்ற நம் ஆர்வத்தை இறைவனிடம் போய் சொல்ல முடியும் அல்லவா ?

அதைத்தான் ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் கூறுகிறார்.


இறைவனைப் பற்றி ஏதோ கொஞ்சம் அங்கும் இங்கும் படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். (சக்கரம், செங்கனி வாய்). அது முழுமையான வடிவம் இல்ல. யார் நேர்ல பார்த்தது.

குருகு என்பது ஆச்சாரியனுக்கு உவமை.

குருவைப் பற்றினால் இறைவனை அடையலாம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார் அருணகிரி.

அந்த குருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் .

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post.html )

2 comments:

  1. அது என்ன கைகள் கூப்பிச் சொல்வது? ஒரு பக்கம் காதல் இருந்தாலும், கைகள் கூப்பி வணங்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றுகிறது!

    படிக்கும் நமக்கும் புன்முறுவலை வரவழைக்கும் பாடல்.

    நன்றி.

    ReplyDelete
  2. மேலே குறிப்பிட்ட நாலடியார் பாடல் நன்றாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். அதற்கு உரை எழுதவும். நன்றி.

    ReplyDelete