Monday, September 26, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


எந்த பிறவிக்கும் ஒரு அர்த்தம் , நோக்கம் வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த நோக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

நாவுக்கரசருக்கு இறைவன் திருவடி அடைவதுதான் நோக்கம்.  அவனை நினைக்க வேண்டும், அவனைப் பற்றி பேச வேண்டும். அப்படி பேசாத நாள் எல்லாம் , பிறவாத நாள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
                   சூழ் வலஞ்சுழியும் கருதினானை, 
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
         ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; 
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
                  எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- 
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
                          எல்லாம் பிறவா நாளே.

பொருள்

கற்றானை = எல்லாம் அறிந்தவனை

கங்கை வார்சடையான் தன்னை = கங்கையை தலையில் கொண்டவனை

காவிரி சூழ் = காவிரி ஆறு சூழும்

வலஞ்சுழியும் = திருவலம் சுழி என்ற திருத்தலத்தில்

கருதினானை = இருப்பவனை

அற்றார்க்கும் = செல்வம் அற்ற ஏழைகளுக்கும்

அலந்தார்க்கும் = கலங்கியவர்களுக்கும்

அருள் செய்வானை = அருள் செய்வானை

ஆரூரும் புகுவானை = திருவாவூரிலும் இருப்பவனை

அறிந்தோம் அன்றே = அன்றே அறிந்து கொண்டோம்

மற்று ஆரும்  = வேறு யாரும்

தன் ஒப்பார் இல்லாதானை = தனக்கு ஒப்பு இல்லாதவனை

வானவர்கள் = தேவர்கள்

எப்பொழுதும் = எப்போதும்

வணங்கி ஏத்தப் = வணங்கு துதிக்க

பெற்றானை = பெற்றவனை

பெரும்பற்றப்புலியூரானை = புலியூரில் இருப்பவனை

பேசாத நாள் எல்லாம் = பேசாத நாள் எல்லாம்

பிறவா நாளே = பிறக்காத நாளே

வறுமை ஒரு துன்பம். 

கொடியது கேட்கின் நெடு வடிவேலோய் 
கொடிது கொடிது வறுமை கொடிது என்பாள் அவ்வை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார் வள்ளுவர். 

பொருள் இருந்தாலும், வாழ்வில் சில சமயம் கலக்கம் வரும். 

உறவுகள் பிரிவதால் , பொருள் பிரிவதால், நோய் வருவதால், முதுமை வருவதால், எதிர் காலம் பற்றிய பயத்தால்  ....இப்படி பலப் பல காரணங்களினால் கலக்கம் வரும். 

அப்படி கலங்கியவர்களுக்கும் அருள் தருபவன் அவன். 

அதெல்லாம் சரி, அருள் தருவான் என்பது என்ன நிச்சயம் ? அப்படி யாருக்காவது அருள் செய்திருக்கிறானா என்று கேட்டால் , அப்பரடிகள்  கூறுகிறார் 

ஆமாம், செய்திருக்கிறான் , அதை "அறிந்தோம் அன்றே " என்று கூறுகிறார். நான் அறிந்தேன் என்று சாட்சி சொல்கிறார். 

அறிந்தோம் என்ற பன்மையால், தான் ஒருவர் மட்டும் அல்ல, தன்னைப் போல பலர் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். 

அவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

உடல் பிறந்து விடும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. 

அறிவு பெற்று, தான் என்பது அறிந்து, உண்மையை அறியும் நாள் மீண்டும்  ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அதுவரை , அறிவில்லா இந்த உடல் சும்மா  அலைந்து கொண்டிருக்கும். ஒரு விலங்கினைப் போல. 

என்று இவற்றை அறிகிறோமோ, அன்று தான் உண்மையான பிறந்த நாள். 

அதுவரை பிறவா நாளே 



No comments:

Post a Comment