Tuesday, August 30, 2016

இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 2

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 2



இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி

தாய் என உயிர்க்கு நல்கி என்ற வரியின் விளக்கத்தை முந்தைய blog இல் பார்த்தோம்.

மேலும் சிந்திப்போம்.


தருமமும், தகவும், சால்பும், நீ என நின்ற நம்பி!

மூன்று சொற்களால் இராமனை போற்றுகிறான் வாலி.

தருமம், தகவு, சால்பு

தருமம் என்றால் என்ன என்று தெரிகிறது.

அது என்ன தகவு, சால்பு ?

தகவு என்றால் நடுவு நிலைமை.  தர்மத்தின் வழி செல்பவர்கள் கூட சில சமயம் பாசம் அல்லது அறியாமை காரணமாக நடுவு நிலைமை பிறழ்ந்து விடலாம்.  இராமன் நடு நிலை தவறாதவன் என்று வாலி கூறுகிறான்.

சால்பு என்றால் சான்றோர் இயல்பு. சான்றோன் என்றால் கல்வி , கேள்வி மற்றும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.

இதை விட இராமன் செய்தது சரி தான் என்று சொல்ல வேறு என்ன சொல்ல முடியும் ?

இந்த மூன்று குணங்களாகவே இராமன் இருந்தான் என்று வாலி சொல்கிறான் என்றால் என்ன நிகழ்ந்தது ? ஏதோ ஒன்று வாலிக்கு தெரிய வந்திருக்கிறது. இல்லை என்றால், மறைந்து நின்று போட்ட அம்பு மார்பில் துளைக்க, இரத்தம் பெருக்கெடுத்து ஓட , உயிர் போகும் தருணத்தில் , அப்படி அம்பு போட்டவனை வாலி ஏன் புகழ வேண்டும் ?


நெறியினின் நோக்கும் நேர்மை

சில சமயம் பிள்ளைகள் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும், அல்லது கை பேசியில் யாருடனாவது chat பண்ணிக் கொண்டிருக்கும். அப்பா, பிள்ளையை அதட்டி, அதை பிடுங்கி வைத்து, படி என்று அதட்டுவார். கேட்கவில்லை என்றால் திட்டுவார், தேவைப் பட்டால் இரண்டு அடி கூட தருவார்.

பிள்ளை அழும். சந்தோஷமாக இருந்த பிள்ளையை துன்பப் படுத்தி அழ வைப்பதா பெற்றோரின் நோக்கம் ?

இப்போது அழுதாலும் பரவாயில்லை, பிள்ளை பின்னாளில் நன்றாக இருப்பான் என்ற தொலை நோக்கோடு அவர் அப்படி செய்கிறார்.

பிள்ளை , தகப்பனை, ஒரு வில்லனை பார்ப்பது போலத் தான் பார்க்கும்.

அதற்காக , ஒரு தகப்பன் மிரட்டி, திட்டி, அடித்து பிள்ளையை நெறி படுத்தாமல் இருந்து விட முடியுமா ?

இராமன் செய்தது வேதம் சாஸ்திரம் போன்றவற்றில் சொல்லப் பட்ட வழியின் பால் நேர்மையாக சென்றது.

நெறி என்றால் உயர்த்த வழி.

நோக்குதல் , தொலை நோக்கு. இராமன் நினைத்து இருந்தால் வாலியின் உதவி பெற்று சீதையை எளிதாக மீட்டிருக்க முடியும். அது சுய இலாபத்துக்காக நேர்மையை கை விட்டது மாதிரி ஆகி இருக்கும்.

இராமன் செய்தது தொலை நோக்குப் பார்வை.

அதிலும் ஒரு நேர்மையை கடை பிடித்தான் என்றான் வாலி.


நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?

நாய் போன்றவன் நான். எதிலும் குற்றம் காண்பதே என் வேலை. குற்றமற்று பார்க்கும் பார்வை என்னிடம் இல்லை என்கிறான் வாலி. 

கல்வி கேள்விகளில் சிறந்தவன் வாலி.பெரிய சிவ பக்தன். சிறந்த வீரன். 

பின் ஏன் தன்னை நாய் என்று சொல்லிக் கொள்கிறான் ?

நாயிடம் உள்ள ஒரு கெட்ட குணம் என்ன என்றால், எவ்வளவு தான் அதற்கு உயர்ந்த உணவு அளித்து , வீட்டில் சௌகரியமாக வைத்து இருந்தாலும், சில சமயம் அது வெளியில் போகும்போது தெருவில் கிடக்கும்  அசிங்கத்தை ருசி பார்க்கும். அது   நாயின் பிறவிக் குணம். 

எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும், சில சமயம் புத்தி கீழ் நோக்கிப் போவது மனிதர்களின் இயல்பு. 

அதையே வாலி சொல்கிறான். 

தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

தீயவைகளை பொறுத்துக் கொள்வாய் என்று இராமனிடம் வாலி வேண்டுகிறான். 

வாலி என்ன தீமை செய்து விட்டான் ? அவனே "நான் செய்த தீமைகளை பொறுத்துக் கொள் " என்று சொல்லும் அளவுக்கு என்ன தீமை  செய்து விட்டான் ?

ஒரே ஒரு தீமை தான், இராமனை நிற்க வைத்து கேள்வி கேட்டது. 

அரசு அவனுடையதுதான். 

மாயாவியோடு சண்டை போட்டு குகைக்குள் போனபோது , காவலுக்கு நின்ற  சுக்ரீவன், குகையை மூடி விட்டு தானே அரசனாகிவிட்டான். 

குகையில் இருந்து வெளியே வந்த வாலி கோபம் கொண்டது இயற்கை. 

அண்ணன் தம்பி உறவை விடுங்கள். ஒரு அரசன் ஆணையை மீறியது மட்டும் அல்ல, அவனை சிறை வைத்து விட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டால் , எந்த அரசனுக்குத் தான் கோபம் வராது ?

வாலிக்கு சுக்ரீவன் மேல் கோபம் வந்தது. அவனை அடித்து விரட்டினான். 

அது அல்ல அவன் செய்த தீமை. 

இராமன் செய்தது சரி தான் என்று பின்னர் உணர்ந்த வாலி, அதற்கு முன்னால் , உண்மை தெரியாமல் இராமனை கேள்வி கேட்டதற்காக, இராமனை தரக் குறைவாக பேசிய தீமையை குறித்து கூறுகிறான். 

அடுத்து நடந்தது தான் வாலி வதையின் மிக மிக முக்கியமான நிகழ்வு.

அது என்ன நிகழ்வு ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/08/2.html




No comments:

Post a Comment