Thursday, May 12, 2016

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின்

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின் 


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

நாம் பலமுறை கேட்ட பாடல் தான். திருவிளையாடல் படத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

 இதில் என்ன புதுமை இருக்கிறது தெரிந்து கொள்ள ?

நம்மிடம் இனிது எது என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

-நல்ல சுவையான உணவு
- காதுக்கு இனிய இசை
- நல்ல சினிமா, நாடகம், தொலைகாட் சி தொடர்
- கணவன்/மனைவியோடு இருப்பது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது

இப்படி அடுக்கிக் கொண்டே போவோம்.

இனிமையை விட்டு விட்டு, ரொம்ப துன்பமானது, கடினமானது எது என்று கேட்டால்  தனிமை கொடுமை என்று சொல்லுவோம்.

அது கொடுமை என்பதால் தானே சிறையில் போடுகிறார்கள். ரொம்ப பெரிய  தவறு செய்தால் தனிமைச் சிறை என்றே இருக்கிறது. அதில் போட்டு விடுவார்கள்.

அவ்வை சொல்கிறாள்

"இனிது இனிது ஏகாந்தம் இனிது" 

ஏகாந்தம் என்றால் என்ன ?

ஏக + அந்தம்.

அந்தம் என்றால் முடிவு. ஏகம் என்றால் ஒன்று. ஒன்றான முடிவு. அல்லது ஒன்றில் முடிவது. ஒன்றில் இலயித்து விடுவது. அதில் கரைந்து போவது.

வாழ்க்கையின் பல சிக்கலகளுக்கு காரணம் மனம் ஒன்றாதது தான். ஒன்றிருக்கும் போது இன்னொன்றுக்குத் தாவுவது.

படிக்கும் போது தொலைக் காட்சி
அலுவலத்தில் இருந்தால் வீட்டின் எண்ணம்.
வீட்டில் இருந்தால் அலுவகலத்தின் எண்ணம்
இப்படி மனம் எதிலும் ஒன்றாமல் அலை பாய்ந்து கிடப்பதால் எதிலும்  நாம் சாதிக்க முடிவதில்லை.

ஏகாந்தம் இனிது.

சரி, அது தான் இனிமையா ? அதை விட இனிமையானது ஏதாவது இருக்கிறதா என்றால் ,

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

என்றார்.

கடவுளைத் தொழுதால் என்று சொல்லவில்லை. கடவுள் என்று சொன்னால் , உடனே எந்தக் கடவுள் என்று கேட்போம். அந்த சிக்கலைத் தவிர்த்து  அவ்வையார் "ஆதியைத் தொழுதல்" என்றார். 

எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆதி என்று ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை ஏன் தொழ வேண்டும்  ? அதை விட இனியது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், 


"அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்"

ஆதியைத் தொழுவதை விட இனியது அறிவுடயவர்களைச் சேர்வது.


இதைப் புரிந்து கொள்வது சற்று கடினம். அறிவுடையவர்களை சேர்வது என்ன அவ்வளவு இனிமையான செயலா என்றால் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் இனிமை தெரியும்.

அறிவுடையவர்கள் நம் வாழ்க்கையின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். நம்மை மிக மிக உயரத்தில் கொண்டு சேர்க்கும் வலிமை பெற்றவர்கள். நமது பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு சொல்பவர்கள். அவர்களோடு சில நேரம் இருந்து விட்டு வந்தாலே, நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், ஒரு உற்சாகமும், வாழ்வில் ஏதாவது  சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் தோன்றும்.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எத்தனை அறிவுடையவர்களோடு தொடர்பு வைத்து இருக்கிறீர்கள் என்று. இல்லை என்றால், இன்றிலிருந்து தொடங்குங்கள். தேடிப்  பிடியுங்கள். அப்புறம் பாருங்கள்  உங்கள் வாழ்வின் திசை போகும் போக்கை. எங்கோ உயரத்திற்கு போய் விடுவீர்கள்.

சரி, அதை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா ?


அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே


நான் எங்கே இருக்கிறேன் , இந்த அறிவில் சிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களோடு நான் எப்படி சேர்வது ? அவர்கள் என்னை தங்களோடு சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறதா ?

நீங்கள் சேரக் கூட வேண்டாம் ...அறிவுள்ளவர்களை பார்த்தால் கூட போதும். நேரில் கூட பார்க்க வேண்டாம், கனவில் கண்டால் கூடப் போதும்...

பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தாள் ஆண்டாள். அவள் கனவிலும் அவன் வந்தான். 

"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் " என்றாள் . 

கனவு கண்டவள் , நிஜமாகவே கைப் பிடித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

கனவு காணுங்கள். கனவு மெய்படும்.

சரி, இந்தப் பாடலை சற்று வேறு விதமாகப்  பார்ப்போம். 

பாடலை அடியில் இருந்து மேல் நோக்கிப் படிப்போம். 

முதலில் அறிவுடயவர்களை கனவில் காணுதல், பின் அவர்களை நேரில் காணுதல், பின் அவர்களோடு சேர்தல், சேர்ந்த பின் ஆதியைத் தொழுதல் , அதையும் கடந்து பின் ஏகாந்தமாய் இருத்தல்.

ஆதியோடு ஒன்றாகி விடுதல். ஏக அந்தம்.  முடிவில் எல்லாம் ஒன்றாக இருத்தல். 

ஏக போகமாய், நீயும் நானுமாய் , இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் என்று அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். 


இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ்)

அறிவுடையவர்களை தேடிக் கண்டு பிடியுங்கள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


(மேலும் வாசிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post.html )


2 comments:

  1. மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி. அடியேன் இராமநாதன்

    ReplyDelete
  2. I cried after reading the explanation because recently I dreamed my intelligent dead father .However I was so happy for days to think about the dream of my father.

    ReplyDelete