Wednesday, August 3, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்


நமக்கு ஏன் ஏமாற்றங்கள் வருகின்றன ?

எவ்வளவோ முயற்சி செய்தேன், கடைசியில் கை நழுவித் போய் விட்டது என்று வருந்தியர்கள் எத்தனை பேர்.

காரணம் என்ன ?

எவ்வளவு முயற்சி வேண்டும் எந்தப்பதில் தப்பு கணக்கு போட்டு, கடைசியில் ஏமாந்து போனவர்கள் ஏராளம்.

எந்த ஒரு வேலையை செய்வதானாலும் , அந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு முயற்சி தேவை என்று தெளிவாக ஆராய்ந்து பின் செயலில் இறங்க விடும். இல்லை என்றால் ஏமாற்றமும் விரக்தியும் தான் மிஞ்சும்.

அவன் செய்தான், இவன் செய்தான் என்று நாமும் இறங்கி விடக் கூடாது.

நமது திறமை என்ன, நமது வலிமை என்ன, நம்மால் என்ன ஆகும் என்று அறிந்து பின் செயலின் இறங்க வேண்டும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டு அவதிப் படக் கூடாது.

நிறைய பேர் தெரியாமல் தொழில் தொடங்கி நட்டப் பட்டிருக்கிறார்கள். தெரியாமல் ஏதாவது ஒரு துறையில் இறங்கி, கல்லூரியில் படிக்க முடியாமல் திணறியவர்கள் ஏராளம்.

அனுமன் கடலை தாண்ட தாவிக் குதிக்கிறான்.

ஒரு காலத்தில் அகத்திய மா முனிவர் இந்த கடல் அனைத்தையும் தன்  வயிற்றுக்குள் அடக்கி பின் உமிழ்ந்தவர். அனுமனை பார்த்து தேவர்கள்  கூறினார்கள், "அகத்தியர் உண்டு உமிழ்ந்த கடல் தானே, சின்னாதாக இருக்கும் என்று எண்ணாதே" என்று அறிவுரை பகர்ந்தார். நல்லது என்று அனுமனும் கேட்டுக் கொண்டான்.


பாடல்

‘குறு முனி குடித்த வேலை
    குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும்
    விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை
    அல்லை; நீ சேறி! ‘என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்;
    ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.


பொருள் 

‘குறு முனி =  உயரம் குறைந்த முனிவரான அகத்தியர்

குடித்த வேலை = குடித்த கடல்

குப்புறும் கொள்கைத்து ஆதல் = பாய்ந்து கடக்க வேண்டி இருத்தல்

வெறுவிது = சிறியது, மதிக்கதாகதது

விசயம் வைகும் = வெற்றி கொண்ட

விலங்கல் = மலை போன்ற

தோள் = தோள்களில்

அலங்கல் = மாலை அனிதா

வீர! = வீரனே

சிறிது இது என்று = சின்னது இது என்று

இகழல் பாலையல்லை  = அற்பமாக நினைக்காதே

நீ சேறி! = நீ விரைந்து செல்க

 ‘என்னா = என்று

உறுவலித்  = வலிமை உடைய

துணைவர் சொன்னார் = நண்பர்கள் சொன்னார்கள்

ஒருப்பட்டான் = ஏற்றுக் கொண்டான்

பொருப்பை = மலையை

ஒப்பான்  = போன்ற உடல் உடைய அனுமன்


எந்த வேலையையும் அற்பமாக நினைக்காமல், அதற்கு வேண்டிய முயற்சி யை அளித்து அந்த செயலில் வெற்றி பெற வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_3.html


No comments:

Post a Comment