Wednesday, August 31, 2016

இராமாயணம் - வாலி வதம் - ஆவி போம் வேலை வாய்

இராமாயணம் - வாலி வதம்  - ஆவி போம் வேலை வாய்


இராம பாணத்தால் அடிபட்டு இறக்கும் தருவாயில் உள்ள வாலி தன் நிலை உணர்ந்து இராமனிடம் சில செய்திகள் கூறுகிறான்.

ஏவிய கூறிய அம்பை என் மேல் எய்து , நாய் போன்ற கீழானவனான எனக்கு ஆவி போகும் வேளையில் அறிவு தந்து அருளினாய். மூவர் நீ, முதல்வன் நீ, அனைத்தும் நீ என்று போற்றினான்.

பாடல்

‘ஏவு கூர் வாளியால்
    எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலை வாய்,
    அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘

பொருள் 

‘ஏவு கூர் = ஏவும் கூறிய

 வாளியால் = அம்பினால்

எய்து = என் மேல் எய்து

நாய் அடியனேன் = நாய் போன்ற அடியவனான எனக்கு

ஆவி போம் வேலை வாய் = ஆவி போகின்ற வேலையில் (?)

அறிவு தந்து அருளினாய்; = அறிவும் அருளும் தந்தாய்

மூவர் நீ! முதல்வன் நீ! =  மூவர் நீ! முதல்வன் நீ!

முற்றும் நீ! மற்றும் நீ! =  முற்றும் நீ! மற்றும் நீ!

பாவம் நீ! தருமம் நீ! =  பாவம் நீ! தருமம் நீ!

பகையும் நீ! உறவும் நீ! ‘ = பகையும் நீ! உறவும் நீ! ‘

வாலி பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு இந்தப் பாடல்.


நாய் அடியனேன் - நாய்க்கு உள்ள ஒரு நல்ல குணம் என்ன என்றால், எஜமான் என்ன அடித்தாலும் அவன் காலடியிலேயே கிடக்கும் . அவன் காலையே சுற்றி சுற்றி வரும். அது போல, இராமா, நீ எனக்கு துன்பம் தந்தாலும் நான் உன்னையே சுற்றி சுற்றி வருவேன் என்கிறான்.



ஆவி போம் வேலை வாய் - ஆவி போகின்ற நேரத்தில் என்று சொல்வதென்றால்

ஆவி போம் வேளை  வாய் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கே, "வேலை" என்று சொல்கிறான் கம்பன். மிக மிக கவனமாக ஒரு சொல்லை  தேர்ந்து எடுத்துப் போடுகிறான்.

வேளைக்கும் , வேலைக்கும் என்ன வித்தியாசம்.

ஆவிக்கு உடலினுள் வருவதும் பின் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலுக்குப் போவதும் தான் வேலை.

இராமன் அம்பு எய்து கொல்லாவிட்டாலும் வாலியின் உயிர் ஒரு நாள் போகத்தான் போகிறது. உயிரின் வேலை போவது.  வேறு விதமாக  போயிருந்தால் இராம தரிசனம் கிடைத்திருக்காது. வாலி ஞானம் பெற்று , பின் வீடு பேறும் அடைந்திருக்க மாட்டான்.


அறிவு தந்து அருளினாய்...அறிவு தந்தாய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம்.  அறிவு தந்து அருளினாய் என்கிறான் வாலி. வாலியின் மேல் உள்ள  அன்பால் , கருணையால் அவனுக்கு அறிவு தந்தான் இராமன் என்பது  வாலியின் வாக்கு. 

அறிவு தந்ததால் என்ன நிகழ்ந்தது ?


இதற்கு முன்னால் அறிவு இல்லாதவன் அல்ல வாலி. வேதங்களை கற்று உணர்ந்தவன்  வாலி. 

அது கல்வி அறிவு. 

படித்து வருவது. 

இராமன் அவனுக்குத் தந்தது மெய் அறிவு.

அந்த மெய்யறிவு பெட்ற வாலி என்ன ஆனான் ?

மிகப் பெரிய ஞானிகளுக்குக்  கூட அறிய முடியாத பரம் பொருளின் தன்மையை அறிந்தான். 

மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘


பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆன மூவரும் நீ.

அவர்களுக்கு முன்னால் தோன்றியவனும் நீ. 

பாவம், தர்மம், பகை , உறவு எல்லாம் நம் ஆசாபாசங்களை பொறுத்தது. 

ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றுதான். அவன் யாரை பகைக்க முடியும் ? யாரோடு உறவு கொள்ள முடியும். 

ஞானிகளுக்கும் எட்டாத அந்த பார்வை பெற்றான் வாலி. 


ஒருவன்மு கமூடி அணிந்து கொண்டு , மயக்கமாய் கிடைக்கும் இன்னொருவனை கத்தியால் குத்தி  கிழிப்பதைப் பார்த்தால் என்ன தோன்றும் ?  பாதகா , இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் , மயக்கத்தில் இருக்கும்  ஒருவனை இப்படியா கத்தியால் குத்துவது என்று நம் மனம் பதறும். 

அதுவே ஒரு மருத்துவர் இரண சிகிச்சை செய்கிறார் என்றால், மயங்கி கிடக்கும் நோயாளி , அறுவை சிகிச்சைக்குப் பின் எழுந்து சுகம் அடைந்து , அந்த மருத்துவருக்கு நன்றி சொல்லுவான் அல்லவா.

காரியம் அல்ல முக்கியம். 

காரியத்தால் விளைந்தது என்ன என்று பார்க்க வேண்டும். 

காரியம் - மறைந்து இருந்து அம்பு போட்டது. 

விளைந்தது - வாலி மோட்சம். வாலி மெய்யறிவு பெற்றது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ 
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே  

என்று ஆழ்வார் சாதித்தது போல, வாலிக்கு வலிதான். 

அந்த வலியில் வழி பிறந்தது. 

இராமன் செய்தது சரியா தவறா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_31.html


2 comments:

  1. இது ஒன்றுமே புரியவில்லை. ஒருவன் கத்தியால் வெட்டினால் அது கொலை. ஆனால் ஒருவன் கத்தியால் வெட்டும்போது, "அவர் டாக்டராகத்தான் இருப்பார், அதனாலே அவர் வெட்டினால் பரவாக இல்லை" என்று சொல்வது போல இருக்கிறது, "இராமன் இறைவன், அதனால் அவர் செய்தது சரியாகத்தான் இருக்கும்" என்று சொல்வது!

    ReplyDelete
  2. இராமாயணம் சாதாரண மக்களுக்கு தர்மம், நீதி, நேர்மை பற்றிய பாடங்களை சொல்லும் நூல் என்றால், இந்த வாலி வதை என்பதன் மூலம் சொல்லும் பாடம் என்ன? "இராமன்னு ஒருத்தர் இருக்காரு, அவர் செஞ்சா எல்லாமே சரியாகத்தான் இருக்கும்" என்பதா?!?!?

    ReplyDelete